என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 49,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம்கொண்ட வைகை அணை நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததால் கடந்த மாதம் 27ம் தேதி அதிகபட்ச அளவாக 70.24 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் பாசனத்திற்காக அக்.27ம் தேதி முதல் 31ம் தேதி வரை 624 மி.கனஅடி நீர் திறக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக நவ.8ம் தேதி முதல் 772 மி.கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 68.21 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1653 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 115 கனஅடியும், மதுரை, ஆண்டிபட்டி, சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக 69 கனஅடி, மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு 1000 கனஅடி என மொத்தம் 1219 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5372 மி.கனஅடியாக உள்ளது.
மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு இன்று முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு 428 மி.கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். 1000 கனஅடி நீர் 7 சிறிய மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன்மூலம் 49,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்மாய்களும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.65 அடியாக உள்ளது. வரத்து 617 கனஅடி, திறப்பு 1778 கனஅடி, இருப்பு 6030 மி.கனஅடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் தொடர்ந்து நீடிப்பதால் அணைக்கு வரும் 15 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கனஅடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாகவும், சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 49.50 அடியாகவும் உள்ளது.
- முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாகை மாவட்டம் வாழைக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 37). இவர் நாகை அடுத்த திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 ஆண் மகன் உள்ளார்.
கடந்த ஆண்டு எட்டுக்குடி ஊராட்சி வல்லம் வருவாய் வி.ஏ.ஓ.வாக ராஜாராமன் பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இருந்தாலும் சில மாதங்கள் ராஜாராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியை தொடர்ந்தார்.
இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நேற்று ராஜாராமன் தனது மோட்டார் சைக்கிளில் நாகைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மாலையில் மோட்டார் சைக்கிளில் வாழைக்கரையில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.
ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் ராஜாராமனை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை நாகை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் உண்மை நிலவரம் தெரியவரும்.
- டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 10ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.
- சென்னை ஆட்சியர் தரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை நிரப்புகிறது.
இதற்காக ஆண்டுதோறும் பல்வேறு நிலை தேர்வுகளும் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணிகளில் அமர லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதி வருகின்றனர.
இந்நிலையில், சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 10ம் தேதி முதல் தொடங்கப்படுவதாக சென்னை ஆட்சியர் தரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ, 4 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு 10ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
- பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதைத்தான் அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற செய்தி எப்படியாவது செவியில் எட்டிவிடாதா? என்கிற காத்திருப்பில் விஷமப் பிரசாரத்தை நாள்தோறும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் எடப்பாடியும் இன்னும் சில எதிர்க் கட்சிகளும்!
ஒரு குற்றம் நடந்தவுடனே அதை வைத்து எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று அற்பப் புத்தியோடு செயல்பட்டுவரும் எதிர்க்கட்சிகளின் அரைவேக்காட்டுத்தனத்தைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது கோவை நிகழ்வு.
கோவை சாலையில் நடந்து சென்ற பெண் காரில் கடத்தப்படுவதாகவும், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் மாயமாகி உள்ளதாகவும் அதனால் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்று உண்மை நிலை தெரிவதற்கு முன்பே முந்திரிக் கொட்டையாக வந்து அயோக்கியத்தனமான அறிக்கையை வெளியிட்டார் 'பச்சைப் பொய்' பழனிசாமி. கோவை நிகழ்வில் காவல்துறை தீவிரமான விசாரணையை மேற்கொண்டது. அந்தச் சம்பவம் குடும்பத் தகராறில் ஏற்பட்டது என தெரிய வந்தது. "என்னை யாரும் கடத்தவில்லை" என அந்தப் பெண் வீடியோ மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இதே போல நேற்றைய முன்தினம் இரவு காணாமல் போன கண்ணகி நகர் மாணவியைத் தனிப்படை அமைத்து காலை 6.30 மணிக்கே காவல்துறை மீட்டு வீட்டில் ஒப்படைத்துவிட்டது. உண்மைகள் இப்படியிருக்கத் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். எடப்பாடி பழனிசாமி வழியில் அன்புமணி ராமதாஸ், நயினார் நாகேந்திரன் போன்றவர்களும் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதைத்தான் அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.
