என் மலர்
இந்தியா
- நேற்று அதிரடியாக காலை, மாலை என இருவேளைகளில் தங்கம் விலை உயர்ந்தது.
- பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை தினமான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னை:
ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இதனிடையே கடந்த 23-ந்தேதியில் இருந்து தங்கம் ஓரளவு உயர்ந்து விற்பனையான நிலையில் நேற்று அதிரடியாக காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து தங்கம் கிராமுக்கு 650 ரூபாயும் சவரனுக்கு 5200 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் 1,24,400-க்கு விற்பனையாது.
இதற்கு காரணம் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலே என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் போர் பதற்றம் நீளும் வரை தங்கம் விலை உயரலாம் என கருதப்படுகிறது.
அந்த வகையில், பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறையானாலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன் படி வாரவிடுமுறையான இன்று தங்கம் கிராமுக்கு 225 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,775-க்கும் சவரனுக்கு 1800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,26,200-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.320-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ரூ.325-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
28-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,24,400
27-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
26-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,360
25-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,440
24-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,120
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
28-02-2026- ஒரு கிராம் ரூ.320
27-02-2026- ஒரு கிராம் ரூ.295
26-02-2026- ஒரு கிராம் ரூ.295
25-02-2026- ஒரு கிராம் ரூ.295
24-02-2026- ஒரு கிராம் ரூ.290
23-02-2026- ஒரு கிராம் ரூ.300
- மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- அவர் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று தாய் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.
பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
- நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்.
- சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை காக்கும் உங்கள் பயணம் தொடரட்டும்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியான நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.
கனிமொழி எம்.பி.வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சமூக நீதியையும் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் இருகண் எனக் கொண்டு, நாடு போற்றும் நல்லாட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி வரும் மாண்புமிகு முதலமைச்சர் - கழகத் தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என்றும் உழைப்பிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அண்ணன் தளபதி அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாட்டை வழிநடத்திச்செல்ல விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறுகையில், தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன்
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நலனும் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் எப்போதும் உங்களை சூழ வாழ்த்துகள். சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை காக்கும் உங்கள் பயணம் தொடரட்டும் என்று தெரிவித்துள்ளார்.
- தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 105 ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதன்பின் மெரினா கடற்கரையில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 105 ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார். முதலமைச்சர் மு.கஸ்டாலினுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதன்பின், அண்ணா அறிவாலயம் செல்லும் மு.க.ஸ்டாலின் அங்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
- நம் தமிழினத்தின் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது;
- நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது!
சென்னை :
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்!
அவற்றைக் காப்பது நம் கடமை!
உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73-ஆம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன்.
தமிழும் தமிழ்நாடும் தலைநிமிர்ந்த வரலாற்றில் நான் சிறுதொண்டனாய் இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் பெருந்தொண்டாற்றிடவே நினைக்கிறேன்.
அந்த உறுதியோடுதான், #DravidianModel-இல் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.
உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன்.
கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் போய்ச் சேர்ந்துள்ளது திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களும், சாதனைகளும்!
தனிக்குணம் கொண்ட தமிழர் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர்; நாட்டிற்கே புத்தொளியை வழங்குகின்றனர் என்று புகழும் வகையில் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது!
நம் தமிழினத்தின் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது!
சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் - நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன்.
இதுவே என் பிறந்தநாள் உறுதிமொழி!
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நமக்குக் காட்டிய பாதையில், #தமிழ்நாடு_போராடும்_#தமிழ்நாடு_வெல்லும் எனப் போர்க்குணத்தோடு பயணித்து #வெல்வோம்_ஒன்றாக! என்று கூறியுள்ளார்.
- எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
- மார்ச் மாதத்திற்கான வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
அந்த வகையில், மார்ச் மாதத்திற்கான வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.29.50 உயர்ந்து ரூ.1,929-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 50 ரூபாய் உயர்ந்த நிலையில் இம்மாதமும் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வீட்டு உபயோகத்திற்கான 14 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.
- அஜித் பவாரின் மகனும் இந்த சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.
- போதுமான தூரம் இல்லை என்றாலும், தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் மேலும் நால்வர் உயிரிழந்தனர்.
அஜித் பவார் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை எதிர்த்து சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதாலும், பாஜக உள்ளாட்சிகளில் ஊழல் செய்வதாக கடுமையாக விமர்சித்ததாலும் அவரின் மரணத்தில் எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பின.
மேலும் பெரிய சேதங்களை தாங்கும் விமானத்தின் கருப்பு பெட்டி இந்த விபத்தில் சேதமடைந்ததாக கூறப்பட்டதால் சந்தேகம் மேலும் வலுத்தது. அஜித் பவாரின் மகனும் இந்த சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.
