என் மலர்tooltip icon

    டெல்லி

    • விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் தெரிவித்தது.
    • சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ளது.

    கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக த.வெ.க. கட்சி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் தெரிவித்தது.

    சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    • சிகரெட்டின் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு சிகரெட்டுக்கும் ரூ.2.10 முதல் ரூ.8.50 வரை கலால் வரி விதிக்கப்படுகிறது.
    • கூடுதல் கலால் வரி விதிப்பின் காரணமாக, நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் சந்தை 68 சதவீதம்வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1 நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்தது. அப்போது முதல் சிகரெட், புகையிலை பொருட்கள், பான் மசாலா உள்ளிட்டவை பாவ பொருட்கள் என வகைப்படுத்தப்பட்டு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு (2025) இறுதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புகையிலை உள்ளிட்ட பாவ பொருட்களுக்கான வரி திருத்தியமைக்கப்பட்டது. அதன்படி சிகரெட், புகையிலை மீதான ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும் நடப்பு ஆண்டு (2026) பிப்ரவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் சிகரெட், புகையிலைப் பொருட்கள், பான் மசாலா மீது விதிக்கப்பட்ட கூடுதல் கலால் வரியுடன் கூடிய 40 சதவீத ஜி.எஸ்.டி. வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இப்புதிய முறைப்படி பாக்கெட்டில் குறிப்பிடப்பட்ட சில்லறை விற்பனை விலையை அடிப்படையாகக் கொண்டு ஜி.எஸ்.டி. வரி கணக்கிடப்படவுள்ளது.

    பான் மசாலா உற்பத்தியாளர்கள், இன்று முதல் சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் சட்டத்தின் கீழ் புதிய பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். உற்பத்தி நிறுவனங்கள், அனைத்து பேக்கிங் எந்திரங்களையும் உள்ளடக்கும் வகையில் செயல்படும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும். அந்த காணொலிப் பதிவுகளை குறைந்தது 24 மாதங்கள் பாதுகாக்க வேண்டும்.

    சிகரெட்டின் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு சிகரெட்டுக்கும் ரூ.2.10 முதல் ரூ.8.50 வரை கலால் வரி விதிக்கப்படுகிறது. 65 மி.மீ. நீளமுள்ள சிகரெட் ஒன்றுக்கு ரூ.2.10 வரையிலும், 70 மி.மீ நீளமுள்ள சிகரெட் ஒன்றுக்கு 4 ரூபாயும், 75 மி.மீ நீளமுள்ள சிகரெட் ஒன்றுக்கு 5.4 ரூபாய் அளவிலும் உயர்த்தப்படுகிறது. இது புதிதாக அமல்படுத்தப்படவுள்ள 40 சதவீத ஜி.எஸ்.டி. வரியை தவிர்த்து விதிக்கப்படும்.

    மென்று தின்னும் புகையிலைக்கு 82 சதவீதம் கலால் வரியும் குட்காவுக்கு 91 சதவீதம் கலால் வரியும் பான் மசாலாவுக்கு 88 சதவீதம் கலால் வரிவிதிக்கப்பட உள்ளது. கிரிசில் ரேட்டிங்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, கூடுதல் கலால் வரி விதிப்பின் காரணமாக, நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் சந்தை 68 சதவீதம்வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அரசு உறுதியாக இருப்பதன் அடிப்படையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.
    • பட்ஜெட்டின் 'B' பிரிவில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அடுத்த நிதியாண்டுக்கான (2026-27) மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் இயங்காது. ஆனால் இந்த பட்ஜெட்டுக்காக இன்றைய தினம் பாராளுமன்றம் செயல்படுகிறது.

    ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. 1999-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளான 28-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது. இதனால் பட்ஜெட் தாக்கலை ஒரு நாள் முன்பாக சனிக்கிழமைக்கு மாற்றினார்கள். அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்தார்.

    ஆனால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் முறைப்படி பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அரசு உறுதியாக இருப்பதன் அடிப்படையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

    தொடர்ச்சியாக 9-வது முறையாக பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மேலும் ஒரே பிரதமரின் கீழ் 9-வது முறையாக நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் வெவ்வேறு காலக்கட்டங்களில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருந்தாலும், தொடர்ச்சியாக அதிக பட்ஜெட்களை (9 முறை) தாக்கல் செய்தவர் என்ற சாதனையை நிர்மலா சீதாராமன் தற்போது எட்டுகிறார்.

