search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தஞ்சையில் இன்று ஒரே இடத்தில் 24 கருட சேவை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
    X

    கருடசேவையை முன்னிட்டு கோவில்களில் இருந்து பெருமாள் புறப்பட்டு வந்த போது எடுத்த படம்.

    தஞ்சையில் இன்று ஒரே இடத்தில் 24 கருட சேவை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    • பக்தர்கள் பெருமாளுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
    • கருட சேவையை முன்னிட்டு ஆங்காங்கே அன்னதானம், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், ராமானுஜ தர்சன சபை சார்பில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவோண நட்சத்திரத்தில் தஞ்சையில் 24 கருட சேவை நிகழ்ச்சி நடத்தப்படும்.அதன்படி, இந்த ஆண்டுக்கான கருட சேவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    தஞ்சாவூரில் உள்ள வைணவ கோவில்களில் முதன்மையானதாக விளங்கும் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோவிலில் 89-வது ஆண்டு கருட சேவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு இன்று காலை தஞ்சாவூர் நீலமேகப்பெருமாள் கோவில், மணிகுன்றப் பெருமாள் கோவில், மேல சிங்கப்பெருமாள் கோவில், வேளூர் வரதராஜர் கோவில், கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், நவநீதகிருஷ்ணன் கோவில், மேலவாசல் ரெங்கநாதர் கோவில், விஜயராமர் கோவில், கோவிந்தராஜ பெருமாள் கோவில், ஜனார்த்தன பெருமாள் கோவில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், கீழ கோதண்டராமர் கோவில், கீழ சிங்கபெருமாள்கோவில், பூலோக கிருஷ்ணர் கோவில், படித்துறை வெங்கடேசப் பெருமாள் கோவில், பஜார் ராமர் கோவில் உள்ளிட்ட 24 கோவில்களிலிருந்து கருட வாகனத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வரிசையாக கொடிமரத்து மூலை, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக வந்து பொதுமக்களுக்கு அருள்பாலித்தனர்.

    அப்போது பக்தர்கள் பெருமாளுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேலும், 24 பெருமாளையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்ய வெளியூர் மற்றும் உள்ளூரிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் 4 ராஜ வீதிகளிலும் பக்தர்கள் திரண்டனர்.

    கருட சேவையை முன்னிட்டு ஆங்காங்கே தன்னார்வ அமைப்புகள் சார்பில் அன்னதானம், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது. இதையடுத்து முற்பகலில் பெருமாள் சுவாமிகள் மீண்டும் அந்தந்த கோவிலை அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×