என் மலர்
டெல்லி
- ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் மூன்றாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
- ஜனநாயகத்தின் திருவிழாவை வெற்றிபெறச் செய்ய அனைத்து வாக்காளர்களும் முன்வந்து வாக்களிக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக கடந்த மாதம் 18-ந்தேதியும், 26 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக கடந்த மாதம் 25-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில் 3வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 40 தொகுதிகளில் காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் மூன்றாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
ஜனநாயகத்தின் திருவிழாவை வெற்றிபெறச் செய்ய அனைத்து வாக்காளர்களும் முன்வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் நண்பர்கள், பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பில் பங்கேற்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
- நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
- மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக தொழிற்சாலைகள் மற்றும் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டில் 15.66% தொழிற்சாலைகல் உள்ளன. தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக குஜராத் (12.25%), மகாராஷ்டிரா (10.44%), உத்தரப்பிரதேசம் (7.54%), ஆந்திரப்பிரதேசம் (6.51%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் தமிழ்நாட்டில் மட்டும் 15% தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா (12.84%), குஜராத் (12.62%), உத்தரப்பிரதேசம் (8.04%), கர்நாடகா (6.58%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

- 18 வயதான அதுல் குமாருக்கு தான்பாத் ஐஐடியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிடெக் படிப்பில் படிக்க இடம் கிடைத்தது.
- வறுமையால் குறிப்பிட்ட கால அவகாசத்தில் அவரது பெற்றோரால் கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை
தான்பாத் ஐஐடி-யில் படிக்க இடம் கிடைத்து, வறுமை காரணமாக கல்விக் கட்டணம் செலுத்தாததால் சேர்க்கை மறுக்கப்பட்ட பட்டியலின மாணவனுக்கு சீட் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதான அதுல் குமாருக்கு தான்பாத் ஐஐடியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிடெக் படிப்பில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வறுமை காரணமாக கல்விக் கட்டணமாக கட்டவேண்டிய ரூ.17,500 பணத்தை ஜூன் 24ஆம் தேதிக்குள் கட்ட அவரது பெற்றோர் தவறியதால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், எஸ்.சி. எஸ்.டி ஆணையம் என எங்கும் தீர்வு கிடைக்காததால் உச்ச நீதிமன்றத்தை அம்மாணவனின் தந்தை நாடியிருந்தார்.
இந்த வழக்கில், இவ்வளவு திறமையான மாணவன் படிப்பை கைவிடுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
அதுல் குமாரை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிடெக் படிப்பில் சேர்க்குமாறு தன்பாத் ஐஐடியிடம் உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவிட்டுள்ளது.
- அக்டோபர் 1 வரை புல்டோசர் நடவடிக்கைகளுக்கு இடைக் கால தடை அமலில் உள்ளது
- நாட்டின் குடிமக்களுக்கு உறைவிடமும் வாழ்வாதாராமும் மறுக்கப்படுவது அடிப்படை உரிமையை மீறும் செயல்
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட பாஜக ஆளும் வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பதம் சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகிறார்கள். குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வரும் அக்டோபர் 1 வரை புல்டோசர் நடவடிக்கைகளுக்கு இடைக் கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் இந்த உத்தரவை மீறி ஆங்காங்கே புல்டோசர் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் மும்பையில் தாராவி பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது என்று அங்கிருந்த மசூதியை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் கிளம்பினர். ஆனால் தாராவி மக்கள் பெரிய அளவிலான போராட்டம் நடத்தியதை அடுத்து அந்த முடிவு கைவிடப்பட்டது.