இந்த சூழலில் இந்த விபத்து குறித்து விமான விபத்து விசாரணை வாரியம் (AAIB) தற்போது தனது முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அறிக்கைபடி, விபத்து நடந்த சமயத்தில் பாராமதி பகுதியில் மோசமான வானிலை காரணமாக பார்வை தூரம் மிகக் குறைவாக இருந்துள்ளது. விமானங்கள் தரையிறங்குவதற்கு குறைந்தபட்சம் 5,000 மீட்டர் கண்பார்வை தூரம் தேவை. ஆனால், விபத்தின் போது இது மிகவும் குறைவாக இருந்துள்ளது.
விமானம் தரையிறங்கும் முன் விமானிகள் பார்வை தூரம் குறித்துக் கேட்டபோது, கட்டுப்பாட்டு அறையிலிருந்து 3,000 மீட்டர் இருப்பதாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது தரையிறங்குவதற்குப் போதுமான தூரம் இல்லை என்றாலும், தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த அன்று கட்டுப்பாட்டு அறையை ஒரு பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த தரைவழி பயிற்றுவிப்பாளர் இயக்கியுள்ளார். அவரே விமானிகளுடன் தொடர்புகொண்டு தரையிறங்க அனுமதி அளித்துள்ளார்.
பாராமதி விமான நிலைய ஓடுதளம் கடைசியாக 2016-ல் தான் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓடுதளத்தில் உள்ள அடையாளக் குறிகள் மங்கிப் போயிருந்தன. மேலும், ஓடுதளத்தில் ஜல்லிக்கற்கள் சிதறிக் கிடந்ததையும் விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.
இந்த விபத்தில் காக்பிட் குரல் பதிவுக்கருவி சேதமடைந்துள்ளது. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் உதவியுடன், அதில் உள்ள தரவுகளைப் பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்ய AAIB திட்டமிட்டுள்ளது.
கட்டுப்பாடற்ற விமான நிலையங்களில் பாதுகாப்புத் தரநிலைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என AAIB பரிந்துரைத்துள்ளது.
விபத்துக்கான மூலக் காரணம் மற்றும் உண்மைகளை வெளிக்கொண்டு வர முழு அளவிலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக AAIB தெரிவித்துள்ளது.
- மாவட்ட நீதிபதிகளை நியமிக்க மேற்கு வங்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- சுவேந்து 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது.
இறுதி பட்டியலில் 63.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் 7.66 கோடியாக இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, SIR நடைமுறைக்குப் பிறகு இறுதிப் பட்டியலில் 7.04 கோடியாகக் குறைந்துள்ளது.
இந்த SIR நடவடிக்கையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடக்கம் முதலே எதிர்த்து வந்தார்.
தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கில் தானே ஆஜராகி வாதாடினார்.
தேர்தல் ஆணையம், மேற்கு வங்க அரசு இடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கை இன்மை ஒரு அரிய சூழல் என்று சுட்டிக்காட்டி SIR பட்டியல் சரிபார்ப்புக்கு மாவட்ட நீதிபதிகளை நியமிக்க மேற்கு வங்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
எனவே நீதிபதிகள், 'மறுஆய்வு' பட்டியலில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வாக்காளர்களின் விவரங்கள் உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவுப்படி, மாவட்ட நீதிபதிகளால் சரிபார்க்கப்படும்.
இந்த சரிபார்ப்புக்கு பின்னர் கூடுதலாக 8 லட்சம் வாக்குகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் தெற்கு கொல்கத்தாவில் உள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பவானிபூர் தொகுதியில் 47,111 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மறுபுறம், கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் சுமார் 11,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், நந்திகிராமில் சுவேந்து 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
எனவே இந்த பாரிய வித்தியாசம் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் இறுதி வாக்காளர் பட்டியலில் அதிகபட்சமாக கொல்கத்தா வடக்கு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில், 4 லட்சத்திற்கும் அதிகமானோரின் வாக்குகளும், கொல்கத்தா தெற்கில், 2 லட்சத்து 15 ஆயிரம் வாக்குகள் வரையும் நீக்கப்பட்டுள்ளன.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது.
- ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2-வதாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.
நடப்பு சாம்பியனான இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழையுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
லீக் ஆட்டங்களில் அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வென்ற பிறகு சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. சென்னையில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதே உத்வேகத்துடன் வெஸ்ட் இண்டீசையும் வீழ்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் தோற்றால் தொடரில் இருந்து வெளியேறும். இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் பொறுப்புடன் ஆட வேண்டும்.
இந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் இந்திய அணி வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். ஏனெனில், வெஸ்ட் இண்டீசைவிட நிகர ரன் ரேட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது.
இந்திய அணியில் அபிஷேக் சர்மா மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி இருக்கிறார். இஷான் கிஷன் (214 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (213), ஷிவம் துபே (158), ஹர்திக் பாண்ட்யா (155), திலக் வர்மா (151) ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான நிலையில் இருக்கிறார்கள்.
ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்திய பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. இதனால் பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை.
