உலகம்
ஜெர்மன் பிரதமர் ஸ்கோல்ஸ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷியாவிற்கு எதிராக போரிட உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவோம் - ஜெர்மனி அறிவிப்பு

Published On 2022-02-26 23:58 GMT   |   Update On 2022-02-26 23:58 GMT
உக்ரைன் தலைநகரை ரஷியா கைப்பற்றுவதை தடுக்கும் நடவடிக்கையாக உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
வியன்னா:

ரஷிய படையெடுப்பால் தவித்து வரும் உக்ரைனுக்கு,  சில ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. போலந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி வருவதாக  டெல்லியில், இந்தியாவுக்கான போலந்து தூதர் ஆடம் புராகோவ்ஸ்கி தெரிவித்தார். 

இந்நிலையில், உக்ரைன் தலைநகரை ரஷியா கைப்பற்றுவதை தடுக்கும் நடவடிக்கையாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களை நேரடியாக அனுப்புவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரம் பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளுக்கான 500 உபகரணங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும் என்ற தெரிவித்தார். 

மேலும் கூடுதலாக, 14 கவச வாகனங்கள் மற்றும் 10,000 டன் வெடி பொருள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என்று ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. 

இதை வரவேற்றுள்ள உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி ஆயுதங்கள் வழங்குவதை தொடருங்கள் என்றும், போர் எதிர்ப்புக் கூட்டணி தற்போது செயலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News