search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கூந்தலை பலமாக்கும் இயற்கை முறைகள்
    X

    கூந்தலை பலமாக்கும் இயற்கை முறைகள்

    தலைமுடி கொட்டுவதற்கு பொடுகு தொல்லை, சுகாதாரமின்மை, கிருமிகள் தாக்குதல், தரமில்லாத ஷாம்பூ இப்படி சில காரணங்கள் இருக்கலாம்.
    இந்த கோடையில் பல பிரச்சினைகள் மக்களை வாட்டுவிப்பது போல் மிகவும் அதிகமாக முடி கொட்டுகின்ற பிரச்சினையும் அநேகரை வருத்துகின்றது. இதற்கு ஏதாவது வழி சொல்லுங்களேன் என கேட்க ஆரம்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 15 நாட்களில் கூடிக் கொண்டே போனது. மண்டைக்கு உள்ளே இருக்கும் மூளையைப் பற்றியும், வெளியே இருக்கும் தலைமுடி பற்றியும் பல பல ஆண்டுகளாக ஆய்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. முடியைப் பற்றி கவலைப் படாத ஆணும் இல்லை பெண்ணும் இல்லை எனலாம்.

    உடலில் ஏற்படும் எந்த மாறுதல்களுக்கும் முதலில் மருத்துவ ரீதியான காரணங்களை அறிய வேண்டும். இளமைக் காலத்தில் முடி கொட்டுவதற்கான பொதுவான காரணங்கள்.

    * அதிக உடல் உழைப்பு
    * மனஉளைச்சல்
    * பரம்பரை
    * கூடும் வயது
    * ரத்த சோகை
    * ஹார்மோன்களின் மாறுபாடு
    * அதிக நாள் நோய் தாக்குதல்
    * வைட்டமின் பி6, போலிக் ஆசிட் குறைபாடு
    * தைராய்டு பிரச்சினைகள்
    * ஸ்டைல் என்ற பெயரில் முடியினை கெடுத்துக் கொள்ளுதல்

    இவையெல்லாம் மருத்துவ காரணங்கள் :

    இவற்றிற்கு மருத்துவ ரீதியான ஆலோசனைகள் தேவை. மருத்துவ ரீதியாக பல மருந்துகள், தலைக்கு தடவும் லோஷன் என ஆய்வுகளின் வெளிப்படாக பல கண்டு பிடிப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆயினும் அவற்றினை பொதுவில் எழுத முடியாது. அதற்கும் மருத்துவ ஆலோசனை தேவை. ஆகவே அவரவர் வீட்டில் செய்து பயன்பெறக் கூடிய சில எளிய முறைகளை பார்ப்போம். இவற்றின் விஞ்ஞான ரீதியாத உண்மைகளையும் அறிவோம்.

    தலைமுடி கொட்டுவதற்கு பொடுகு தொல்லை, சுகாதாரமின்மை, கிருமிகள் தாக்குதல், தரமில்லாத ஷாம்பூ இப்படி சில காரணங்கள் இருக்கலாம். எனவே முதலில் முடியினை பலமாக்கும் முறையினைப் பார்ப்போம்.

    * தேங்காய் பால் :

    சுத்தமான ஒரு கப் தேங்காய் பாலினை உங்களாலேயே வீட்டில் தயாரித்துக் கொள்ள முடியும். பால் தண்ணியாக இருக்கக் கூடாது. அடர்த்தியாக இருக்க வேண்டும். தலைக்கு உபயோகிக்கும் ‘டை’ போடும் ப்ரஷ் கொண்டு தலை முடியினை நன்கு அகற்றி மண்டையில் முடியின் கால்களில் நன்கு படும்படி தடவவும். இதனை அப்படியே ஒரு டவல் கொண்டு சுற்றி 20 நிமிடங்கள் வைக்கவும். அதன்பின் குளிர்ந்த நீரில் மென்மையான ஷாம்பூ கொண்டு கழுவி விடவும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்ய வேண்டும். சரி இவ்வாறு செய்வதால் என்ன பலன்.

    தேங்காய் பாலில் வைட்டமின் ஈ சத்து அதிகம். ஆகவே நல்ல ஆரோக்கியத்துடன் முடியினை வைக்கும். இதிலுள்ள பொட்டாஷியம் சத்து முடி நன்கு வளர உதவும். மேலும் இதன் கிருமி நாசினி குணம் முடி பாதிப்பு ஏற்படாமல் காக்கும்.

