என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- சில நாட்களுக்குப் பிறகு, ஒன்பது பேர் கொண்ட மற்றொரு குடும்பம் இதே போன்ற அறிகுறிகளுடன் நோய்வாய்பட்டது.
- காய்ச்சல், வலி, குமட்டல் மற்றும் சுயநினைவை இழத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டம், பதால் கிராமத்தில் பரவி வரும் மர்ம நோய் கடந்த 45 நாட்களில் 16 பேரின் உயிரை பறித்துள்ளது. இந்த மர்ம நோய்க்கு ஆளானவர்களுக்கு காய்ச்சல், வலி, குமட்டல் மற்றும் சுயநினைவை இழத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிசம்பர் 7, 2024 அன்று நடந்த ஒரு விருந்துக்கு பிறகு ஏழு பேர் கொண்ட ஒரு குடும்பம் நோய்வாய்ப்பட்டது. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு, ஒன்பது பேர் கொண்ட மற்றொரு குடும்பம் இதே போன்ற அறிகுறிகளுடன் நோய்வாய்பட்டது. அதில் மூன்று பேர் இறந்தனர். ஜனவரி 12 அன்று, பத்து பேர் கொண்ட மூன்றாவது குடும்பம் நோய்வாய்ப்பட்டது. இந்த குடுப்பத்தில் ஐந்து குழந்தைகள் இறந்தனர் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

இந்நிலையில் நோயின் காரணத்தை கண்டறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைச்சர்கள் மட்டத்தில் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

அந்த குழு இன்று [ ஜனவரி 19] பாதிப்பு குறித்து அப்பகுதியில் ஆய்வு செய்ய உள்ளது. தொற்று வியாதிக்கான சாத்தியம் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உயிரிழப்புகள் நியூரோ டாக்சின்களால் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.
- சுரங்கப்பாதையின் சாதனை பணியில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளர்களையும் சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
- சுரங்கப்பாதை பற்றிய விவரங்களை அதிகாரிகளுடன் கேட்டறிந்து சுரங்கப் பாதையில் பயணம் மேற்கொண்டார்.
ஸ்ரீநகா்:
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகா்-காா்கில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 12 கி.மீ. நீளமுள்ள சோனாமாா்க் சுரங்கப்பாதை ரூ.2,700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
இதில் 6.4 கிலோ மீட்டர் நீளமுள்ள சோனாமார்க் பிரதான சுரங்கப்பாதை பிரமாண்டமாக இசட் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் வெளியேறும் சுரங்கப்பாதை மற்றும் அணுகுமுறை சாலைகளை உள்ளடக்கியது. கடல் மட்டத்தில் இருந்து 8,650 அடி உயரத்தில் அமைந்துள்ள இது, ஸ்ரீநகர் மற்றும் சோனாமார்க் இடையே லே வரை செல்லும் அனைத்து வானிலைக்கும் ஏற்ற தொடர்பையும் மேம்படுத்தும்.
நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு வழிகளைத் தவிர்த்து, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த லடாக் பகுதிக்கு பாதுகாப்பான மற்றும் தடையின்றி அணுகலை உறுதி செய்யும். இது சோனாமார்க்கை ஆண்டு முழுவதும் செல்லும் இடமாக மாற்றி, குளிர்கால சுற்றுலா, சாகச விளையாட்டுகள் மற்றும் உள்ளூர் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்தும்.

2028-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படவுள்ள ஜோஜிலா சுரங்கப்பாதையுடன், இது பாதையின் நீளத்தை 49 கி.மீ. முதல் 43 கி.மீ. வரை குறைத்து, வாகனத்தின் வேகத்தை மணிக்கு 30 கி.மீ. முதல் 70 கி.மீ. வரை அதிகரிக்கும். ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் இடையே தடையற்ற தேசிய நெடுஞ்சாலை-1 இணைப்பை உறுதி செய்யும்.
இந்த மேம்படுத்தப்பட்ட இணைப்பு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் முழுவதும் பாதுகாப்பு தளவாடங்கள், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக-கலாச்சார ஒருங்கிணைப்பை அதிகரிக்கும்.
இந்த சுரங்கப்பாதையில் அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் ஒரு மணி நேரத்தில் 1000 வாகனங்கள் செல்லலாம். இமயமலையை குடைந்து இந்த பிரமாண்ட சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இன்று இந்த வரலாற்று சிறப்பு மிக்க சோனாமார்க் சுரங்கப்பாதையை தொடங்கிவைத்து நாட்டுக்கு அா்ப்பணித்தார்.