இதற்கிடையே அசாமில் காம்ரூப் [Kamrup] மாவட்டத்தில் கட்சுதொலி பதார் [ Kachutoli Pathar] கிராமத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு எனக்கூறி 47 குடும்பங்களின் வீடுகளை அரசு இடித்துள்ளது. ஆனால் அந்த நிலங்களின் உரிமையாளர்களிடம் பல வருடங்களுக்கு முன்பே அனுமதி பெற்றுத்தான் தாங்கள் அங்கு வசித்து வருகிறோம் என்று அம்மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காம்ரூப் மாவட்ட சுற்றுவட்டாரத்தில் அதே போல மக்கள் வசிக்கும் வீடுகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி இடிக்கப்பட்டுள்ளன.
எனவே வீடுகளை இழந்த கட்சுதொலி பதார் கிராமத்தை சேர்ந்த 47 குடும்பங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அனுமதி இல்லாமல் இடைக்காலத் தடை அமலில் உள்ளபோது வீடுகளை இடித்துள்ளதால் அசாம் அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. நாட்டின் குடிமக்களுக்கு அவர்கள் இருப்பதற்கான இடத்தையும், வாழ்வாதாரத்தையும் மறுப்பது சட்டப்பிரிவு 14, 15, 21 ஆகியவற்றின் கீழ் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகும் என்றும் உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
- திருப்பதி லட்டு விவகாரம் கோடான கோடி பக்தர்களின் உணர்வு சார்ந்த விஷயம்.
- சிறப்பு விசாரணை குழு முடிவு வெளியாகும் வரை காத்திருக்காமல் ஏன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்க வேண்டும்?
நாடு முழுவதும் உள்ள பக்தர்களை உலுக்கிய திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரிக்க கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.-யான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) முன்னாள் தலைவர் ஒய்வி சுப்பா ரெட்டி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.
அப்போது திருப்பதி தேவஸ்தானம் சார்பாக மனுத்தாக்கல் செய்ய சுப்பிரமணியன் சுவாமிக்கு அனுமதி அளித்தது யார்? ஆந்திர அரசு கேள்வி எழுப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில்,
திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு பொதுவெளியில் கருத்து வெளியிட்டது ஏன்? லட்டு சர்ச்சை குறித்து சிறப்பு குழு அமைக்கப்பட்டது என்றால் பொதுவெளியில் கருத்து வெளியிடுவதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், திருப்பதி லட்டு விவகாரம் கோடான கோடி பக்தர்களின் உணர்வு சார்ந்த விஷயம். இதில் அரசியல் கூடாது.
சிறப்பு விசாரணை குழு முடிவு வெளியாகும் வரை காத்திருக்காமல் ஏன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்க வேண்டும்?
கலப்பட நெய் தான் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதற்கு தெளிவான பதிலே இல்லை. பிரசாதத்தில் கலப்படம் இருப்பது உறுதியாக தெரியாத நிலையில் கருத்து வெளியிட்டது ஏன்? என்று கண்டனம் தெரிவித்தனர்.
கடவுள் விவகாரத்தில் ஆந்திர அரசு அரசியலை தள்ளி வைக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
- என்ன இது யா யா, இந்த யா யா எல்லாம் எனக்கு அலர்ஜி என்று கோபமாக பேசியுள்ளார்
- பொது நல மனுவில் ரஞ்சன் கோகாய் பெயரை குறிப்பிட்டது தலைமை நீதிபதியையே எதிர்ப்பதாகிறது
உச்சநீதிமன்றம் ஒன்றும் காபி ஷாப் இல்லை என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வக்கீலுக்கு பாடம் எடுத்த சம்பவம் நிகழ்ச்த்துள்ளது. இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் வக்கீல் ஒருவருடன் சட்டப்பிரிவு 32 இந்த கீழ் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றின் மீது சந்திரசூட் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
