என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஜகபர் அலியின் உடல் புதைக்கப்பட்ட இடம் முழுவதுமாக மறைக்கப்பட்டு, எக்ஸ்ரே மட்டும் எடுக்கப்பட வேண்டும்.
    • எக்ஸ்ரே எடுக்கும் நடவடிக்கைகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டு விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    மதுரை:

    புதுக்கோட்டை அருகே சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக குரல் கொடுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜகபர் அலி கடந்த 17-ந்தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் விதிகளை பின்பற்றி பிரேத பரிசோதனை நடத்தப்படவில்லை. எனவே உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்யவும், எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரி அவரது மனைவி மரியம், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி, மனுதாரர் கணவர் உடலை எக்ஸ்ரே எடுக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் வக்கீல் ஆஜராகி, எக்ஸ்ரே எடுப்பது கூடுதல் ஆவணமாக அமையும் என தெரிவித்தார். பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, ஜகபர் அலியின் உடலை அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே எக்ஸ்ரே செய்து கொள்ளலாம் என்றார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    மனுதாரர் கணவர் புதைக்கப்பட்ட இடத்தில் அவரது உடலை தோண்டி எக்ஸ்ரே எடுக்க தேவையான வசதிகள் செய்ய வேண்டும். திருமயம் தாசில்தார் முன்னிலையில், போதிய போலீஸ் பாதுகாப்புடன், ஜகபர் அலியின் உடல் புதைக்கப்பட்ட இடம் முழுவதுமாக மறைக்கப்பட்டு, எக்ஸ்ரே மட்டும் எடுக்கப்பட வேண்டும். எக்ஸ்ரே எடுக்கும் நடவடிக்கைகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டு விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • காலை உணவு திட்டம் தமிழக அரசால் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • சென்னை மாநகராட்சியில் இந்த திட்டத்தின் கீழ் 356 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.

    சென்னை:

    1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழக அரசால் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்த திட்டத்தின் கீழ் 356 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.

    பள்ளிகளுக்கு உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு வழங்குவதற்கான ஒப்பந்த கோரும் அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே அந்த ஒப்பந்த அறிவிப்பை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்வதாகவும், மாநகராட்சியே இந்த திட்டத்தை செயல்படுத்தும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

    • தென்காசி மாவட்டத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி சீமான் பேச்சுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார்.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட சீமான் கனிமொழிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

    ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவு திரட்டி பேசினார்.

    சீமான் பேசுகையில், உன் பெரியாரிடம் வெங்காயம் தான் உள்ளது. என் தலைவனிடம் வெடிகுண்டு உள்ளது. நீ வெங்காயத்தை என் மீது வீசு, நான் வெடிகுண்டை உன் மீது வீசுவேன்.

    வெடிகுண்டை வைத்திருக்கிறேன், இன்னும் வீசவில்லை. நான் வெடிகுண்டை வீசினால் உன்னை புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது என்று பேசி உள்ளார்.

    இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள்.

    அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி சீமான் பேச்சுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார். அதில் பேசிய அவர் " மக்களுக்காக போராடி எத்தனை முறை சிறை சென்றாலும் நீதி மன்றத்தில் பெரியார் ஒரு முறை கூட மன்னிப்பு கேட்டது இல்லை.


    நான் செய்தது தவறு இல்லை எனக்கு கொடுக்கப்படும் தண்டனையை கொடுங்கள் என கர்ஜித்த ஒரு மனிதர். தமிழ் தமிழ் எனக் கூறிக்கொண்டு தமிழையும் தமிழர்களையும் கொச்சைப்படுத்தக் கூடிய, பெரியாரை இழிவுபடுத்தக்கூடிய சில கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழல் உள்ளது" எனவும் சீமானின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக கனிமொழி பேசியிருந்தார்.

    அதனைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட சீமான் கனிமொழிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் "

    சும்மா கூலி காலினுலாம் பேசக்கூடாது.. எனக்கு தெரிந்து கனிமொழி அவர்களுடைய அப்பாவையும், பேரறிஞர் அண்ணாவையும் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

    ஏனென்றால், நான் பெரியாரை இழிவுபடுத்தி பேசவில்லை பெரிய பேசிய கருத்துக்களை பற்றி தான் பேசுகிறேன். பெரியார் பற்றி மட்டும் தான் மற்றவர்கள் பேசுகிறார்கள். ஆனால், பெரியார் என்ன எழுதி வைத்தார்? என்ன பேசினார் என்பது பற்றி யாரும் பேசமாட்டிக்கிறார்கள். இதனை எடுத்து பேசுவதற்கு உங்களுடைய யாருக்கும் துணிவு இல்லை. பெரியார் யார் தெரியுமா? என்று கேட்கிறீர்கள் யார் என்று கேட்டல் சொல்லமாட்டிக்கிறீர்கள்.