    * வேப்பிலை :

    10-12 வேப்பிலை இருந்தால் போதும். இதனை இரண்டு டம்ளர் நீரில் போட்டு ஒரு டம்ளர் நீர் ஆகும் வரை கொதிக்க வைக்கவும். வடிகட்டி ஆறவிடவும். இதனை தலை சுத்தம் செய்யும் போது தலையில் பொறுமையாக ஊற்றி பின்னர் நீரில் தலையை அலசவும். இதனை தலையை ஷாம்பு கொண்டு சுத்தம் செய்த பிறகு தலையில் ஊற்றவும். பின்னர் மறுபடியும் நீர் கொண்டு சுத்தம் செய்யவும்.
    ஏன் இப்படி செய்ய வேண்டும்? இது மிகப் பெரிய கிருமி நாசினை பொடுகினை நீக்கி விடும். தலை சுத்தமாவதால் முடி வளர்ச்சி கூடும். மேலும் இது தலைக்கு ரத்த ஓட்டத்தினைத் தூண்டும் மேலும் ஈறு, பேன் இவைகளையும் நீங்கும். இதனை வார ஒருமுறை செய்தால் போதும்.

    சீப்பினை இதே முறையில் சுத்தம் செய்யுங்கள்.

    பொடுகு இருக்கும் தலையில் வேப்ப நீர் படும் பொழுது சில நேரங்களில் கண் எரிச்சல் ஏற்படலாம். பொதுவில் வேப்ப நீர் கொண்டு தலை அலசும் பொழுது கண்களில் படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

    * சோற்றுக் கற்றாழை :

    நகர்புறம் தாண்டி இருப்பவர்களுக்கு இது எளிதில் கிடைத்து விடும். நகரங்களில் இதன் விலை மிகவும் அதிகம். இருப்பினும் இது மிக உபயோகமான சிகிச்சை என்பதால் இதனை குறிப்பிடுகின்றேன். சோற்றுகற்றாழையினை நன்கு கழுவி முட்களை நீக்கவும். பின் அதன் சதைப் பற்றினை நன்கு எடுத்துக் கொள்ளவும். தலையினை ஈரமாக்கிக் கொள்ளவும். பின்னர் இந்த விழுதினை முடியினை நீக்கி மண்டையில் நன்கு படுமாறு தேய்க்கவும். 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பின்னர் தலையினை சுத்தமான நீர் கொண்டு அலசி விடவும்.

    இதனை வாரம் 3 முறை செய்யலாம். ஏன் செய்ய வேண்டும்?

    இதில் உள்ள மருத்துவ குணத்தினால் தலைமுடியின் வேரினில் ஊடுருவிச் சென்று முடி வளர்ச்சியினை தூண்டும். உடலை குளுமையாய் வைக்கும்.

    சோற்றுக் கற்றாழை மஞ்சள் நிறத்தில் ஓரங்களிலோ அல்லது உள்ளோ இருந்தால் அதனை உபயோகப்படுத்தக் கூடாது. அது தீங்கு.

    * வெந்தயம் :

    ஒரு கப் வெந்தயத்தினை முதல் நாள் இரவு நீரில் ஊற வைக்கவும். இதனை மிகவும் நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனை தலையில் நன்கு தடவி ஒருமணி நேரம் நன்கு ஊற வைக்கவும். குளிர்ந்த நீரில் நன்கு அலசவும். வாரம் இருமுறை செய்யலாம்.

    * நெல்லிக்காய் :

    பொதுவில் நெல்லிக்காயினை தேங்காய் எண்ணெயில் இட்டு காயச்சி உபயோகப்படுத்துவர். 4-5 நெல்லிக்காயினை காய வைத்து பின் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி சற்று கறுத்த நிறம் வந்தவுடன் அதனை அப்படியே ஒரு பாட்டிலில் மாற்றி வைத்து தலைக்கு தடவுவர். நெல்லிக்காயில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகம். முடியினை நன்கு வலுவாக்கும். ‘இ’ சத்து கொலஜன் உற்பத்திக்கு உதவுவதால் முடி செழிப்பாய் இருக்கும். இதுவே நெல்லிக்காய் எண்ணையின் ரகசியம்.