திமுக அரசுக்கு எந்த வகையிலாவது களங்கம் கற்பிக்கலாம் என நினைத்து இதுபோன்ற அவதூறு பிரசாரத்தை மேற்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் முகமூடி ஒவ்வொரு நாளும் மக்களிடம் கிழிபட்டுக் கொண்டிருக்கிறது. பெண்களின் நலனையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயலாற்றிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு அவர்களது பாதுகாப்பில் எந்தச் சமரசத்துக்கும் இடம்கொடுக்காது. அது திரும்பத் திரும்ப நிரூபணம் ஆகிக் கொண்டேதான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
- கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,270-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90,160 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு தள்ளியது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. கடந்த மாதம் 22-ந்தேதி சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது.
அதன் தொடர்ச்சியாக 28-ந்தேதி சவரனுக்கு ரூ.2,200-ம் சரிந்தது. இப்படியாக விலை குறைந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருக்கிறது.
நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்வை சந்தித்தது. காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்தது. பிற்பகலிலும் இதேபோல் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் அதிகரித்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 320-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 560-க் கும் விற்பனை ஆனது. இதனை தொடர்ந்து நேற்று விலை சற்று குறைந்தது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,270-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90,160 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,400 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 165 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
07-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,160
06-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,560
05-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,440
04-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,000
03-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,800
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
07-11-2025- ஒரு கிராம் ரூ.165
06-11-2025- ஒரு கிராம் ரூ.165
05-11-2025- ஒரு கிராம் ரூ.163
04-11-2025- ஒரு கிராம் ரூ.165
03-11-2025- ஒரு கிராம் ரூ.168
02-11-2025- ஒரு கிராம் ரூ.166
- அமைச்சர்கள், மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
- மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதை கண்டித்தும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 90 நாட்களுக்கு மேலாக ரிப்பன் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கெனவே அமைச்சர்கள், மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல் துறையினரால் கடந்த ஆகஸ்ட் 13-ந்தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து சென்னையில் அவ்வப்போது வெவ்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பின்னர் அவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுவார்கள்.
கடந்த 5-ந்தேதி மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடல் அலையில் இறங்கி கையில் பதாகைகளை ஏந்தி ஆபத்தான வகையில் தங்களுடைய போராட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தது.
- புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
சென்னை:
கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழித்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு செல்லும் நிதியுதவியை தடுத்தல், முறையான மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு, மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தது.
இதன்படி, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு, புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்காக பொதுமக்கள் சந்தித்த துயரங்கள் ஏராளம். மணிகணக்கில் ஏ.டி.எம்.எந்திரங்களின் முன்பும், வங்கிகளின் முன்பும் நீண்ட வரிசையில் காத்து நின்ற சோகச்சுவடு நடைபெற்று இன்றுடன் (சனிக்கிழமை) 9 ஆண்டுகள் ஆகிறது.
பணமதிப்பு இழப்பு செய்யப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை இன்னும் சிலர் கைவசம் வைத்திருப்பதாக அவ்வப்போது செய்திகள் வருவதை பார்க்கமுடிகிறது. வீடுகளில் எப்போதோ சேமிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்ட பணம், காலாவதியான பிறகு கத்தை, கத்தையாக கண்டுபிடிக்கப்படுகிறது.
இதை மாற்றி தங்களுடைய அவசர தேவைக்காக பயன்படுத்தமுடியாமல் திணறி வருகின்றனர். ஒரு சிலர் அவற்றை காட்சி பொருளாக வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். மாற்ற முடியாமல் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்களுக்கு இது ஆறுதல் கொடுத்தது.
இதையடுத்து இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த தகவல் தவறானது. ரிசர்வ் வங்கி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றம் செய்வது தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. நிதி ஒழுங்குமுறைகள் மற்றும் பணம் தொடர்பான அறிவிப்புகளுக்கு ரிசர்வ் வங்கியின் இணையதளம் மட்டுமே அதிகாரப்பூர்வமானது" என்று கூறப்பட்டுள்ளது.
- ஒரு மீன் 22 கிலோ, மற்றொரு மீன் 24 கிலோ எடையுடன் இருந்தன.