    திமுக அளவிற்கு பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, அவர்களைவிட யாரவது இழிவா பேசியிருக்கிறார்களா? கனிமொழி சொல்லும் பெரிய கூலி அவருடைய அப்பா தான். அப்போ நீங்க உங்களுடைய தந்தையை தான் எதிர்த்து பேசிக்கொண்டு இருக்கிறீர்களா? தமிழகத்தில் இத்தனை தொகுதி இருந்தும் நீங்கள் ஏன் தூத்துக்குடிக்கு சென்று போட்டியிட்டீர்கள் என்ற காரணத்தை சொல்ல முடியுமா?. தூத்துக்குடி மக்களை நம்ப வைத்து ஏமாற்றியவர் நீங்கள். அதனைவிட்டுவிட்டு சும்மா சும்மா கூலி காலினுலாம் சொல்லாதீங்க..உங்க அப்பா தான் பெரிய கூலி" எனவும் சீமான் சற்று ஆவேசத்துடன் பேசினார்.

    • சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
    • விமான நிலையம் முதல் ECR வரை உள்ள சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.

    சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் நாளை வருகை தருகின்றனர்.

    இதை முன்னிட்டு சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியத் துணை ஜனாதிபதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் 31.01.2025 அன்று சென்னை வருவதைக் கருத்தில் கொண்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து இயக்கத்தினை சுமூகமாகவும், தாமதத்தை குறைப்பதை உறுதி செய்வதற்காகவும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணிவரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    சென்னை விமான நிலையத்திலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு (ECR) செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மகாபலிபுரம் சாலையை (OMR) மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம்.

    குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வணிக வாகனங்களும் விமான நிலையம் முதல் ECR வரை உள்ள சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.

    பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பாபி தியோல், சுனில், நிதி அகர்வால், மற்றும் நாசர் உட்பட பல நட்சத்திர நடிகர்கள் உள்ளனர்.
    • நடிகர் பாபி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

    தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாராகவும், ஆந்திராவின் துணை முதலமைச்சராகவும் இருப்பவர் பவன் கல்யாண். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.

    மெகா சூர்யா புரொடக்ஷன் சார்பாக ஏ. தயாகர் ராவ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ளனர்.

    இந்தப் படம், முகலாயப்பேரரசர் காலத்தில் வாழ்ந்த அரசர் அவுரங்கசீப் பற்றிய புனைவுக்கதை.

    இந்தப் படத்தில் பாபி தியோல், சுனில், நிதி அகர்வால், மற்றும் நாசர் உட்பட பல நட்சத்திர நடிகர்கள் உள்ளனர். இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா மற்றும் ஞானசேகர் வி.எஸ் ஆகியோரின் ஒளிப்பதிவு செய்துள்ளனர். எம்.எம் கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    தொடர்ந்து, நடிகர் பாபி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் பாபி தியோல் வால் ஏந்திய படி காட்சியளிக்கிறார். திரைப்படம் வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தின் பிடிஎஸ் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள வக்ஃபு சொத்துக்கள், வக்ஃபு சட்டம் 1995-ஆல் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
    • பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு, அவசர அவசரமாக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல.

    வக்ஃபு சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக மெளனம் காப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வக்ஃபு சட்டத் திருத்த மசோதா தொடர்பாக திருத்தங்களை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு பல்வேறு தரப்பினர் முன்வைத்த பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு, அவசர அவசரமாக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல.

    வக்ஃபு வாரிய சொத்துக்கள் என்பது இஸ்லாமியப் பெரியவர்கள் அந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், இறை இல்லங்களை எழுப்பி வழிபாடு செய்வதற்காகவும், சமூக நலத் தொண்டுகளுக்காகவும் இறைவனுக்காக கொடுக்கப்பட்ட அர்ப்பணிப்பு சொத்துக்களாகும்.

    இந்த சொத்துக்களை பயன்படுத்தும் முழு உரிமையும் இஸ்லாமிய சமூகத்தவர்களுக்கு மட்டுமே உண்டு என்றாலும், அதனை தனிப்பட்டவர்கள் உரிமை கூட கொண்டாட எவ்வித அனுமதியும் இல்லை. அதனால், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுவதில்லை.

    தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள வக்ஃபு சொத்துக்கள், வக்ஃபு சட்டம் 1995-ஆல் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு சட்டத் திருத்த மசோதா 2024, வக்ஃபு சொத்துக்கள் மீதான இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், ஆக்கிரமிப்புக்கு துணை போகும் வகையிலும் உள்ளதாகவும், இதனால், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள், அடக்க ஸ்தலங்கள் மீதான உரிமைகளும் பறிபோகும் வாய்ப்புள்ளதாக சிறுபான்மை இஸ்லாமிய சமூக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதற்கெதிராக நாடு முழுவதும் அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த சட்டத் திருத்தம் வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என மத்திய அரசு கூறினாலும், அந்த ஷரத்துக்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளது என்ற இஸ்லாமிய மக்களின் அச்சம் நியாயமானதுதான்.

    எனவே, மத்திய அரசு சிறுபான்மை மக்களின் உணர்வுகளை மதித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக அரசு எழும்பூர் அருங்காட்சியக வளாகத்திற்குள் மகாத்மா காந்தியின் புதிய சிலையை நிறுவியது.
    • ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் கடந்த ஆண்டுகளில் எழும்பூரில் நடந்த இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

    காந்தி நினைவு நாள் அனுசரிப்பு குறித்து கேள்வி எழுப்பிய ஆளுநர் ரவிக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து எம்.பி சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மகாத்மா காந்தியின் நினைவு தினம் நடத்துவது தொடர்பாக ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். "காந்தி மண்டபத்தில் காந்தி நினைவு நிகழ்வை நடத்தாமல் அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?" என கேள்வி எழுப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர் என்.ரவி.

    பாரம்பரியமாக, காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் மற்றும் தியாகிகள் தின அனுசரிப்புகள் மெரினா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன.

    இருப்பினும், மெரினா கடற்கரை சாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் 2022-ஆம் ஆண்டு தமிழக அரசு எழும்பூர் அருங்காட்சியக வளாகத்திற்குள் மகாத்மா காந்தியின் புதிய சிலையை நிறுவியது.

    அன்று முதல் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் தியாகிகள் தின அனுசரிப்புகள் இரண்டும் எழும்பூர் அருங்காட்சியக காந்தி சிலை முன்புதான் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் கடந்த ஆண்டுகளில் எழும்பூரில் நடந்த இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

    பாரம்பரியமிக்க எழும்பூர் அருங்காட்சியகத்தின் வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

    பாந்தியன் சாலையை ஒட்டியிருக்கும் அந்த அருங்காட்சிகத்தின் பிரதான நுழைவு வாயில் முன்பு இருக்கும் காந்தி சிலை முன்புதான் அஞ்சலி நிகழ்வு நடந்தேறியிருக்கிறது.

    ஆளுதர் குறிப்பிடுவது போல அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடக்கவில்லை என்பதை முதலமைச்சர் அஞ்சலி செலுத்திய புகைப்படத்தை பார்த்தாலே தெரியும் பின்னணியில் பாந்தியன் சாலையும் மேம்பாலமும் புகைப்படத்தில் தெரியும். ஆனால் ஆளுநர் கண்களுக்கு வெறும் அவதூறு தான் தெரியும் 'காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார்.

    ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?" எனவும் கேட்டிருக்கிறார் ஆளுநர் 1947ஆகஸ்ட்15-ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த போது. திராவிட கழக பொதுச் செயலாளராக இருந்த அண்ணா 'சுதந்திர தினம் இன்பநான்' என சொல்லி, பிரிட்டிஷுக்கு ஆதரவானவர்கள் என்கிற பழி விழுந்துவிடாமல் பாதுகாத்தார்.

    அந்த அண்ணாவின் வழி வந்த நாங்கள் தேசத்தையும் தேச பிதாவையும் நேசிப்பவர்கள் தேசப்பிதாவை கொன்றவர்களை கொண்டாடுகிறவர்கள் அல்ல நாங்கள் காந்தி ஏன் கொல்லப்பட்டார்? அவரை கொன்றது யார்? என்பது எல்லாம் ஆளுதருக்கு தெரியும்தானே!

    இன்று தேசப்பிதா மறைந்த தினம் மட்டுமல்ல. இந்துத்துவா தீவிரவாதியால் மகாத்மா காந்தி கொல்லப்பட்ட தினமும் என்பது வரலாறு மதவெறிக்காக காந்தியை கொன்றவர்கள் இன்று ரத்த பசியோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

    அவர்களை எதிர்த்து ஆளுநர் குறிப்பிடும் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள்தான் களமாடி கொண்டிருக்கிறார்கள். மகாத்மா காந்தியின் கொலைக்குப் பின்னால் இருந்தவர்களையும் அமைப்பையும் ஆதரிப்பவர் நோக்கங்களை தமிழக மக்கள் ன்கு அறிவார்கள்.