    * தயிர் :

    2 டேபிள் ஸ்பூன் தயிரும், சிறிது எலுமிச்சையும் கலந்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்கு கழுவி விடலாம். தயிரில் பி5 வைட்டமின் சத்து அதிகம். இது முடியினை நன்கு வளரச் செய்யும். இதனை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

    * வெங்காய ஜூஸ் :

    எத்தனை பேருக்கு இது அதிசயமாக இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் இது உண்மை. சின்ன வெங்காயத்தினை நன்கு உரித்து சிறிதும் நீர் சேர்க்காமல் அதனை துருவி பிழிந்து சாறு எடுத்தும் கொள்ளவும். பஞ்சு கொண்டு அந்த சாறினை தலையில் முழுவதும் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முடியினை நன்கு அலசி விடவும். ஷாம்பு பயன்படுத்தவும். இதனை வாரம் ஒருமுறை செய்யலாம்.

    வெங்காயம் கிருமி நாசினி. இது முடிக்கு மிகவும் சிறந்தது. மேலும் இதில் உள்ள சல்பர் ரத்த ஓட்டத்தினை கூட்டி பாதிக்கப்பட்ட முடி கால்களை வலுவாக்கி நல்ல முடி வளர்ச்சியினை ஏற்படுத்தும்.

    * தேங்காய் எண்ணெய் :

    ஆலிங் எண்ணெய் பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது கிருமிகளை நீக்கும். ரத்த ஓட்டத்தினை தூண்டும். ஆனால் எண்ணெய் வைத்த ஒரு நாள் முழுவதும் அப்படியே இருந்தால் அதில் மாசு படியும். இரவில் தடவி காலையில் குளித்து விடுவது நல்லது.

    2 முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து தலை முடியினை பிரித்து பிரித்து பிரஷ் மூலம் முடிகால்களில் நன்கு படும்படி தடவவும். 20 நிமிடங்கள் கழித்து தரமான ஷாம்பு கொண்டு சுத்தம் செய்யவும். வாரம் இருமுறை கூட இதனைச் செய்யலாம். இதிலுள்ள புரதம், வைட்டமின் பி சத்துக்கள், முக்கிய சத்துக்கள் முடியினை அற்புதமாய் வளரச் செய்யும்.

    ஒரு உருளைக்கிழங்கினை நன்கு கழுவி தோல் சீவிக் கொள்ளவும். பின் அதனைத் துறுவி சாறு எடுத்து தலை முழுக்க தடவவும். 20 நிமிடங்கள் சென்று தலையை நன்கு அலசி விடவும். இதனை வாரம் ஒருமுறை செய்யலாம். பொட்டாசியம் சத்தும், வைட்டமின் சி சத்தும் மிகுந்தது. இது முடி கொட்டாமல் இருக்க பெரிதும் உதவும்.

    * எலுமிச்சை சாறு :


    2-3 எலுமிச்சை பழங்களைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு வெது வெதுப்பான நீர் கலந்து வைத்துக் கொள்ளவும். நீங்கள் தலைக்கு குளிக்கும்போழுது தலையினை நன்கு சுத்தம் செய்த பிறகு இச்சாறினை தலை முழுவதும் தடவி 5 நிமிடங்கள் மென்மையாய் மசாஜ் செய்து சுத்தமான நீரில் தலை முடியினை நன்கு அலசி விடவும்.

    முடி கொட்டுவதனை வெகுவாய் நிறுத்தும். பொடுகினை நீக்கி விடும். ஆரோக்கியமாய் முடியினை பராமரிக்கும். கண்களில் பட்டால் மிகவும் எரிச்சல் கொடுக்கும். தீங்கு இல்லை எனினும் எரிச்சல் மிகுதியாய் இருக்கும். எனவே இதனை உபயோகிக்கும்போது கவனம் தேவை. கண்ணில் பட்டால் சுத்தமான நீர் கொண்டு கண்ணை கழுவி விடவும்.

    இந்த முறைகளை நம் முன்னோர்கள் காலம் காலமாக சொன்னதுதான். செய்ததுதான். இன்று நாம் விஞ்ஞான ரீதியாக இதனை ‘ஆமாம்’ போட்டு கற்றுக் கொள்கின்றோம். ஆனால் அவர்கள் எவ்வாறு இதனையெல்லாம் கண்டு பிடித்தார்கள் என்பது ஆச்சர்யமே.
    Next Story
    ×