வேகப்பந்தில் அர்ஷ்தீப் சிங், பும்ராவும் சுழற்பந்தில் வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஹெட்மயர், கேப்டன் ஷாய் ஹோப், ரூதர்போர்டு, போவெல் ஆகியோர் பேட்டிங்கிலும், குடாகேஷ், ஜேசன் ஹோல்டர், ஷமர் ஜோசப் ஆகியோர் பந்துவீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.
இந்தியாவை போலவே வெஸ்ட்இண்டீஸ் அணியும் லீக் சுற்றில் தோல்வியை தழுவாமல் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
இன்று மாலை 3 மணிக்கு நடை பெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
- புதுடெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை கண்காணிக்கப்படுகிறது.
- தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஈரான் போரால் வளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்களுக்கு உதவி எண்களை தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான்-இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, பயணங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையைக் கண்காணித்து வருகிறது. அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது.
போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்புகொள்ளலாம்.
தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
புதுடெல்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள் 011-24193300 (Land line) 92895 16712 (Mobile Number with Whatsapp)
அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்:
இந்தியாவிற்குள் - 1800 309 3793 வெளிநாடு - +91 80 6900 9900 (Missed Call) தொடர்புக்கு - +91 80 6900 9901 என உதவி எண்களை பதிவிட்டுள்ளார்.
- மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் மின் அஞ்சல் அனுப்பியுள்ளார்.
- அதில், வளைகுடா வாழ் இந்தியர்களைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி:
வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக, விஜய் வசந்த் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:
சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து வளைகுடா பகுதியில் மோசமடைந்து வரும் அரசியல் சூழ்நிலை குறித்து எனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீபத்திய தகவல்களின்படி, ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளை பாதித்துள்ளன. இதனால் பாதுகாப்பு எச்சரிக்கைகள் அதிகரிப்பு, விமானப் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் பதற்ற நிலை, அங்கு வாழ்ந்து வேலை செய்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கும், அதில் பெரும்பங்கு வகிக்கும் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அச்சம் மற்றும் நிலையற்ற சூழ்நிலை உருவாக்கியுள்ளது. சில பகுதிகளில் குண்டு சத்தங்கள் கேட்கப்பட்டதுடன், அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வெளியுறவு அமைச்சகம் உடனடி மற்றும் முன்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்:
பாதிக்கப்பட்ட அனைத்து இந்திய தூதரகங்களிலும் அவசர ஒத்துழைப்பு மையங்களை அமைத்தல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நேரடி அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல், இந்திய தொழிலாளர்களுக்கான தனிப்பட்ட உதவி எண்களை செயல்படுத்தி, விரைவான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.
நிலைமை மோசமடைந்தால் அவசர வெளியேற்றத்திற்கான முன்னெச்சரிக்கை திட்டங்களை தயார் செய்தல், இந்தியர்களின் பாதுகாப்பு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் உறுதிசெய்ய அந்த நாடுகளுடன் தூதரக மட்டத்தில் தொடர்பை ஏற்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அவசரமான சூழ்நிலையில், இந்திய குடிமக்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடி தலையீட்டை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இந்திய அரசு விரைவாகவும், உறுதியுடனும் செயல்படும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
- 'மறுஆய்வு' பட்டியலில் உள்ள 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை நீதிபதிகள் சரிபார்க்க உள்ளனர்.
- 7.66 கோடியாக இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.04 கோடியாக குறைந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் பட்டியலை வெளியிட்டார். இறுதி பட்டியலில் 63.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இறப்பு, இடமாற்றம், இரட்டைப் பதிவு போன்ற காரணங்களால் அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் 7.66 கோடியாக இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, SIR நடைமுறைக்குப் பிறகு இறுதிப் பட்டியலில் 7.04 கோடியாகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது 58 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்ட நிலையில், இந்த முறை கூடுதலாக 5 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
1.82 லட்சம் புதிய வாக்காளர்கள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், 'மறுஆய்வு' பட்டியலில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வாக்காளர்களின் விவரங்கள் உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவுப்படி, மாவட்ட நீதிபதிகளால் சரிபார்க்கப்படும்.
இந்த சரிபார்ப்புக்கு பின்னர் கூடுதலாக 8 லட்சம் வாக்குகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு கொல்கத்தாவில் உள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பவானிபூர் தொகுதியில் 47,111 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா வடக்கு மற்றும் கொல்கத்தா தெற்கு மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து ஆறு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக கொல்கத்தா வடக்கு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில், 4 லட்சத்திற்கும் அதிகமானோரின் வாக்குகளும், கொல்கத்தா தெற்கில், 2 லட்சத்து 15 ஆயிரம் வாக்குகள் வரையும் நீக்கப்பட்டுள்ளன.
மறுபுறம், கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் சுமார் 11,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், நந்திகிராமில் சுவேந்து 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.






