உலகம்
அரசுக்கு எதிரான பேரணி

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் மோதல்

Published On 2022-04-01 14:27 GMT   |   Update On 2022-04-01 14:27 GMT
பேரணி நடைபெற்ற பகுதியில் அரசுக்கு ஆதரவாக ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
யாழ்ப்பாணம்:

இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. கடுமையான மின்வெட்டும் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் இந்த நிலைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் செயல்பாடுகளே காரணம் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதிபர் உடனே பதவி விலகவேண்டும் என கோஷமிட்டனர்.

இன்று யாழ்ப்பாணத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் நடைபெற்ற இப்பேரணியில் ஈடுபட்ட ஏராளமானோர் அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை பேரணி சென்றடைந்தது.

இதற்கிடையே பேரணி நடைபெற்ற பகுதியில் அரசுக்கு ஆதரவாக ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். மேலும், மோதல் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News