முன்னதாக சுரங்கப்பாதை பற்றிய விவரங்களை அதிகாரிகளுடன் கேட்டறிந்து சுரங்கப் பாதையில் பயணம் மேற்கொண்டார்.
இந்த சுரங்கப்பாதையின் சாதனை பணியில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளர்களையும் சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றினார். மத்திய மந்திரி நிதின்கட்கரி, கவர்னர் மனோஜ் சின்கா, முதல்-மந்திரி உமர் அப்துல்லா ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
பிரதமரின் வருகையையொட்டி, சோன்மாா்க் உள்பட ஜம்மு-காஷ்மீா் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. ராணுவம், ஜம்மு-காஷ்மீா் போலீசார், துணை ராணுவப் படைகளுடன் ஒருங்கிணைந்து பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புக் குழு (எஸ்பிஜி) இதற்கான ஏற்பாடுகளை செய்தது.
- ரூ.2700 கோடி செலவில் 6.5 கி.மீ. நீளத்திற்கு இசட் வடிவ சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.
- 8,650 அடி உயரத்தில் இந்த சுரங்கபாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து நாட்டின் உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அந்த வகையில் மேம்பாலங்கள், ரெயில் நிலையங்கள், புதிய விமான நிலையங்கள் என நாடெங்கும் கட்டப்பட்டு வருகிறது. உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதின் மூலம் நாட்டின் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீரையும் லடாக்கையும் இணைக்கும் வகையில் இசட் வடிவ சுரங்கப்பாதை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் தேசிய நெடுஞ் சாலையில் ரூ.2700 கோடி செலவில் 6.5 கி.மீ. நீளத்திற்கு இசட் வடிவ சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 8,650 அடி உயரத்தில் இந்த சுரங்கபாதை அமைக்கப்பட்டுள்ளது.
சோன்மாா்க் சுரங்கப் பாதை செயல்பாட்டுக்கு வரும் சூழலில், ஸ்ரீநகா்-லே இடையே அனைத்து பருவ நிலைகளிலும் போக்குவரத்து இணைப்பு துண்டிக் கப்படாமல் இருக்கும்.
'ஜீ-மோா்க் சுரங்கப்பாதை திறக்கப்பட்டால், சோன் மாா்கிற்கு ஆண்டு முழு வதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரலாம். சோன் மாா்க் ஒரு சிறந்த பனிச்சறுக்கு விளையாட்டு மையமாக மேம்படும்.
குளிர் காலத்தில் ஊரை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் சோன்மாா்க் மக்களுக்கு இருக்காது. மேலும், ஸ்ரீநகரில் இருந்து காா்கில் மற்றும் லே வரையிலான பயணநேரம் குறையும்.
தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள இச்சுரங்கப்பாதை சுற்றுலாப் பயணிகளின் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
6.5 கி.மீ. நிளத்திற்கு கட்டப்பட்டுள்ள சுரங்கப் பாதை இருவழிப் பாதையாக தலா 7.5 மீட்டர் அகலம் கொண்ட சிக்சாக் (வளைவுகள் அதிகம் கொண்ட) வடிவில் கட்டப்பட்டுள்ளது.
இச்சாலையில்பயணம் செய்தால் 15 நிமிடத்தில் அடுத்தப் பகுதியை அடைந்து விடலாம்.
அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் ஒரு மணி நேரத்திற்கு 1,000 வாகனங்கள் செல்லும் வகையில் இந்த சுரங்கப்பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
உடையக்கூடிய இமயமலைப் புவியியலைக் கருத்தில் கொண்டு என்.ஏ.டி.எம். சுரங்கப்பாதை முறையைப் பயன்படுத்தி சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் சந்தர் பால் பகுதியில் அமைந்துள்ள இச்சுரங்கப் பாதையை நாளை (திங்கட்கிழமை) பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த பொறியியல் சாதனைக்காக கடுமையான பருவநிலைகளை பொருட்படுத்தாமல் அயராது பணியாற்றிய கட்டுமான தொழிலாளா்களையும் பிரதமா் மோடி சந்தித்து, கலந்துரையாடுகிறார்.
