உலகம்
இம்மானுவேல் மேக்ரான், நரேந்திர மோடி

பிரான்ஸ் அதிபருடன், பிரதமர் மோடி பேச்சு வார்த்தை- நண்பரை சந்தித்ததில் மகிழ்ச்சி என தகவல்

Published On 2022-05-04 21:21 GMT   |   Update On 2022-05-04 21:21 GMT
இந்தியா வருமாறு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பாரிஸ்:

பிரதமர் மோடி 3 ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் முதலில் ஜெர்மனி சென்றார். அந்நாட்டு பிரதமர் ஒலிப் ஸ்கால்சை சந்தித்து பேசிய பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 

அடுத்த கட்டமாக அங்கிருந்து டென்மார்க் சென்ற பிரதமர் மோடி,
அந்நாட்டு  பிரதமர் பிரடெரிக்சன் சந்தித்து பேசினார்.  

தொடர்ந்து கோபன்ஹேகன் நகரில் உள்ள கிறிஸ்டியன்ஸ்போர்க் அரண்மனையில் நடைபெற்ற, 2வது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 

இதன் ஒரு பகுதியாக பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் பிரதமர்களை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி விவாதித்தார். 

டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு இறுதியாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை தலைநகர் பாரிஸில் இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர். 

அவர்களை சந்தித்த பின், பிரெஞ்சு அதிபரின் அதிகாரப் பூர்வ இல்லமான எலிசீ அரண்மனைக்கு சென்ற மோடியை, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கட்டிப்பிடித்து வரவேற்றார்.  
பின்னர் இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி ஒத்துழைப்பு மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவான விவாதங்களை நடத்தியதாக மத்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத் தெரிவித்தார். 

முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எனது நண்பர் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திப்பதில் எப்போதும் போல் மகிழ்ச்சி என்றும், இருதரப்பு மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து நாங்கள் நீண்ட நேரம் பேசினோம் என்றும் தெரிவித்தார். 

இந்த சந்திப்பின்போது, விரைவில் இந்தியா வருமாறு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர்  மோடி அழைப்பு விடுத்ததாக மத்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது. 

பிரதமரின் இந்த பயணத்தின் போது வெளியுறவுத்துறை மந்திரிஎஸ் ஜெய்சங்கர் பிரான்ஸ் பிரதமர் ஜீன்-யவ்ஸ் லு டிரியனையும் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News