என் மலர்
குஜராத்
- நேற்று வீட்டில் பாஜக மகளிரணி நிர்வாகி தீபிகா படேல் தூக்கில் தொங்கினார்.
- தீபிகா படேல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலம் சூரத்தில் 30-வது வார்டு பாரதீய ஜனதா கட்சியின் மகிளா மோர்ச் பிரிவு தலைவராக தீபிகா படேல் (வயது34) என்பவர் இருந்து வந்தார். இவரது கணவர் விவசாயியாக உள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று வீட்டில் தீபிகா படேல் தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீபிகா படேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் அழைப்புகளை பட்டியல் சேகரித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
தீபிகா படேல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலோர காவல்படை கப்பல்கள் இயங்கும் வீடியோக்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை வாட்சப் மூலம் பகிர்ந்துள்ளார்.
- இவ்வாறு கடந்த 7 மாதங்களில் மொத்தம் ரூ.42,000 யுபிஐ மூலம் பெற்றுள்ளார்.
குஜராத்தில் இந்திய கடலோர காவற்படை குறித்த தகவல்களைப் பாகிஸ்தான் உளவாளிக்குத் தினமும் ரூ.200 க்கு விற்ற நபரை குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையினர் (ATS) கைது செய்துள்ளனர்.
குஜராத்தின் கடலோர நகரமான துவாரகாவில் பணிபுரிந்து வந்த திபேஷ் கோஹில் என்ற நபர், பாகிஸ்தான் கடற்படை அதிகாரி அசிமாவுக்கு பேஸ்புக்கில் பரீட்சயமாகியுள்ளார்.
துவாரகாவில் உள்ள ஓகா பகுதியிலிருந்து முக்கியமான புகைப்படங்களை கோஹில் பாகிஸ்தானுக்குச் சேகரித்து அனுப்பியதாக ATS தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள உளவாளிக்கு கோஹில் அனுப்பியதில் பெரும்பாலான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இந்திய கடலோர காவல்படை பற்றியது என்று ATS தெரிவித்துள்ளது.
ஓகா துறைமுகத்தில் உள்ள கடலோர காவல்படை கப்பல்கள் இயங்கும் வீடியோக்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை கோஹில் வாட்சப் மூலம் பாகிஸ்தானுக்கு பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய குஜராத் ஏடிஎஸ் அதிகாரி கே சித்தார்த், ஓகாவைச் சேர்ந்த ஒருவர் கடலோரக் காவல்படை பற்றிய விவரங்களை வாட்ஸ்அப் மூலம் பாகிஸ்தானின் கடற்படை அல்லது ஐஎஸ்ஐ (இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ்) முகவருடன் பகிர்ந்து கொண்டதாக எங்களுக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது.

இதுதொடர்பான விசாரணையில் ஓகாவில் வசிக்கும் திபேஷ் கோஹிலை கைது செய்தோம். தீபேஷ், பாகிஸ்தானில் தொடர்பிலிருந்தவர் என்று உறுதிப்படுத்தியுள்ளோம். சொந்தமாக வங்கிக்கணக்கு இல்லாத தீபேஷ் தனது நண்பர் கணக்கில் ஒவ்வொரு நாளும் ரூ.200 வீதம் அனுப்பப்பட்ட பணத்தைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு கடந்த 7 மாதங்களில் மொத்தம் ரூ.42,000 யுபிஐ மூலம் பெற்றுள்ளார். தீபேஷ் மீது கிரிமினல் சதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக செயல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- டியூசன் முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்
- ரெயிலில் மாற்றுத்திறனாளி பெட்டிகளில் பயணிக்கும் பெண்களையே இவர் குறிவைத்துள்ளார்.
குஜராத்தில் 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
கடந்த நவம்பர் 14 ஆம் தேதி குஜராத் உத்வாடா ரயில் நிலையத்திற்கு அருகே செல்லும் தண்டவாளத்திற்கு அருகில் 19 வயது இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தடயவியல் பரிசோதனையில் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலை தொடர்பாக வல்சாத் மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. உத்வாடா ரெயில் நிலைய சிசிடிவிகள் ஆராயப்பட்டன. பெண்ணின் உடல் அருகே மீட்கப்பட்ட அதே மாதிரியான ஆடைகளை அணிந்த நபர் ஒருவர் கொலை நடந்ததற்குப் பின்னர் ரெயில் நிலையத்தில் அமர்ந்து உணவு சாப்பிடுவது சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

அந்த சந்தேகத்துக்கிட்டமான நபரை தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டன. தேடுதல் வேட்டையின் இறுதியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி குஜராத்தின் வல்சாத்தில் உள்ள வாபி ரயில் நிலையத்திலிருந்து கைது செய்யப்பட்டார். அந்த நபர் ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கை சேர்ந்த ராகுல் கரம்வீர் ஜாட் என்று கண்டறியப்பட்டது.