இந்த சுரங்கப்பாதையின் அருகில் 10 மீட்டர் அகலத்தில் 7.5 மீட்டர் அகலம் கொண்ட மற்றொரு சுரங்க பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மெயின் சுரங்க பாதைக்கு இணையாக இந்த சுரங்க பாதை செல்கி றது. அவசர காலத்தில் இதனை பயன்படுத்தும் வசதியாக அமைக்கப் பட்டுள்ளது. மேலும் ரெயில்வே சுரங்கப்பாதை யாகவும் இதனை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுரங்க பாதையால் பாதுகாப்பு தளவாடங்களை அதிகரிப்பதோடு ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக்கில் பொருளாதார வளா்ச்சி மற்றும் சமூக -கலாசார ஒருங்கிணைப்பு மேம்படும்.
- டெல்லி-ஸ்ரீநகர் இடையேயும் விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளன.
- ரெயில் போக்குவரத்தை தங்குதடையில்லாமல் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில், இமயமலை பகுதியில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர ஏனைய பகுதிகளில் ரெயில் போக்குவரத்து வசதி முழுமையாக செய்யப்பட்டுள்ளது. மலைகள், பள்ளத்தாக்குகள் என சமநிலை இல்லாமல் இருந்தாலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் இப்போது மலைகளை குடைந்தும், பள்ளத்தாக்குகளில் பாலங்கள் அமைத்தும் சமநிலையை ஏற்படுத்தி ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜம்மு - ஸ்ரீநகர் - பாராமுல்லா இடையே 345 கி.மீ. தூரத்துக்கு புதிய ரெயில் பாதை அமைக்க ரூ.43 ஆயிரத்து 12 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
அதில், உலகின் 8-வது அதிசயமான பிரமாண்ட செனாப் வளைவு இரும்பு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செனாப் பாலம் பாரீசில் உள்ள ஈபிள் கோபுரத்தைவிட 35 மீட்டர் உயரமாகும்.
அதாவது, கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்திலும், பள்ளத்தாக்கில் இருந்து 359 மீட்டர் உயரத்திலும் 1,315 மீட்டர் நீளத்துக்கு இந்த பாலம் அமைந்துள்ளது. இந்த செனாப் பாலத்துக்கு மட்டும் செலவிடப்பட்ட தொகை ரூ.1,486 கோடியாகும்.
தற்போது ஜம்மு-ஸ்ரீநகர் இடையே சாலை மார்க்கம் 244.3 கி.மீ. நீளம் இருக்கிறது. இந்த பாதை இமயமலையில் வளைவு, நெளிவு, ஏற்ற, இறக்கத்துடன் உள்ளதால், இந்த பாதையில் வாகனங்களில் சென்று இலக்கை அடைய 5½ மணி நேரம் ஆகிறது. ஆனால், ரெயில் பாதை என்று வரும்போது 267 கி.மீ. நீளம் இருக்கிறது. மொத்தம் 27 ரெயில் நிலையங்கள் இடையில் உள்ளன.
விரைவில் குளிர் பகுதியான ஜம்மு-ஸ்ரீநகர் இடையே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் 3 மணி நேரம் 10 நிமிடத்தில் இலக்கை அடையும்.
ஜம்மு-காஷ்மீரில் மைனஸ் 6 டிகிரிக்கு மேல் குளிர் நிலவினால், பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்படும். இதுபோன்ற நேரத்தில்கூட, ரெயில் போக்குவரத்தை தங்குதடையில்லாமல் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இதேபோல், டெல்லி-ஸ்ரீநகர் இடையேயும் விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளன. இந்த 2 வந்தே பாரத் ரெயில்களையும் வரும் 26-ந்தேதி அன்று குடியரசு தினத்தில் பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து தொடங்கிவைப்பார் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
- ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மலையில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
- விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபூர் மாவட்டத்தில் இன்று கட்டுப்பாட்டை இழந்த ராணுவ வாகனம் ஒன்று மலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
பந்திபூர் மாவட்டத்தில் உள்ள சதர் கூட் பேயன் என்ற பகுதி அருகே சாலையின் ஒரு கூர்மையான வளைவில் திரும்ப முயன்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மலையில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த ராணுவ வீர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இரண்டு வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 5 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யூனியன் பிரதேசத்தில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளாவது முதல் முறை அல்ல.