    இதனிடையே, நீண்ட கால நடைமுறையை மாற்றி, பட்ஜெட்டின் 'B' பிரிவில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
    • தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தையில் சிறப்பு வர்த்தகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    இதையொட்டி நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டன.

    இந்நிலையில், மத்திய அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், இன்றைய தினம் சிறப்பு வர்த்தக நாளாக தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ), மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) அறிவித்துள்ளன. அதன்படி, இன்று காலை 9.15 மணி முதல் மாலை 3.30 மணி வரை பங்குச்சந்தைகளில் வர்த்தகம் வழக்கம்போல நடைபெறும்.

    கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக மத்திய பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.

    தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த மாநிலங்களுக்கு புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

    தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது

    • அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன.
    • பிரதமர் மோடியின் 2017 ஜூலை மாத இஸ்ரேல் பயணம் உண்மை.

    அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2019 இல் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டவர் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன்

    இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை நேற்று லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்கள், ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது.

    அதில் அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, நியூ யார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    ரஷிய பெண்களுடன் உறவு வைத்து பால்வினை நோயால் பில் கேட்ஸ் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார் என புதிய கோப்புகளில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு

    அதேநேரம் தற்போது வெளியிடப்பட்டுள்ள எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோப்பில் இடம்பெற்றுள்ள எப்ஸ்டீனின் மின்னஞ்சல் ஒன்றில், பிரதமர் மோடியின் பெயர் மற்றும் அவர் 2017 இல் மேற்கொண்ட இஸ்ரேல் பயணம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளது.

    இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் "அந்த மின்னஞ்சலில் பிரதமர் மோடியின் 2017 ஜூலை மாத இஸ்ரேல் பயணம் குறித்த உண்மைத் தகவலைத் தவிர, மற்ற அனைத்தும் ஒரு குற்றவாளியின் தரம் குறைந்த கற்பனைகளே.

    இதற்கு எள்ளளவும் முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை; இதை மிகுந்த அருவருப்புடன் நிராகரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.   

    • உனது மகன்களை கொலை செய்து விடுவேன் என்று விஜித் இளம்பெண்ணிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.
    • சிறுவனின் கண்கள் பிடுங்கப்பட்டு, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    வடகிழக்கு டெல்லி சாஸ்திரி பூங்கா பகுதியை சேர்ந்த கணவரை இழந்த ஒரு இளம்பெண்ணை வஜித் என்பவர் கடந்த 2020-ம் திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கு முதல் கணவருடன் ஏற்கனவே 3 மகன்கள் இருந்தனர்.

    மகன்கள் உடன் இருப்பது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் விடுதியில் இருந்து வீட்டுக்கு வந்த மகன்களை மீண்டும் விடுதியில் சேர்த்து விடுமாறு மனைவியிடம் விஜித் தகராறு செய்துள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. உனது மகன்களை கொலை செய்து விடுவேன் என்று விஜித் இளம்பெண்ணிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து இளம்பெண்ணின் 7-ம் வகுப்பு படிக்கும் 2-வது மகனான அல்தமாஷ் (12) நேற்று காலையில் பள்ளிக்குச் சென்றான். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவனை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் வஜித், அல்தமாசின் மூத்த சகோதரர் அமானுக்கு போன் செய்து அல்தமாசை கொலை செய்து விட்டதாகவும் அவனது உடலை காட்டுப் பகுதியில் சென்று எடுத்து கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

    உடனே குடும்பத்தினர் பதறி அடித்து அங்கு சென்று பார்த்த போது சாலையோர புதரில் சிறுவன் அல்தமாஷ் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தான். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறும்போது சிறுவனின் வளர்ப்பு தந்தை, பள்ளியில் இருந்து அவனை அழைத்துச் சென்று கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாக தாக்கி உள்ளார்.

    மேலும் சிறுவனின் கண்கள் பிடுங்கப்பட்டு, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கொலை செய்த வஜித் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.

