search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kargil war"

    • குறிப்பாக கார்கில் போரின் போது ஜம்மு காஷ்மீரில் நான் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது.
    • ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றி முடிந்தவரை நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 70). இவரது மனைவி கருப்பாயம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருமே ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    இதில் முதல் மகனான கண்ணன் கடந்த 19-வது வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். 28 ஆண்டுகள் தனது பணியை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிய அவருக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மிகப்பெரிய தலைவருக்கு அளிக்கப்படும் வரவேற்பை போல நகர் முழுவதும் பிரம்மாண்ட பேனர்கள் வைத்து கண்ணனுக்கு மாலை அணிவித்து அதிர்வேட்டுகள் வெடித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். இது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து ராணுவ வீரர் கண்ணன் கூறுகையில், கடந்த 1995ம் ஆண்டு 19வது வயதில் ராணுவத்தில் பணியில் சேர்ந்தேன். 28 ஆண்டுகள் நல்ல முறையில் நாட்டுக்காக சேவையாற்றி தற்போது பணி முடித்து ஊருக்கு திரும்பியுள்ளேன்.

    எனக்கு நித்யதாரணி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எனது பணியின் போது உயர் அதிகாரிகள் பல முறை என்னை சிறப்பாக பணியாற்றியதற்காக கவுரவித்துள்ளனர். குறிப்பாக கார்கில் போரின் போது ஜம்மு காஷ்மீரில் நான் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. நாட்டிற்காக பணியாற்றிய போது கிடைத்த மகிழ்ச்சியை போல் தற்போது கிராம மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    பள்ளி படிப்பின் போதே எனது நண்பர்கள் பலர் டாக்டர், கலெக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்று பேசி வந்தனர். அப்போதிருந்தே எனக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருந்தது. எனது ஆசைக்கு எனது பெற்றோரும் உறுதுணையாக இருந்தனர்.

    ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றி முடிந்தவரை நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.

    தனது மகனுக்கு அளித்த வரவேற்பு குறித்து தந்தை ராஜ் தெரிவிக்கையில்,

    எனது 3 மகன்களையுமே ராணுவத்தில் சேர்த்துள்ளேன். அவர்கள் இதன் மூலம் நாட்டுக்கு சேவையாற்றுவதுடன் ஒழுக்கத்துடன் வாழ கற்றுக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். ராணுவத்தில் இருந்து திரும்பிய எனது மகனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்னை கண் கலங்க வைத்தது. இதன் பிறகு எங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ராணுவத்தில் பணியாற்ற அவன் உதவ வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.

    • லடாக் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் எஸ்.டி சிங் ஜம்வால் காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.
    • சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும்.

    யூனியன் பிரதேசமான லடாக்கில் முதன்முதலில் மகளிர் காவல் நிலையம் செயல்படத் தொடங்கப்பட்டுள்ளது.

    லடாக் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் எஸ்.டி சிங் ஜம்வால், பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாளும் காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"இந்த மகளிர் காவல் நிலையம் தேவைப்படும் பெண்களுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை உறுதி செய்வதற்காக 24 மணிநேரமும் செயல்படும். கூடுதலாக, சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும் வள மையமாக இது செயல்படும்.

    கார்கிலில் மகளிர் காவல் நிலையத்தை நிறுவுவது ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது. ஏனெனில், இது அப்பகுதியில் பெண்கள் எதிர்கொள்ளும் கவலைகள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும்" என்றார்.

    மேலும், லடாக் காவல்துறை தலைவர் கூறியதாவது:-

    கார்கிலில் மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா என்பது அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். இந்த முயற்சியானது பெண்கள் தங்கள் கவலைகள் உணர்வுபூர்வமாகவும் விரைவாகவும் தீர்க்கப்படும் என்பதை அறிந்து அதிக நம்பிக்கையுடன் காவல்துறையை அணுக உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
    • இந்த நிகழ்வில் இரு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு போராடி உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செய்யும் நிகழ்வு திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு லயன் சங்கம் சார்பில் நடைபெற்றது.

    முன்னாள் ராணுவ வீரர்கள் குழந்தைவேலு, ஜகபர் அலி ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் சங்கத் தலைவர் முகம்மது இக்பால்தீன், தங்கமணி, வட்டாரத் தலைவர் கண்ணன், சங்க உறுப்பினர்கள் கார்த்தி, பார்த்திபன், நவீன், அரசு வழக்கறிஞர் ஷர்மிலிபானு மற்றும் இரு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    1999-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரின் போது இந்திய விமானப்படை விமானி நச்சி கேட்டா விடுதலையாது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. #Kargilwar #Nachiketa
    சென்னை:

    பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் மீட்கப்பட வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அபிநந்தன் நேற்று பிடிபட்டதும் கார்கில் போரின் போது பாகிஸ்தானால் பிடிபட்ட நச்சிகேட்டா தான் நினைவுக்கு வருவார்.