- கூறல் மீனை உணவுக்காக பயன்படுத்துவது கிடையாது.
ராமேசுவரம்:
ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 600-க்கும் அதிகமான மீனவர்கள் தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடாவுக்கு மீன்பிடிக்க சென்று இருந்தனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை சீலா, மாவுலா, பாறை, விளை உள்ளிட்ட பல வகையான மீன்களுடன் கரை திரும்பினார்கள்.
இதில் ஒரு விசைப்படகு மீனவர்கள் வலையில் 2 பெரிய கூறல் மீன்கள் சிக்கி இருந்தன. இதில் ஒரு மீன் 22 கிலோ, மற்றொரு மீன் 24 கிலோ எடையுடன் இருந்தன.
இந்த 2 மீன்களும் கிலோ ரூ.3,600 வீதம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்திற்கு விலை போனதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி மீனவர்கள் கூறும் போது, "கூறல் மீனை உணவுக்காக பயன்படுத்துவது கிடையாது. இந்த மீனின் வயிற்றுப்பகுதியில் உள்ள ஒருவித பாகமானது மருத்துவ குணம் கொண்டது. விலை உயர்ந்த சூப் தயாரிக்கவும் பயன்படுகிறது" என தெரிவித்தனர்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு.
சென்னை:
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
- கடந்த 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
- விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு ஸ்ரீகாந்த் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.
சென்னை:
போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமீனில் உள்ள அவர்கள் இருவர் மீதும் முறைகேடான பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
அவர்களை கடந்த 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு நடிகர் ஸ்ரீகாந்த் சார்பில் அமலாக்கத் துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் நடிகர் கிருஷ்ணா அமலாக்கத் துறையின் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரத்துக்கு மேல் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நவம்பர் 11ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் ஸ்ரீகாந்துக்கு 2-வது முறையாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த சம்மனை ஏற்று நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு உண்டான ஜிஎஸ்டி வரியை அரசே செலுத்தும் என்று அரசாணை.
- இதுவரை ஜிஎஸ்டி வரிக்கான நிதியை தமிழக அரசு விடுவிக்கவில்லை என செய்தி வருகின்றன.
எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு உண்டான ஜிஎஸ்டி வரியை அரசே செலுத்தும் என்று அரசாணை எண். 23, 15.9.2025 அன்று வெளியிடப்பட்ட பின்னும், இதுவரை ஜிஎஸ்டி வரிக்கான நிதியை தமிழக அரசு விடுவிக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு, முடிவுற்ற பணிகளுக்கு உண்டான நிதியை மாவட்ட ஆட்சியர்கள் விடுவிக்காமல் சிரமப்படுகின்றனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை கூட விடுவிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம்?
எனவே, உடனடியாக தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்கும்படி பொம்மை முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
- ஜெயலலிதா என்ன சொல்வாரோ அதை மட்டும்தான் பேசி இருக்கிறேன்.
- நான் பதில் கூற வேண்டும் என வைகோ விரும்பினால் அதற்கு பதில் கூறுவேன்.
2011-ம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் மதிமுக-வுக்கு 12 இடங்கள் தான் தருவோம் என கூறினார்கள். ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
நான் அதிமுக கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை என ஜெயலலிதாவிடம் கூறியிருக்கிறார்கள். கூட்டணிக்கு மதிமுக வர தயாராகவில்லை என ஜெயலலிதாவிடம் தவறாக கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
ஜெயலலிதா 15 தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருந்தது பின்னர்தான் எனக்கு தெரியவந்தது. அப்போது ஓ.பி.எஸ். செய்த தவறுக்காகத்தான் அதன் பலனை தற்போது அனுபவித்து கொண்டு இருக்கிறார் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக ஓ. பன்னீர் செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஓ. பன்னீர் செல்வம் "ஜெயலலிதா என்ன சொல்வாரோ அதை மட்டும்தான் பேசி இருக்கிறேன். நான் பதில் கூற வேண்டும் என வைகோ விரும்பினால் அதற்கு பதில் கூறுவேன். வை.கோ.வின் மனம் புண்படும் என்பதால் அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதை பேசுவது ஏன்?" எனப் பதில் அளித்தார்.






