உலகம்
உக்ரைன் ரஷ்யா மோதல்

உக்ரைனில் இரும்பு ஆலைக்குள் இருந்து மக்கள் வெளியேறத்தொடங்கினார்கள்

Published On 2022-05-02 09:38 GMT   |   Update On 2022-05-02 09:38 GMT
மரியுபோலில் 10 கிலோ மீட்டர் பரப்பளவில் மிகப் பெரிய இரும்பு தொழிற் சாலை இருக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான பொது மக்களும் உக்ரைன் ராணுவ வீரர்களும் இருக்கிறார்கள்.

கிவ்:

உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24ந்தேதி போர் தொடுத்தது. கடந்த 68 நாட்களாக போர் நீடித்து வருகிறது.

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இதனால் ரஷியா உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

உக்ரைனின் கிழக்குப் பகுதியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷியா தாக்குதலை நடத்தியது. கிழக்கு உக்ரைனில் உள்ள கிளர்ச்சியாளர்கள் ரஷியாவுக்கு ஆதரவாக உள்ளனர். அங்குள்ள மரியுபோல் நகரை கைபற்ற ரஷியா தீவிர தாக்குதல் நடத்தியது.

இதன் மூலம் அந்த நகரம் ரஷியாவிடம் வீழ்ந்தது. மரியுபோலில் 10 கிலோ மீட்டர் பரப்பளவில் மிகப் பெரிய இரும்பு தொழிற் சாலை இருக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான பொது மக்களும் உக்ரைன் ராணுவ வீரர்களும் இருக்கிறார்கள்.

அவர்களை வெளியேற்றும் பணி நேற்று தொடங்கியது. இதுவரை சுமார் 200 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த இரும்பு தொழிற்சாலைக்குள் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து ரஷிய வீரர்களை தாக்கி வருகிறார்கள்.

அவர்களை சரணடையு மாறு ரஷியா எச்சரித்தது. உக்ரைன் வீரர்கள் சரணடைய மறுப்பதால் அங்கு தீவிர சண்டை நடந்து வருகிறது.

Tags:    

Similar News