கொலை நடந்த அன்றைய தினம் அப்பகுதியில் தான் வேலை செய்த ஓட்டலில் தனது சம்பளத்தை வாங்குவதற்காக வந்திருந்த அவர் டியூசன் முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு ரெயில் நிலையத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார் . அந்த பெண் தனது செல்போனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது தன்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்ததாக கருதி அவரை கொலை செய்ததாக ராகுல் தெரிவித்துள்ளார்.
ராகுல் கரம்வீர் ஜாட் இந்த ஒரு கொலை மட்டுமல்லாது குறைந்தது 5 பேரை கொலை செய்ததைப் போலீசிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கைது செய்யப்படும் நவம்பர் 24 ஆம் தேதிக்கு முந்தைய தினம் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவரிடம் கொள்ளையடித்து அவரை கொலை செய்திருக்கிறார்.
கடந்த அக்டோபர் இறுதியில் மகாராஷ்டிராவில் சோலாப்பூர் ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் மேற்கு மேற்கு வங்காளம் ஹவுரா ரெயில் நிலையம் அருகே காதிஹார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பீடி கேட்டு குடுக்கவில்லை என முதியவர் ஒருவரை கொலை செய்துள்ளார். கர்நாடகா மாநிலம் முல்கி பகுதியில் ரெயில் பயணி ஒருவரை கொலை செய்துள்ளார்.
பெரும்பாலும் ஒரு இடத்தில் இருக்காமல் பயணித்துக் கொண்டே இருப்பதால் அவரை பிடிப்பதில் அந்தந்த மாநில காவல்துறையினருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சமயங்களில் ரெயில் நிலைய நடைமேடைகளிலேயே அவர் இரவில் தூங்கியுள்ளார்.
சுமார் 2000 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த பின்னர் அவர் தற்போது போலீசில் சிக்கியுள்ளார். ரெயிலில் மாற்றுத்திறனாளி பெட்டிகளில் பயணிக்கும் பெண்களையே இவர் குறிவைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜோத்பூர் மத்திய சிறையில் இருந்த இவர் இந்த ஆண்டு சமீபத்தில்தான் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
ராகுல் கரம்வீர் ஜாட்-டின் தந்தை காலமான பின்னர் குற்ற செயல்களில் ஈடுபட இவரை குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஐந்தாம் வகுப்பில் படிப்பை நிறுத்திவிட்டு, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் இவர் ஈடுபட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். தற்போது இவர் மீது 13 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- உணவு விஷயத்தில் அடிக்கடி தனது தாயுடன் மகன் காந்தி தகராறு செய்துள்ளார்.
- 85 வயது தாய் தனது மகனுடன் தங்குவதற்காக ஆறு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்துள்ளார்.
சாப்பாட்டில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தாயை மகன் பாத்திரத்தால் தலையில் அடித்து கொலை செய்த் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் உத்னா-மக்தல்லா சாலையில் உள்ள பஞ்சஷீல் நகரில் வசித்து வரும் காந்தி பிஸ்வால் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் ஜவுளி தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
காந்தியின் 85 வயது தாய் தனது மகனுடன் தங்குவதற்காக ஆறு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்துள்ளார். மகனும் மருமகளும் வேலைக்கு செல்லும் நிலையில் தாய் வீட்டில் சமையல் வேலைகளை செய்து வந்துள்ளார். உணவு விஷயத்தில் அடிக்கடி தனது தாயுடன் மகன் காந்தி தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் தாயுடன் உணவு தொடர்பாக வாக்குவாதம் செய்த காந்தி கோபத்தில் மசாலா பொடிக்கும் சிறிய அளவிலான அம்மி உரலை எடுத்து தாயின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியுள்ளது.