    2024 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, "மகாத்மா காந்தியைப் பற்றி உலகினர் யாருக்கும் தெரியாது. கோந்தி' என்ற திரைப்படத்திற்குப் பிறகே தெரிந்தது" என சொல்லி காந்தியை சிறுமைப்படுத்திய போது ஆர்.என்.ரவி எங்கே போனார்?

    2019-ம் ஆண்டு உத்தரபிரதேசம் அலிகாரில் உள்ள இந்து மகா சபை அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு தீ வைத்த பூஜா சகுன் பாண்டேவை ஆணார கண்டித்திருக்கிறாரா?

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைவிட ஆளுநர் முக்கியமானவர் அல்ல. மன்னராக ஜமீன்தாராக நினைத்துக் கொண்டு அதிகாரம் செய்யும் மனநோயில் இருந்து ஆளுநர் விடுபட வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதைத் தவிர்த்து. தமிழக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துமாறு ஆளுநரை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதிய தேடுதல் குழுவை நியமிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
    • யுஜிசி பிரதிநிதியை சேர்க்காமல் இருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது.

    துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக புதிய தேடுதல் குழுவை நியமிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினரை தவிர்த்து தேடுதல் குழுவை நியமித்து உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டதாக ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.

    ஆளுநர் தரப்பிலான பிரதிநிதி, பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் பிரதிநிதி, யுஜிசி பிரதிநிதியை உள்ளடக்கி குழு அமைக்க வேண்டும் என்றும் மதுரை காமராஜன் பல்கலைக்கு துணை வேந்தரை தேர்வு செய்ய புதிய தேடுதல் குழுவை நியமிக்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

    தொடர்ந்து, யுஜிசி பிரதிநிதியை சேர்க்காமல் இருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இளைஞர்கள் பயன்படுத்திய இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை கானத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை ஈசிஆர் சாலையில் பெண்களை இளைஞர்கள் சிலர் காரில் துரத்திச் சென்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இளைஞர்கள் பயன்படுத்திய இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மேலும், கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை கானத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரு கார்களில் இருந்த இளைஞர்களை அடையாளம் கண்டு போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    • சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படவில்லை.
    • உங்களுக்காக, உங்கள் குரலுக்காக பிரதமர் மோடி உங்களுடன் இருந்து இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளார்.

    மதுரை மாவட்டம் வல்லாளப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ததற்காக பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பாராட்டு விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    * தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை பிரதமர் மோடி ஒருபோதும் கொண்டு வரமாட்டார்.

    * மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்றபோது, 2 நாட்களில் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் டெல்லிக்கு சென்று திட்டத்தை நிறுத்துவிட்டார்கள்.

    * அமைச்சர் கிஷண் ரெட்டி மற்றும் அங்குள்ள செயலாளர்களுக்கு அரிட்டாபட்டி எப்படிப்பட்ட பகுதி என்று தெரியாது. தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை.

    * மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதியபோது. அப்போது 4,890 ஏக்கரில் வெறும் 477 ஏக்கர் நிலம்தான் பல்லுயிர் பூங்காவாக இருக்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மற்றவை பற்றி தெரிவிக்கவில்லை. கோவில், ஒருபோக விவசாயம் குறித்து யாரும் சொல்லவில்லை. பெரியாறு அணையில் இருந்து வரும் நீர்ப்பாசனம் பற்றி யாரும் சொல்லவில்லை.

    * அதனைத்தொடர்ந்து டெண்டர் விடப்படுகிறது. முதல்முறை விடப்பட்ட டெண்டரில் யாரும் டெண்டர் கோரவில்லை. பின்னர் 2024 ஏப்ரல் மாதம் டெண்டர் விடுகிறார்கள். அப்போது மாநில அரசுக்கு தெரியும்.

    * நவம்பர்- டிசம்பர் மாதம் டெண்டர் எடுத்த பின்னர்தான் உங்களுக்கு தெரியும், எனக்கு தெரியும். எல்லோருக்கும் தெரியும்.

    * மத்திய அரசில் ஒரு திட்டத்தை ரத்து செய்வது அவ்வளவு சுலபம் கிடையாது. பல இடங்களுக்கு போக வேண்டும். அமைச்சரவை ஒப்புதல் வாங்க வேண்டும்.

