செய்திகள்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு

Published On 2021-05-15 19:14 GMT   |   Update On 2021-05-15 19:14 GMT
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனிடையே ரம்ஜான் பண்டிகையையொட்டி அங்கு 3 நாட்களுக்கு தலீபான்கள் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த முதல் நாளான வியாழக்கிழமை அன்று குண்டூஸ் மற்றும் காந்தஹார் மாகாணங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் அப்பாவி மக்கள் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மசூதியில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர்.

காபூலின் ஷகர்தரா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் அந்த மசூதியின் இமாம் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேசமயம் தலீபான் பயங்கரவாதிகள் தாங்கள் இந்த தாக்குதலை நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த வாரம் காபூலில் உள்ள மகளிர் பள்ளிக்கூடம் அருகே நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஏராளமான மாணவிகள் உள்பட 90 பேர் கொல்லப்பட்டதும், 160-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News