தாயார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காந்தி வீட்டை விட்டு ஓடியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் மூதாட்டியின் நிலையை பார்த்து கதோதரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் தப்பிச் சென்ற காந்தியை கைது செய்தனர். மூதாட்டியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காந்தியிடம் விசாரணை நடத்தி வருவதாக சூரத் டிசிபி விஜய்சிங் குஜ்ஜார் தெரிவித்தார்.
- உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார்.
- அதிகாரிகள் கடைக்கு வந்து மீட்டரை சரிபார்த்தனர்.
டெய்லர் கடைக்கு வந்த மின் கட்டணத்தை பார்த்தபோது கடை உரிமையாளருக்கு சில நிமிடங்கள் இதயமே நின்றது போல் ஆகிவிட்டது. குஜராத்தில் நடைபெற்றுள்ள இச்சம்பவத்தை குறித்து பார்ப்போம்...
வல்சாத் பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக பிரத்யேகமாக ஆடைகளை தைக்கும் கடையை நடத்தி வருபவர் முஸ்லீம் அன்சாரி. இவர் தனது மாமாவுடன் சேர்ந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கு வழக்கமாக இரண்டாயிரத்துக்குள் மின் கட்டணம் வரும். இதனை அவர் UPI மூலம் கட்டணம் செலுத்துவது வழக்கம்.
ஆனால் இந்த மாதம் வந்த மின் கட்டணமோ ரூ.86 லட்சம். தனது சொத்து மதிப்பை விட அதிகமாக வந்ததால் பேரதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார். அதனை தொடர்ந்து அதிகாரிகள் கடைக்கு வந்து மீட்டரை சரிபார்த்தனர்.
அப்போது அவர்கள் கண்டுபிடித்தது, மீட்டர் ரீடிங் எடுத்தவர் கூடுதலாக இரண்டு பூஜ்ஜியங்கள் பதிவிட்டதால் இந்த தொகை வந்தது தெரியவந்தது. இதையடுத்து சரியாக ரீடிங் எடுத்து பார்த்ததில் அவர் ரூ.1,540 மட்டுமே மின் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதுதொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலானது தொடர்ந்து அப்பகுதியில் அன்சாரி கடை பிரபலமாகி வருகிறது.
- அனைவரையும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வைத்தனர்
- மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் மருத்துவக்கல்லூரியில் சீனியர்களின் ராகிங் கொடுமையால் 18 வயது மாணவன் பரிதமபாக உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள தர்பூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை விடுதியில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. விடுதியில் தங்கியிருக்கும் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு சீனியர் மாணவர்கள் சிலர் முதலாமாண்டு மாணவர்களை அழைத்து, அவர்கள் அனைவரையும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது 18 வயதான அணில் மெதானியா என்ற மாணவர், திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை சக மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடதுக்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவனின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியறுதியள்ளனர்.
- ப்ரிஜேஷ் காணவில்லை என அவரது குடும்பம் போலீசில் புகார் அளித்தது.
- பண முதலீடுகள் தொடர்பாக ப்ரிஜேஷ் மன அழுத்தத்தில் இருந்தார்.
குஜராத்தில் தகனம் செய்யப்பட்ட நபர் மறுநாள் அவரின் வீட்டில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஜராத் மாநிலம் நரோதா பகுதியை சேர்ந்த ப்ரிஜேஷ் சுதர் என்ற 43 வயது நபர் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனார்.
இதைத்தொடர்ந்து ப்ரிஜேஷ் காணவில்லை என அவரது குடும்பம் போலீசில் புகார் அளித்தது. இந்நிலையில் அவர் காணாமல் போய் 2 வாரங்கள் கழித்து கடந்த நவம்பர் 10 ஆம் தேதி சபர்மதி பாலம் அருகே அழுகிய நிலையில் இருந்த ஒரு நடுத்தர வயது நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
உடலை அடையாளம் காண ப்ரிஜேஷ் குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டனர். அந்த நபரின் உடல் வாகு காணாமல் போன ப்ரிஜேஷை ஒத்திருந்ததால் அவர்தான் ப்ரிஜேஷ் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர். எனவே அந்த உடலுக்கு இறுதிச் சடங்கு செய்துள்ளனர்.