    * ஊர் அம்பலத்தாரர்கள் சந்தித்து, 24 மணி நேரத்திற்குள் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்.

    * உங்களுடைய குரலுக்கு செவி சாய்த்து, உங்களுடைய மண் உங்களோடு இருக்க வேண்டும் என பிரதமர் மோடி எடுத்த முடிவு இது.

    * பிரதமர் மோடி தமிழக மக்களோடு கலந்து இருக்கக் கூடியவர்.

    * சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்.

    * சட்டசபையில் தீர்மானம் போடுவதுதான் அவர்களது வேலை.

    * உங்களுக்காக, உங்கள் குரலுக்காக பிரதமர் மோடி உங்களுடன் இருந்து இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளார்.

    * மாநில அரசு மிரட்டலுக்கு.. மாநில அரசு மிரட்டலுக்கெல்லாம் மோடி எப்போதும் பயந்தது கிடையாது. அப்படியிருந்தால் ஆட்சியில் உட்கார்ந்த இருக்க முடியாது.

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

    • சென்னையில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
    • போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பாமக பலமுறை வலியுறுத்தினாலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    போதை மருந்து வணிகத்தை எதிர்த்த குத்துச்சண்டை வீரர் டிஜிபி அலுவலகம் அருகில் வெட்டிக்கொலை செய்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    போதை மருந்து வணிகத்தை எதிர்த்த குத்துச்சண்டை வீரர் டிஜிபி அலுவலகம் அருகில் வெட்டிக்கொலை: திராவிட மாடல் ஆட்சியில் அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பே கிடையாதா?

    சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த குத்துச்சண்டை வீரர் ஒருவர் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

    தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்துக்கு மிக அருகில் நடந்துள்ள இந்த படுகொலை தான் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

    ஐஸ் அவுஸ் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான தனுஷ் குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை வென்று கொடுத்துள்ளார்.

    அதே பகுதியில் மோகன் என்பவர் கஞ்சா, போதை ஊசிகள், போதை மாத்திரைகள் போன்றவற்றை விற்பனை செய்து வந்திருக்கிறார்.

    அதற்கு தனுஷ் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், அவரை மோகனும் இன்னொருவரும் சேர்ந்து படுகொலை செய்திருக்கிறார்கள். இந்தப் படுகொலைக்கு காரணம் காவல்துறையின் அலட்சியம் தான்.

    கொலை நடந்த ஐஸ் அவுஸ் பகுதி காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்துக்கு மிக அருகில் உள்ளது. அந்தப் பகுதியிலேயே நீண்ட காலமாக கஞ்சா விற்பனை நடந்து வந்திருக்கிறது.

    காவல்துறை உண்மையாகவே செயல்திறன் மிக்கதாக இருந்திருந்தால் கஞ்சா விற்பனையை தடுத்தி நிறுத்தியிருப்பதுடன், அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்க வேண்டும். அதை செய்திருந்தால் தனுஷ் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்.

    தனுஷுக்கும், மோகனுக்கும் பல ஆண்டுகளாக மோதல் இருந்த் வந்த நிலையில், தனுஷை மோகன் கும்பல் படுகொலை செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை உளவுத்துறை மூலம் தமிழக அரசு கண்டுபிடித்து தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்வதில் தமிழக அரசு படுதோல்வியடைந்து விட்டது.

    தமிழ்நாட்டில் கொலை, கொள்ளைகள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களுக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் தான் காரணமாக இருக்கிறது.

    போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பாமக பலமுறை வலியுறுத்தினாலும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், அப்பாவி மக்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மக்கள் நலனில் அரசுக்கும், காவல்துறைக்கும் ஓரளவாவது அக்கறை இருந்தால் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தக் கூடாது என போக்குவரத்து ஆணையர் எச்சரித்திருந்தார்.
    • ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களும் முடிவு.

    வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் கூடுதல் கட்டணம் வசூலிப்போம் என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தக் கூடாது என போக்குவரத்து ஆணையர் எச்சரித்திருந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

    ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலையில் அவற்றின் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் தெரிவித்துள்ளது.

    ஆட்டோ தொழிற்சங்கத்தினரை போக்குவரத்து துறை அமைச்சர் அழைத்து பேசி கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    அழைத்து பேசாவிட்டால் திட்டமிட்டபடி பிப்ரவரி 1ம் தேதி ஆட்டோ கட்டணங்களை உயர்த்தியே வசூலிப்போம் என அறிவித்துள்ளது.

    ×