2018 தேதியுடைய அந்த மனுவில் அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை அந்த வக்கீல் குறிப்பிட்டுள்ளார். அதாவது, 2018 இல் இந்த வக்கீல் வாதாடிய அந்த பொதுநல வழக்கை அப்போதைய நீதிபதி ரஞ்சன் கோகாய் தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் அந்த மனுவில் எந்த தவறும் இல்லை என்பதால் அதை தள்ளுபடி செய்திருக்கக்கூடாது என்று தற்போது மீண்டும் அந்த வக்கீல் உச்சநீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனுவை சமர்ப்பித்துள்ளார். எனவே அதில் ரஞ்சன் கோகாய் பெயரை வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பொது நல மனுவில் ரஞ்சன் கோகாய் பெயரை குறிப்பிட்டது தலைமை நீதிபதியையே எதிர்ப்பதாகிறது என்று சந்திரசூட் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துப் பேசிய வக்கீல், சாதாரணமாகப் பேசுவதுபோல், 'யா [Yeah] யா [Yeah], அப்போதைய நீதிபதி ரஞ்சன் கோகாய்... மறுபரிசீலனை மனு..' என்று இழுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சந்திரசூட், உடனே அந்த வக்கீலை இடைமறித்து, 'இது ஒன்றும் காபி ஷாப் கிடையாது, என்ன இது யா யா, இந்த யா யா எல்லாம் எனக்கு அலர்ஜி, இதற்கு இங்கு அனுமதி கிடையாது' என்று கோபமாகக் கடிந்துகொண்டார். இதனால் நீதிமன்ற அவையே சற்று நேரம் சற்று நேரம் அமைதியில் மூழ்கியது.
- பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்கும் வரை உயிரை விடமாட்டேன்.
- காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பிரதமர் மோடி மீது எவ்வளவு வெறுப்பு வைத்துள்ளனர் என்பதை காட்டுகிறது- அமி்த் ஷா
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பாக இருக்கையில் அமரவைக்கப்பட்டார். முதலுதவி பெற்றதும் உடல்நிலை சரியானது.
பின்னர் மீண்டும் பேசத் தொடங்கினார். அப்போது பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்கும் வரை உயிரை விடமாட்டேன் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் அதுவரை உயிரோடு இருப்பேன் என கார்கே கூறியது அவமானகரமானது, அருவருப்பானது என அமித் ஷா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தனது பேச்சியின் மூலம் முற்றிலும் வெறுப்பாகவும், அவமானமாகவும் இருப்பதில் தன் தலைவர்களையும், கட்சியையும் விட சிறப்பாக செயல்பட்டார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பிரதமர் மோடி மீது எவ்வளவு வெறுப்பு வைத்துள்ளனர். எவ்வளவு பயப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறது. அவர்கள் பிரதமர் மோடியை பற்றி யோசித்து கொண்டிருக்கிறார்கள். கார்கேயின் உடல் தொடர்பாக, அவர் நீண்ட ஆயுட்காலம் ஆரோக்கியத்துடன் இருக்க பிரதமர் மோடி, நான் மற்றும் நாம் வேண்டிக்கொள்கிறோம். அவர்கள் நீண்ட காலம் வாழட்டும். 2047-ல் விக்சித் பாரத் உருவாவதை காணும் வகையில் வாழட்டும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மல்லிகார்ஜூன கார்கேயிடம் தொலைபேசி மூலம் உடல்நலம் குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
- தீபாவளிக்குள் குண்டும் குழியும் இல்லாத சாலை திட்டத்தை டெல்லி அதிஷி அரசு முன்னெடுத்துள்ளது.
- இன்று காலை 6 மணிக்கு அதிஷி மற்றும் அமைச்சர்கள் சாலைகளை ஆய்வு செய்தனர்.
டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள அதிஷி நேற்று அமைச்சர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது தீபாவளிக்குள் குண்டும் குழியும் இல்லாத வகையில் சாலைகள் தரம் உயர்த்தப்படும். டெல்லி அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையில் தெருவில் இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை அதிஷி உள்ளிட்ட டெல்லி மாநில மந்திரிகள் தெருக்களில் உள்ள மோசமான சாலைகள் குறித்த ஆய்வு மேற்கொண்டனர். அத்துடன் போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக டெல்லி மாநில முதல்வர் அதிஷி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் "ஒட்டுமொத்த டெல்லி அரசின் அமைச்சரவை காலை ஆறு மணியில் இருந்து சேதம் அடைந்த சாலைகளை ஆய்வு செய்தோம். மோடி மில் பிளைஓவர், என்.எஸ்.ஐ.சி. ஒக்லா, சிராக் டெல்லி போன்ற இடங்களில் சேதம் அடைந்த சாலைகளை சரி செய்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் "சாலைகள் மோசமான இருந்தன. மக்கள் சாலைகளில் உள்ள பள்ளத்தால் கடும் போக்குவரத்து நெருக்கடியை சந்தித்து வந்தனர். போர்க்கால அடிப்படையில் சாலைகளை சரி செய்ய வேண்டும் என நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அரவிந்த் கெஜ்ரிவால் வழிக்காட்டுதலின்படி தீபாவளிக்குள் பள்ளம் இல்லாத சாலைகள் என்பதை உறுதி செய்ய நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
டெல்லி மாநில மந்திரி சவுரப் பரத்வாஜ், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கிழக்கு டெல்லியில் உள்ள பத்பார்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக பரத்வாஜ் கூறுகையில் "டெல்லியில் அதிகமான மழை பெய்தது. இந்த பகுதியில் அனைத்து சாலைகளிலும் பள்ளம் இல்லாமல் உள்ளது. ஆனால், தண்ணீர் தேங்கியதால் 50 மீட்டர் சாலை சேதமடைந்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். நாங்கள் வீதியில் இறங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இதை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்றார்" எனக் கூறினார்.
வட கிழக்கு டெல்லி, யுமுனா விஹார், வாசிராபாத் சாலை போன்ற இடங்களில் மந்திரி கோபால் ராய் சாலைகளை ஆய்வு செய்தார். "எங்களுக்கு ஒரு குறிக்கோள் உள்ளது: டெல்லியில் உள்ள அனைத்து சாலைகளையும் சரிசெய்ய வேண்டும்" என்றார்.
முன்னதா,
டெல்லி முதலமைச்சர் அதிஷி நேற்று அமைச்சர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். டெல்லி தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறையினர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர், வருகிற தீபாவளி பண்டிகைக்கு முன் டெல்லியில் சாலைகளின் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "மழையால் பல சாலைகள் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. டெல்லி ஜல் போர்டு, பி.எஸ்.இ.எஸ்., டாடா பவர் போன்ற ஏஜென்சிகள் அந்தந்த பணிகளை மேற்கொண்டாலும், அதன்பிறகு சாலைகள் சீரமைக்கப்படாத காரணத்தால் உடைந்த சாலைகளால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
1,400 கி.மீ., பொதுப்பணித்துறை சாலைகள் முழுமையாக சேதமடைந்து, புனரமைப்பு தேவை, எந்தெந்த சாலைகள் 100-200 மீட்டருக்கு பகுதியளவு சேதமடைந்துள்ளன, எந்தெந்த சாலைகளில் சிறிய பள்ளங்கள் மட்டுமே உள்ளன, அவற்றை நிரப்ப வேண்டும் என விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.
திங்கள் கிழமை முதல், டெல்லி அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் டெல்லியின் தெருக்களில் இருக்கும். நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பல்வேறு பகுதிகளுக்கு பொறுப்பேற்றுள்ளோம், அங்கு நாங்கள் நேரில் சாலைகளை ஆய்வு செய்து தேவையான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.
அக்டோபர் மாதத்தில் மட்டும் 1,400 கி.மீ. சாலைகளை சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் இறுதிக்குள், அதாவது தீபாவளி பண்டிகைக்குள், டெல்லி மக்களுக்கு தரமான சாலைகளை இருப்பதை உறுதிப்படுத்த முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.
- அரசியலில் பெண்களின் குரலை வலுப்படுத்தும் நோக்கில் ஓராண்டுக்கு முன்பு இந்திரா தோழமை அமைப்பை தொடங்கினோம்.