ஆனால் மறுநாளே [கடந்த வியாழக்கிழமை] வீட்டில் அவரது மறைவுக்கான பிரார்த்தனைக் கூட்டத்தின்போது ப்ரிஜேஷ் வந்ததைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ந்தனர். பண முதலீடுகள் தொடர்பாக ப்ரிஜேஷ் மன அழுத்தத்தில் வீட்டை விட்டு வெளியேறியது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே புதைக்கப்பட்டது யாருடைய உடல் என விசாரணை நடந்து வருகிறது.
- தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் எடுத்தன.
- ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 229 ரன்கள் எடுத்தன.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'டி' பிரிவு லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகம், ரயில்வேஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழகம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 229 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தமிழகம் முதல் இன்னிங்சில் 438 ரன்கள் எடுத்தன.
209 ரன்கள் பின்தங்கிய நிலையில், ரயில்வேஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. அந்த அணி 184 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதன்மூலம் தமிழகம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது தமிழகத்தின் முகமது அலிக்கு அளிக்கப்பட்ட்டது.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து.
- 700 கிலோ கடத்தல் மெத்தபெட்டமைனை கைப்பற்றியுள்ளன.
குஜராத்தில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்து, 700 கிலோவுக்கும் அதிகமான மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த பாதுகாப்பு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "போதையில்லா பாரதத்திற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையைப் பின்பற்றி, இன்று நமது ஏஜென்சிகள் ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்து, குஜராத்தில் சுமார் 700 கிலோ கடத்தல் மெத்தபெட்டமைனை கைப்பற்றியுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

உளவுத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட தகவலின் பேரில், சாகர் மந்தன் 4 என்ற பெயரில் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தேடுதல் வேட்டையின் போது, சந்தேகத்திற்குரிய வகையில் படகு ஒன்று கடற்படையால் அடையாளம் காணப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டது.
அதன்பிறகு அந்த படகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 700 கிலோ மெத்தாம்பெட்டமைன் கண்டுபிடிக்கப்பட்டு, கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையை தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்திய கடற்படை மற்றும் குஜராத் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு படை ஆகியவை இணைந்து மேற்கொண்டன.
- விஸ்தாராவை ஏர்இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு இதில் 25.1 சதவீதம் பங்கு உள்ளது.
- நேற்றுடன் விஸ்தாரா விமான சேவைகள், ஏர்இந்தியா விமான சேவையாக மாற்றப்பட்டுள்ளது.
விஸ்தாரா விமான நிறுவனம் டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைவதற்கான வேலைகளை நடைபெற்று வந்தன. அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்றிரவு விஸ்தாரா விமானங்கள் அனைத்தும் ஏர்இந்தியா விமானங்களாக சென்றன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து விஸ்தாரா விமானம் டெல்லிக்கு தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து விமான நிலைய ஸ்டாஃப்கள் ஒன்றாக நின்று விமானத்திற்கு பிரியாவிடை கொடுத்தனர்.
ஏர்இந்தியா-விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைந்த பின் முதல் விமானம் தோஹாவில் இருந்து மும்பைக்கு நேற்றிரவு புறப்பட்டது. இரண்டு நிறுவனங்களும் இணைந்த பிறகு முதல் சர்வதேச விமான சேவை இதுவாகும்.
நள்ளிரவு 1.30 மணிக்கு மும்பையில் இருந்து டெல்லிக்கு ஏஐ2984 என்ற விமானம் புறப்பட்டது. இது உள்நாட்டிற்கான முதல் விமானம் ஆகும்.
விஸ்தாரா ஏர்இந்தியாவுடன் இணைந்த நிலையில், சிங்கப்பூர ஏர்லைன்ஸ் இதில் 25.1 சதவீத பங்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வெடி விபத்து காரணமாக 2 கி.மீ உயரத்துக்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.
- தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக 2 கி.மீ உயரத்துக்கு கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில், தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
- சஞ்சய் போல்ராவின் இந்த வினோதமாக ஏற்பாடு கிராம மக்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
- பல்வேறு முன்னேற்றங்களை தந்ததாக கருதிய சஞ்சய் போல்ரா தனது காரை குடும்பத்தில் ஒருவரைப் போல பாவித்தார்.
குஜராத்:
மனித வாழ்க்கையில் வித்தியாசமாக ஏதாவது செய்து வெளி உலகத்திற்கு தங்களை பிரபல படுத்திக் கொள்ள நினைக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .
வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளான நாய், பூனை, கிளி மற்றும் கால்நடைகள் இறந்து விட்டால் கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தி சிறப்பு பூஜைகளுடன் அடக்கம் செய்வது பல அபிமானிகளின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் அதைவிட ஒரு படி மேலே போய் விட்டார் இந்த தொழிலதிபர்.
குஜராத் மாநிலம் லத்தி தாலுகா பதர்ஷிங்கா கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் போல்ரா, பிரபல தொழிலதிபரான இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு தனது குடும்ப பயன்பாட்டிற்காக சொகுசு கார் ஒன்றை வாங்கினார். அந்த கார் ஷோரூமில் இருந்து தனது வீட்டுக்கு வந்ததில் இருந்து தனது வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்களை தந்ததாக கருதிய சஞ்சய் போல்ரா தனது காரை குடும்பத்தில் ஒருவரைப் போல பாவித்தார்.
அதிஷ்ட கார் தனக்கு அபரிமிதமான செழிப்பை கொண்டு வந்ததாகவும், தனது சமூக நிலையை உயர்த்தியதாகவும் நினைத்த சஞ்சய் போல்ரா 18 ஆண்டுகள் தன்னையும், குடும்பத்தினரையும் பத்திரமாக சுமந்த இந்த காரை யாருக்கும் கொடுத்து விடாமல் அடக்கம் செய்து சமாதி கட்ட தீர்மானித்தார்.
இதற்காக இரண்டாயிரம் அழைப்பிதழ்களை அச்சடித்தார். அழைப்பிதழை கிராம மக்கள் ஒவ்வொருருக்கும் வழங்கினார். அந்த அழைப்பிதழில் அவர் கூறியிருந்ததாவது:-
இந்த அதிர்ஷ்ட கார் கடந்த 2006-ம்ஆண்டு முதல் எங்கள் குடும்பத்தில் ஒருவரை போல இருந்தது. இந்த காரால் அபரிமிதமான செழிப்பையும் அந்தஸ்தையும் பெற்றோம். எனவே தான் இந்த கார் எங்கள் நினைவில் எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைத்து காருக்கு சமாதி கட்ட திட்டமிட்டுள்ளோம்.
நவம்பர் 7-ந்தேதி நடைபெறும் இந்த நிகழ்வுக்கு அனைவரும் வருகை தந்து எனது அதிர்ஷ்ட காருக்கு பிரியா விடை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அழைப்பிதழை பெற்றுக் கொண்ட கிராம மக்களும் தவறாமல் அடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களுக்கு பூரி, சப்பாத்தி, சப்ஜி, லட்டு என்று பிரமாதமாக தடபுடலாக விருந்தும் பரிமாறப்பட்டது.
அதிர்ஷ்ட கார் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓதி உரிய சடங்குகள் நடத்தி இறுதி அஞ்சலி செய்யப்பட்டது. பின்னர் அங்கு தோண்டப்பட்ட குழியில் அதிஷ்ட காரை அடக்கம் செய்தார் சஞ்சய் போல்ரா. இதில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டு நவம்பர் 7-ந்தேதி அதிர்ஷ்ட காரை அடக்கம் செய்துள்ள சமாதிக்கு சென்று தவறாமல் மலர் அஞ்சலி செலுத்துவோம். இதன் நினைவாக கார் சமாதியை சுற்றிலும் மரங்களை நட்டு பராமரிப்போம் என்றும் சஞ்சய் போல்ரா கூறினார்.
சஞ்சய் போல்ராவின் இந்த வினோதமாக ஏற்பாடு கிராம மக்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. அவரது சொந்த கிராமவாசியான விபுல் சோஜித்ரா கூறும்போது, கார் சமாதி விழாவுக்கு அவர் அழைத்த போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சிறு வயது முதலே நண்பர்களாக இருந்து வருகிறோம். அவர் தனக்கு அதிஷ்டத்தையும் சமூக அந்தஸ்தையும் தந்த அந்த காருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று பிரியப்பட்டார். அவரது ஆசை கிராம மக்கள் ஒத்துழைப்போடு நிறைவேறி உள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
எது எப்படியோ.... இருந்தாலும் இந்த வினோத ஏற்பாடுகள் கொஞ்சம் ஓவராக தான் தெரிகிறது என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.