    இது குறித்து கொலையுண்ட மகனின் தாய் கூறும்போது, தனது கணவர் மீது ஏற்கனவே குடும்ப வன்முறை புகார் அளித்ததாகவும், ஆனால் தன்னையும் தனது 3 மகன்களையும் துன்புறுத்துவதை நிறுத்துவதாக அவர் உறுதியளித்ததை அடுத்து, அந்தப் புகாரை வாபஸ் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் 2 நாட்களுக்கு முன்பு, எங்களுக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டது. அப்போது நான் அவரை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னேன். இதனால் கோபமடைந்த அவர் எனது மகனை கொடூரமாக கொலை செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கல்விச்செலவை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளும் இருக்கலாம்.
    • தமிழ்நாட்டுக்கு புதிய ரெயில் திட்டங்கள், சாலை மேம்பாட்டு திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், என்னென்ன அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    மத்திய அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    பொருளாதார ஆய்வறிக்கையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

    இதனால் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாடு, வேளாண் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் இருக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாடு என்பதை பொறுத்தமட்டில் ஏழை எளிய மக்களுக்கு வீட்டுவசதிகளை செய்து கொடுப்பது தொடர்பான அறிவிப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடுகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என தெரிகிறது.

    அதேபோன்று மருந்து பொருட்களில் அரசின் கவனம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. சுகாதாரத்தில் நவீனத்துவம் பற்றிய அறிவிப்புகள் இருக்கும் என தெரிகிறது. கல்விச்செலவை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளும் இருக்கலாம்.

    வருமான வரி விதிப்பு வரம்பை பொறுத்தமட்டில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என கூறப்படுகிறது. அதேநேரத்தில் பழைய வரி முறையில் பெரிய மாற்றங்களைச் செய்வதற்குப் பதிலாக, புதிய வரி முறையை நோக்கி அரசாங்கம் செல்லக்கூடும் என வரி நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி. கட்டமைப்பில் செய்யப்பட்ட சீர்திருத்தம் காரணமாக கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் விலை குறைந்தது.

    இதனால், பட்ஜெட்டில் இந்த பொருட்கள் மீதான விலைத்தாக்கம் பெரிய அளவில் ஏற்றமாகவோ, இறக்கமாகவோ இருக்காது என கூறப்படுகிறது.

    தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த மாநிலங்களுக்கு புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

    குறிப்பாக தமிழ்நாட்டுக்கு புதிய ரெயில் திட்டங்கள், சாலை மேம்பாட்டு திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்திருப்பதால் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து எழுச்சி பெறும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

    • நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நாப்கின்களை இலவசமாக வழங்குவது கட்டாயம்.
    • மாணவிகளுக்கென தண்ணீர் வசதியுடன் கூடிய தனி கழிப்பறையை உறுதிசெய்ய வேண்டும்.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை, நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தக் கோரி ஜெயா தாக்கூர் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், வாழ்வுரிமை என்பது மாதவிடாய் காலத்தில் உடலை சுகாதாரமாக பராமரிப்பதையும் உள்ளடக்கியது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நாப்கின்களை இலவசமாக வழங்குவது கட்டாயம். மாணவிகளுக்கென தண்ணீர் வசதியுடன் கூடிய தனி கழிப்பறையை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதன் மூலம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் அளவிடப்படுகிறது. இதுதொடர்பாக 3 மாதத்துக்குள் இணக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • ராகுல் காந்தியை அனைவருக்கும் பிடிக்கும், எனக்கும் அவரிடம் மாற்றுக் கருத்து இல்லை
    • நான் ஒரு காங்கிரஸ்காரன், கட்சியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சசி தரூர், ராகுல் காந்தியை தெளிவான பார்வை கொண்ட தலைவர் என்றும், மதவாதத்திற்கு எதிரான நாட்டின் வலுவான குரல்என்றும் பாராட்டியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சசி தரூர் இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

    சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, தமக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் பேசித் தீர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    ராகுல் காந்தியை பொறுப்புள்ள மற்றும் தெளிவான பார்வை கொண்ட தலைவர் என பாராட்டிய சசி தரூர், "மதவாதம், வெறுப்பு அரசியல் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராகுல் காந்தியை அனைவருக்கும் பிடிக்கும், எனக்கும் அவரிடம் மாற்றுக் கருத்து இல்லை" என்று கூறினார்.

    தனது கருத்துக்கள் பாஜகவிற்கு ஆதரவாக ஊடகங்களால் தவறாகச் சித்தரிக்கப்பட்டதாகவும் நாட்டின் நலன் சார்ந்த விஷயங்களில் மட்டுமே தான் அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாக அவர் கூறினார்.