- உண்மையான சமத்துவம் மற்றும் நீதிக்காக அதிக பெண்கள் அரசியலுக்கு தேவைப்படுகிறார்கள்.
புதுடெல்லி:
அரசியல் மற்றும் முடிவு எடுப்பதில் பெண்களுக்கும் சம பங்களிப்பு வழங்கும் வகையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் 'சக்தி அபியான்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டு உள்ளது. இதைப்போல அரசியல் அரங்கில் பெண்களின் குரலை வலுப்படுத்தவும், சமூகத்தில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தவும் 'இந்திரா தோழமை அமைப்பு' என்ற திட்டத்தையும் காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தி உள்ளது.
இந்த அமைப்புகள் மூலம் அதிக அளவில் பெண்கள் அரசியலில் அடியெடுத்து வைக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அழைப்பு விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
அரசியலில் பெண்களின் குரலை வலுப்படுத்தும் நோக்கில் ஓராண்டுக்கு முன்பு இந்திரா தோழமை அமைப்பை தொடங்கினோம். இன்று, இந்த முயற்சி பெண்களின் தலைமைத்துவத்துக்கான சக்திவாய்ந்த இயக்கமாக வளர்ந்துள்ளது. உண்மையான சமத்துவம் மற்றும் நீதிக்காக அதிக பெண்கள் அரசியலுக்கு தேவைப்படுகிறார்கள்.
எனவே உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆர்வமாக இருக்கும் பெண்கள் அனைவரும் சக்தி அபியான் திட்டத்தில் சேர்ந்து பெண்களை மையமாக கொண்ட அரசியலில் தீவிர பங்கேற்பாளர்களாக மாறுங்கள்.இதன் மூலம், வலுவான அடிமட்ட அமைப்புகளை உருவாக்குவதற்கும், அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் நீங்கள் பங்களிப்பீர்கள். எங்களுடன் இணைந்து இன்றே http:shaktiabhiyan.in-ல் பதிவு செய்யுங்கள். கிராமம் முதல் ஒட்டுமொத்த தேசம் வரை இணைந்தே மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
இவ்வாறு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
- பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் மசோதா ஆகும்.
- மாநில விவகாரங்களை கையாளும் இந்த மசோதாவும் 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும்.
புதுடெல்லி:
பாராளுமன்றம், சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த ராம்நாத் கோவிந்த் கமிட்டி அளித்த அறிக்கைக்கு மத்திய மந்திரி சபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அத்துடன் இந்த குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த சுமார் 18 அரசியல் சாசன திருத்தங்களை மேற்கொள்ள இந்த கமிட்டி பரிந்துரைத்து இருந்தது.
எனவே இதற்காக 3 மசோதாக்களை பாராளுமன்றத்தில் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் அரசியல் சாசனத்தை திருத்த வகை செய்யும் 2 மசோக்களும் அடங்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இதில் முதலாவது திருத்த மசோதாவானது, பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் மசோதா ஆகும்.
இந்த மசோதா மூலம் அரசியல் சாசனப்பிரிவு 82 ஏ-ல் திருத்தம் (மக்களவை, சட்டசபைகளின் பதவிக்காலத்தை ஒன்றாக முடித்தல் மற்றும் தேதி) செய்யப்படும். மேலும் அரசியல் சட்டப்பிரிவு 83 (2)-லும் இதன் மூலம் திருத்தம் (மக்களவை பதவிக்காலம் மற்றும் கலைப்பு) மேற்கொள்ளப்படும்.
இதைப்போல சட்டசபைகளைக் கலைப்பது மற்றும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற சொற்களைச் சேர்ப்பதற்காக சட்டப்பிரிவு 327-ஐ திருத்துவது தொடர்பான விதிகளும் இதில் உள்ளன.
இவ்வளவு திருத்தங்களை மேற்கொள்ள வகை செய்யும் இந்த முதலாவது திருத்த மசோதாவுக்கு 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும்.