கடந்த ஆண்டு டிசம்பர் 24 அன்று, பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் 350 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஐந்து வீரர்கள் இறந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பயங்கரவாத கோணம் எதுவும் இல்லை என ராணுவம் தெரிவித்துள்ளது.
இதேபோல், நவம்பர் 4 அன்று, ரஜோரி மாவட்டத்தில் வாகனம் சாலையை விட்டு விலகி ஒரு பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒரு ராணுவ வீரர் இறந்தார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார்.
நவம்பர் 2, அன்று ரியாசி மாவட்டத்தில் ஒரு மலைப்பாங்கான சாலையில் இருந்து கார் சறுக்கி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒரு பெண் மற்றும் அவரது 10 மாத மகன் உட்பட மூன்று பேர் இறந்தனர் மற்றும் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இறந்து கிடந்தவர்களின் பெயர்கள் ஆசுதோஸ் ராணா, முகேஷ் சிங், சன்னி சவுதாரி என்று தெரியவந்தது.
- மர்மமாக இறந்து கிடந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்ட போலீசாருக்கு நேற்று முன்தினம் ஒரு புகார் வந்தது. அதில் தனது சகோதரர் படீர்வா நகருக்கு செல்வதாக கூறி சென்றவர், பின்னர் போன் அழைப்புகளை ஏற்கவில்லை என்று கூறப்பட்டு இருந்தது.
புகாரின் பேரில் போலீசார் அவரை தேடியபோது, படீர்வா பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் அவரது மோட்டார் சைக்கிள் நிற்பதை கண்டனர். அங்கு விசாரித்தபோது அவரும், மற்ற 2 பேரும் சேர்ந்து அறை எடுத்து தங்கி இருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சென்று, அவர்களின் அறை கதவை தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 3 பேரும் நினைவிழந்த நிலையில் கிடந்தனர்.
பின்னர் தடய அறிவியல் குழுவினரும், மருத்துவ குழுவினரும் வரழைக்கப்பட்டு சோதனை செய்தபோது அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவ குழுவினர் அறிவித்தனர். தடய அறிவியல் பிரிவினர் தடயங்களை சேகரித்தனர்.
இறந்து கிடந்தவர்களின் பெயர்கள் ஆசுதோஸ் ராணா, முகேஷ் சிங், சன்னி சவுதாரி என்று தெரியவந்தது. ஜம்மு பகுதியில் வசித்த நண்பர்களான இவர்கள், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இங்கு சுற்றுலா வந்ததாக தெரியவந்துள்ளது.
அவர்கள் மர்மமாக இறந்து கிடந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதல் கட்ட விசாரணையில் அவர்கள் தங்கிய அறையில், கரி மூலம் செயல்படும் ஹீட்டர் சாதனம் ஒன்று இருந்தது. அதிலிருந்து வெளிப்பட்ட புகையால் அவர்கள் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் சோதனைகளின் முடிவில்தான் அவர்கள் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- காசிகுண்ட் நகரில் பனிப்பொழிவைத் தொடர்ந்து 2,000 வாகனங்ள் நெரிசலில் சிக்கின.
- ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 80% விமானங்கள் ரத்து செய்யப்பட்டன
ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு நேற்று [வெள்ளிக்கிழமை] தொடங்கியுள்ளது.
காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது, இதில் தெற்கு காஷ்மீர் மற்றும் மத்திய காஷ்மீரின் சமவெளிகளில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது.

தலைநகர் ஸ்ரீநகரில் சுமார் 8 [இன்ச்]அங்குல பனிப்பொழிவு பதிவாகியுள்ளது, கந்தர்பால் மற்றும் சோனாமார்க்-இல் 7-8 அங்குலங்கள் பதிவாகியுள்ளன. ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் உள்ள ஜோஜிலா ஆக்சிஸில் 15 அங்குல பனியும், அனந்த்நாக் மாவட்டத்தில் 17 அங்குலங்கள் வரை பனிப்பொழிவும் பதிவாகியுள்ளன.

பஹல்காம், புல்வாமா, ஷோபியான் மற்றும் பிற பகுதிகளிலும் கணிசமான பனிப்பொழிவு பதிவாகி உள்ளது.
பனிப்பொழிவு தொடர்ந்து பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காசிகுண்ட் நகரில் நேற்று பனிப்பொழிவைத் தொடர்ந்து சுமார் 2,000 வாகனங்ள் நெரிசலில் சிக்கின.

போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை கடுமையான பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டது. ஸ்ரீநகர் வரும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது, இன்று [சனிக்கிழமை] சுமார் 80% விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதற்கிடையே இமாச்சலப் பிரதேசத்தின் குலு[ Kullu] பகுதியில் உள்ள ஸ்கை ரிசார்ட்டான சோலாங் நாலாவில் பனிபொழிவால் சிக்கித் தவித்த சுமார் 5,000 சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் நேற்று மீட்கப்பட்டனர்.
லாஹவுல்-ஸ்பிடி, சம்பா, காங்க்ரா, குலு, சிம்லா மற்றும் கின்னவுர் உள்ளிட்ட மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் நேற்று [வெள்ளிக்கிழமை] கடுமையான மழை மற்றும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
- ஜம்மு காஷ்மீரில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவில் பதிவானது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் இன்று இரவு 9.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
- ஜம்மு காஷ்மீரில் வீரர்களை ஏற்றி ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது.
- அப்போது திடீரென ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் வீரர்களை ஏற்றி ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து இந்தியப் பகுதிக்குள் ஊடுருவினர்.
- 25வது கார்கில் விஜய் திவாஸில் நம்க்யால், ஆசிரியையாக உள்ள தனது மகள் டிசெரிங் டோல்கருடன் கலந்துகொண்டார்.
இந்தியா - பாகிஸ்தானின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, லடாக்கின் கார்கில் மாவட்டத்தின் வழியே செல்கிறது. கடல் மட்டத்திலிருந்து, கிட்டத்தட்ட 15 ஆயிரம் அடி உயரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.
1999 ஆம் ஆண்டின், மே 3 ஆம் தேதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள கிளர்ச்சியாளர்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து இந்தியப் பகுதிக்குள் ஊடுருவினர்.
உயரமான பகுதியை அடைந்த இந்த கூட்டுப்படை மே 5 ஆம் தேதி இந்திய வீரர்கள் உடன் சண்டையிடத் தொடங்கியது. மே தொடங்கி ஜூலை வரை நீடித்த இந்த போரில் ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் சண்டையிட்ட இந்திய ராணுவம் இறுதியில் வென்றது. இதுவே விஜய் திவாஸ் என்று கொண்டாடப்படுகிறது.
இந்த வருடம் 25 வது விஜய் திவாஸ் கொண்டாடப்பட்டது. இந்த போரில் வீரமரணமடைந்த 527 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் 1999 ஆம் ஆண்டு கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தானின் ஊடுருவல் குறித்து இந்திய படையினருக்கு முதலில் எச்சரித்த பெருமைக்குரிய லடாக்கி மேய்ப்பரான தாஷி நம்க்யால் [58 வயது] நேற்று [வெள்ளிக்கிழமை] காலமானார்.
லடாக்கின் ஆரியப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கார்கோனில் வசித்து வந்த நம்கியால் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய ராணுவம் அஞ்சலி செலுத்தியுள்ளது.
இந்த ஆண்டு விஜய் ட்ராஸில் நடந்த 25வது கார்கில் விஜய் திவாஸில், நம்க்யால், ஆசிரியையாக உள்ள தனது மகள் டிசெரிங் டோல்கருடன் கலந்துகொண்டார்.

- பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர்.
- துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குல்காம் மாவட்டத்தின் பெஹிபாக் பகுதியில் உள்ள காடரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது, பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அங்கு, தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது. இதனால், பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர்.
இந்த சம்பவத்தில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும், 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
- சந்தேகிக்கப்படும் இருவரிடம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இருவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடுக்கு அருகே உள்ள நவ்ஷேரா செக்டார் பகுதியில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் நடத்திய கூட்டு சோதனையில் சந்தேகிக்கப்படும் இருவரிடம் இருந்து 5.50 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சஜன் குமார் (25) மற்றும் சுபாஷ் சந்தர் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளன.
முன்னதாக, ஜம்முவின் அர்னியா செக்டரில் உள்ள சர்வதேச எல்லையில் நேற்று முன்தினம் பாகிஸ்தானின் டிரோன் மற்றும் அரை கிலோ எடையுள்ள போதைப்பொருட்களை எல்லை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.