    மேலும், "நான் ஒரு காங்கிரஸ்காரன், கட்சியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். வரும் கேரளா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்காக முழுமையாகப் பணியாற்றுவேன்" என்று தெரிவித்தார். 

    • SWAT சிறப்பு ஆயுத பிரிவில் கமாண்டோவாகப் பணியாற்றி வந்தார்.
    • உடற்பயிற்சி செய்யும் டம்பல் கொண்டு காஜலைத் தாக்கியதுடன், அவரது தலையைச் சுவரில் மோதியுள்ளார்.

    கணவரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட டெல்லி பெண் காவலர் ஒருவர், மருத்துவமனையில் ஐந்து நாட்கள் உயிருக்கு போராடி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    உயிரிழந்தவர் 27 வயதான காஜல் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவான SWAT சிறப்பு ஆயுதப்படைபப் பிரிவில் கமாண்டோவாகப் பணியாற்றி வந்தார்.

    காஜலும் அங்குரும் நான்கு ஆண்டுகள் காதலித்து, கடந்த 2023 நவம்பரில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது காஜல் மீண்டும் கர்பமாக இருந்துள்ளார். 

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காஜலின் கணவர் அங்குர் சவுத்ரி, உடற்பயிற்சி செய்யும் டம்பல் கொண்டு காஜலைத் தாக்கியதுடன், அவரது தலையைச் சுவரில் மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காஜலின் மூளை செயலிழந்தது.

    காஜலிடம் கூடுதல் வரதட்சணையாகப் பணம் மற்றும் கார் கேட்டு அவரது கணவர் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகக் காஜலின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.    

    அங்குர் சவுத்ரியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒரு பெண் கமாண்டோவிற்கே வரதட்சணைக் கொடுமையால் இந்த நிலை ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

    • காந்தி நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
    • காந்தியின் ஆளுமையும் செயல்களும் நாட்டு மக்களை கடமையின் பாதையில் நடக்க என்றென்றும் ஊக்குவிக்கும்.

    மகாத்மா காந்தியின் 79-வது நினைவுநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவரை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவருக்கு எனது நூறு மடங்கு வணக்கங்கள். மதிப்பிற்குரிய பாபு எப்போதும் சுதேசிக்கு வலுவான முக்கியத்துவம் அளித்தார். இது வளர்ந்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவிற்கான நமது உறுதிப்பாட்டின் அடிப்படைத் தூணாகும். அவரது ஆளுமையும் செயல்களும் நாட்டு மக்களை கடமையின் பாதையில் நடக்க என்றென்றும் ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    • 2023-ம் ஆண்டில் டெல்லியில் இதய நோய்களால் ஏற்படும் இறப்புகள் 22,385 ஆக இருந்தன.
    • பரம்பரை காரணிகள் இதய நோய்களை ஏற்படுத்தும் என்பது உண்மைதான்.

    புதுடெல்லி:

    டெல்லியில் மாரடைப்பு மற்றும் பிற இதயம் தொடர்பான நோய்களால் ஏற்படும் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. 2024-ம் ஆண்டில் இதுபோன்ற இறப்புகளில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

    2023-ம் ஆண்டில் டெல்லியில் இதய நோய்களால் ஏற்படும் இறப்புகள் 22,385 ஆக இருந்தன. இது 2024-ல் 1,84,539 ஆக அதிகரித்தது. டெல்லி அரசாங்கத்தின் சமீபத்திய அறிக்கையின்படி டெல்லியில் கடந்த சில ஆண்டுகளில் 3,20,957 பேர் மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களால் இறந்துள்ளனர்.

    இவற்றில் 108,872 பேர் 45-64 வயதுக்குட்பட்டவர்கள், 82,048 பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். 25-44 வயதுக்குட்பட்டவர்களில் 46,129 பேர் இறந்துள்ளனர். 14,321 பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

    பரம்பரை காரணிகள் இதய நோய்களை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் நவீன வாழ்க்கை முறை காரணமாக ஆபத்து அதிகரித்து வருகிறது.

    புகைபிடித்தல், தொலைக்காட்சிப் பழக்கம், உடல் செயல்பாடு இல்லாமை, அதிக மன அழுத்தம், தூக்கமின்மை, காற்று மாசுபாடு இந்த காரணிகள் அனைத்தும் டெல்லியில் மாரடைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன என்று ஸ்ரீ பாலாஜி அதிரடி மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அமர் சிங்கால் தெரிவித்துள்ளார்.

    ×