2-வது திருத்த மசோதா வாக்காளர் பட்டியல் தொடர்பானது ஆகும். அதாவது உள்ளாட்சி தேர்தல்களுக்காக மாநில தேர்தல் ஆணையங்களுடன் கலந்தாலோசித்து தேர்தல் கமிஷனால் பொது வாக்காளர் பட்டியலை தயாரிப்பது தொடர்பாக அரசியலமைப்பு விதிகளை திருத்த வழிவகை செய்கிறது.
இந்த திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களுடன், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் உருவாக்கும்.
மாநில விவகாரங்களை கையாளும் இந்த மசோதாவும் 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
3-வது மசோதா சாதாரணமானது ஆகும். இது சட்டசபை கொண்ட புதுச்சேரி, டெல்லி, காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களை கையாளும் சட்ட வழிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்படுகிறது.
இது வழக்கமான மசோதா என்பதால் மாநிலங்களின் ஒப்புதல் தேவை இல்லை.
இவ்வாறு 3 மசோதாக்களின் தயாரிப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மல்லிகார்ஜூன கார்கே காஷ்மீரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
- கார்கே பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டு இருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி சரிந்தார்
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று காஷ்மீரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கதுவா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றிக்கொண்டு இருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி சரிந்தார். அருகில் நின்ற நிர்வாகிகள், அவரை தாங்கிப்பிடித்து இருக்கையில் அமர வைத்தனர், பின்னர் டாக்டர் வரவழைக்கப்பட்டு அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, மல்லிகார்ஜூன கார்கேயிடம் உடல்நலம் விசாரித்தார். அவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் பேசியதாகவும் அப்போது விரைவில் உடல்நலம் தேற வாழ்த்தியதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக டாக்டர் சிகிச்சை அளித்தபின் மயக்கம் தெளிந்து மீண்டும் பேசிய கார்கே, பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை சாகமாட்டேன் எனக்கூறியது குறிப்பிடத்தக்கது.
- டெல்லியில் சாலைகளின் தரம் உயர்த்தப்படும்.
- உடைந்த சாலைகளால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
டெல்லி முதலமைச்சர் அதிஷி இன்று அமைச்சர்கள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். டெல்லி தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறையினர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர், வருகிற தீபாவளி பண்டிகைக்கு முன் டெல்லியில் சாலைகளின் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "மழையால் பல சாலைகள் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. டெல்லி ஜல் போர்டு, பி.எஸ்.இ.எஸ்., டாடா பவர் போன்ற ஏஜென்சிகள் அந்தந்த பணிகளை மேற்கொண்டாலும், அதன்பிறகு சாலைகள் சீரமைக்கப்படாத காரணத்தால் உடைந்த சாலைகளால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்."
"1,400 கி.மீ., பொதுப்பணித்துறை சாலைகள் முழுமையாக சேதமடைந்து, புனரமைப்பு தேவை, எந்தெந்த சாலைகள் 100-200 மீட்டருக்கு பகுதியளவு சேதமடைந்துள்ளன, எந்தெந்த சாலைகளில் சிறிய பள்ளங்கள் மட்டுமே உள்ளன, அவற்றை நிரப்ப வேண்டும் என விரிவான ஆய்வு நடத்தப்பட்டது."
"திங்கள் கிழமை முதல், டெல்லி அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் டெல்லியின் தெருக்களில் இருக்கும். நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பல்வேறு பகுதிகளுக்கு பொறுப்பேற்றுள்ளோம், அங்கு நாங்கள் நேரில் சாலைகளை ஆய்வு செய்து தேவையான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்."
"அக்டோபர் மாதத்தில் மட்டும் 1,400 கி.மீ. சாலைகளை சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் இறுதிக்குள், அதாவது தீபாவளி பண்டிகைக்குள், டெல்லி மக்களுக்கு தரமான சாலைகளை இருப்பதை உறுதிப்படுத்த முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று தெரிவித்தார்.