    1999-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரின் போது இந்திய விமானப்படை விமானி நச்சிகேட்டா பாகிஸ்தான் வீரர்களால் பிடித்து செல்லப்பட்டார். சிறிது காலம் சிறை வாசம் அனுபவித்தவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். கார்கில் போரின்போது அவரது விமானத்தில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறு காரணமாக, விமானத்தை விட்டு வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டது.

    இதன் காரணமாகவே அவர் பிடிபட்டார். அப்போது நச்சி கேட்டாவுக்கு 25 வயது. மிக் ரக விமானத்தில் பாகிஸ்தான் மீது குண்டு மழை பொழிந்துகொண்டிருந்தார். அவரது விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் அதில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    சூழ்நிலையை அறிந்து கொண்ட நச்சிகேட்டா தன்னிடம் இருந்த கைத்துப் பாக்கியைக் கொண்டு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அதில் இருந்த குண்டுகள் தீர்ந்துவிடவே பாகிஸ்தானிடம் பிடிபட்டார்.

    பாகிஸ்தானில் இருந்த நாட்களை பற்றி நச்சிகேட்டா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது:-



    “பாகிஸ்தான் வீரர்களிடம் நான் சிக்கியது மோசமான தருணம். அவர்கள் என்னை கொலைகூட செய்து இருப்பார்கள். அவர்களை பொறுத்தவரை நான் அவர்கள் பகுதியில் தாக்குதல் நடத்திய எதிரி நாட்டு வீரன். ஆனால் என் நல்ல நேரம் அங்கு இருந்த உயர் அதிகாரி மிகவும் முதிர்ச்சியாக நடந்து கொண்டார். அந்த சூழலை புரிந்துகொண்டார்.

    வீரர்களை அவர் சமாதானப்படுத்தினார். அங்கிருந்த சூழலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த நேரத்தில் மரணம்தான் எனக்கு முன்பு இருந்த எளிமையான வழியாகத் தெரிந்தது. 3, 4 நாள்கள் மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையான சித்தரவதைகளுக்கு உள்ளானேன்’

    இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

    இந்தியா தரப்பில் இருந்து சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னரே பாகிஸ்தான் அவரை விடுவிக்க ஒப்புக்கொண்டது. 8 நாட்களுக்கு பின்னர் அவர் சர்வதேச செஞ்சிலுவை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார். வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்பட்டார்.

    தற்போது இந்திய விமானப்படையில் குரூப் கேப்டனாக பணிபுரிந்துவருகிறார். நச்சிகேட்டவை மீட்டது போன்று, உலக நாடுகளின் உதவியோடு அபிநந்தனையும் மீட்க முடியும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    ஜெனீவா ஒப்பந்தத்தின் படி, ‘சிறைபிடிக்கப்படும் வீரர்களையோ அல்லது சரணடையும் வீரர்களையோ காயப்படுத்தக் கூடாது. காயமடைந்த வீரர்களுக்கு உரிய மருத்துவசிகிச்சை அளிக்க வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட வீரர்களை கொல்ல கூடாது.

    விசாரணையின்றி அவர்களுக்கு தண்டனையும் வழங்கக்கூடாது. அதே போல் 7 நாள்களுக்குள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்‘ என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் 196 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. #Kargilwar #Nachiketa #IndiaPakistanWar
    புதுவையில் இருந்து கார்கில் போருக்கு உத்தரவிட்ட பிரதமர் வாஜ்பாய் எடுத்த அதிரடி நடவடிக்கையால் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரியான பாடம் கற்றுக்கொண்டது. #AtalBihariVajpayee
    புதுச்சேரி:

    வாஜ்பாய் 1999-ல் பிரதமராக இருந்த போது, கார்கில் போர் நடந்தது. அந்த போரில் இந்தியா மாபெரும் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டியது. இந்தியாவின் அந்த சாதனைக்கு சொந்தக்காரர் வாஜ்பாய்.

    இந்தியாவில் காஷ்மீரில் சில பகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அப்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த மு‌ஷரப் கார்கில் பகுதியில் ரகசியமாக படைகளை ஊடுருவ செய்தார்.

    இது, இந்திய ராணுவத்துக்கு தெரியாது. மே 3-ந் தேதி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஊடுருவி இருப்பதை ஆடு மேய்ப்பவர்கள் பார்த்து விட்டு இந்திய ராணுவத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    மே 5-ந் தேதி இது, உண்மைதானா? என்பதை கண்டறிவதற்காக 5 ராணுவ வீரர்கள் அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டனர். அவர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து சித்ரவதை செய்து கொன்றனர்.

