செய்திகள்
மெகுல் சோக்சியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டொமினிகா கோர்ட்
மெகுல் சோக்சி இந்தியாவில் 14000 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் தேடப்படும் நபர் என்பதால், அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட வேண்டும் என டொமினிகா அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
புதுடெல்லி:
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதனால், சி.பி.ஐ. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.
இந்நிலையில் ஆன்டிகுவாவில் தஞ்சம் அடைந்திருந்த மெகுல் சோக்சியை (வயது 62) அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆன்டிகுவா குடியுரிமை பெற்ற அவரை நாடு கடத்துவது தொடர்பான சட்ட நகர்வுகளை மேற்கொண்ட வந்த நிலையில், திடீரென மெகுல் சோக்சி காணாமல் போனார்.
ஆன்டிகுவாவை விட்டு வெளியேறிய மெகுல் சோக்சி, படகு மூலம் அருகில் உள்ள சிறிய தீவு நாடான டொமினிகாவுக்கு சென்றபோது போலீசில் சிக்கினார். சட்டவிரோதமாக டொமினிகாவில் நுழைந்து, அங்கிருந்து கியூபாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
டொமினிகா போலீஸ் கஸ்டடியில் உள்ள மெகுல் சோக்கியை அங்கிருந்து நேரடியாக இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளன. மெகுல் சோக்சி இந்திய குடிமகன், அவர் மிகப்பெரிய குற்றம் செய்திருப்பதால் எங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று இந்தியா கூறி உள்ளது.
இதற்கிடையே மெகுல் சோக்சியின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது டொமினிகா உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, மெகுல் சோக்சி இந்தியாவில் 14000 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் தேடப்படும் நபர் என்பதால், அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட வேண்டும் என டொமினிகா அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையும் படியுங்கள்: மெகுல் சோக்சியை எங்களிடம் ஒப்படையுங்கள் -டொமினிகாவிடம் இந்தியா வேண்டுகோள்
ஆனால், இந்திய அரசியலமைப்பின்படி, சோக்சி இந்திய குடிமகன் அல்ல என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். வெளிநாட்டு குடியுரிமையைப் பெறும் எந்தவொரு நபரும் இந்திய குடிமகன் அந்தஸ்தை தானாகவே இழப்பார் என்று கூறினர். எனவே, அவரை நேரடியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்றும் குறிப்பிட்டனர்.
மெகுல் சோக்சி டொமினிகாவில் சட்டவிரோதமாக நுழைந்தது தொடர்பாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவைப் பொறுத்து, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு மீது இன்று மீண்டும் விசாரணைக்கு வரும்.
இந்நிலையில், டொமினிகாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மெகுல் சோக்சி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக சோக்சியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் தெரிவித்துள்ளார்.