    இதன் பின்னர் மேலும் ஆய்வு செய்த போது, பாகிஸ்தான் வீரர்கள் கார்கிலில் உள்ள டராஸ், காக்சர், முஷ்கோக் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் புகுந்திருப்பது தெரிய வந்தது.

    அப்போது பிரதமர் வாஜ்பாய் தலைநகரத்தில் இல்லை. அவர் புதுவைக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்திருந்தார். இங்கு கவர்னர் மாளிகையில் தங்கி இருந்தார்.

    டெல்லியில் இருந்து அவருக்கு பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி இருப்பதை உறுதி செய்து தகவல் வந்தது.

    உடனே பிரதமர் வாஜ்பாய் உறுதியான நடவடிக்கைகளை தொடங்கினார். எந்த தயக்கத்தையும் காட்டாத அவர், பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று உடனடி முடிவுக்கு வந்தார்.

    அவர் புதுவையில் இருந்தபடியே போர் உத்தரவை பிறப்பித்தார். அடுத்த வினாடி இந்திய விமானப் படைகள் தாக்குதலை தொடங்கின.

    அடுத்து டெல்லிக்கு உடனடியாக சென்ற பிரதமர் போர் நடவடிக்கைகளை தீவிரமாக்கினார்.

    தொடர்ந்து தரைப்படைகளும் நேரடியாக சென்று எதிரிகளை எதிர்கொண்டது. கடுமையான போர் நடந்தது.

    வாஜ்பாய் காட்டிய துணிச்சலால் இந்திய ராணுவம் பாகிஸ்தான் படைகளை துவம்சம் செய்தது. இதனால் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கி ஓடின.



    ஜூலை 26-ந் தேதி போர் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. சுமார் 4 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

    அன்று பிரதமர் வாஜ்பாய் எடுத்த அதிரடி நடவடிக்கையால் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரியான பாடம் கற்றுக்கொண்டது. #AtalBihariVajpayee

    அரியலூர் மாவட்டத்தில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் சார்பில் கார்கில் போரில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    கார்கில் போரில் தம் இன்னுயிர் நீத்து நம்மையும் நம் நாட்டையும் காப்பாற்ற போராடிய ராணுவ வீரர் களுக்கு, மரியாதை செலுத்தும் விதமாக டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் சார்பாக கார்கில் விஜய் திவாஸ்- ஐ முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள டி.வி.எஸ். ஷோரூம்களில் கார்கில் காலிங் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன்படி, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில் கே.ஆர்.டி., டி.வி.எஸ். சார்பில், நடைபெற்ற ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கே.கே.சி. கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வான சின்னப்பன், போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் ராமதாஸ், அரிமா சங்க தலைவர் லயன் சக்தி ரவிச்சந்திரன், செயலாளர் கண்ணையன், காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், கே.ஆர்.டி., டி.வி.எஸ். நிறுவன ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தங்களது டி.வி.எஸ். மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்து ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், மரியாதை செலுத்தும் விதமாகவும் நாட்டுப்பற்றை தூண்டும் முழக்கங்களை முழங்கி கொண்டு வந்தனர்.

    இந்த ஊர்வலம் கே.ஆர்.டி., டி.வி.எஸ். ஷோரூமிலிருந்து பஸ் நிலையம், அண்ணாசிலை, கடைவீதி, டாக்டர் கருப்பையா நகர் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை நிறுவன பொது மேலாளர் ராஜேஷ்குமார், மேலாளர் சண்முகம் மற்றும் சர்வீஸ் மேலாளர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கே.ஆர்.டி., டி.வி.எஸ். நிறுவன உரிமையாளர் ராஜன் நன்றி கூறினார்.
    கார்கில் போரின் மகனை பறிகொடுத்து 19 ஆண்டுகளாகியும் இன்னும் நிவாரணம் வரவில்லை அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என பெற்றோர் உருக்கமாக தெரிவித்துள்ளனர். #KargilVijayDiwas
    டேராடூன்:

    கடந்த 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா கார்கில் பகுதியை மீட்டது. இந்த போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களில் உத்தரகாண்டை சேர்ந்த ராஜேஷ் கரங் என்பவரும் ஒருவர். கரங்கின் நினைவாக கிராமத்தில் அவரது சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    கார்கில் தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில் மகனின் சிலைக்கு மாலை அணிவித்த கரங்கின் பெற்றோர், “எங்களது மகனை இழந்து 19 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் நிவாரணம் எங்களது கைக்கு வந்து சேரவில்லை. இன்னொரு மகனுக்கு வேலை மற்றும் நிலம் வழங்கப்படும் என்ற அரசின் வாக்குறுதிகள் அப்படியே உள்ளது” என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
    ×