செய்திகள்
இலங்கை தேசியக்கொடி

சீனாவில் தயாரித்த ரெயில்களை இயக்க மாட்டோம் -இலங்கை ரெயில் டிரைவர்கள் முடிவு

Published On 2021-02-05 04:41 GMT   |   Update On 2021-02-05 04:41 GMT
சீனாவில் தயாரிக்கப்பட்ட ரெயில்களை இயக்குவதை புறக்கணிக்க இலங்கை ரெயில் டிரைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கொழும்பு:

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் சீனா வலுவாக காலூன்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை செய்து வருகிறது. சீனாவின் இந்த முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், இலங்கை ரெயில் டிரைவர்களின் முடிவு அமைந்துள்ளது. 

இலங்கையின் ரெயில் என்ஜின் டிரைவர்கள் சங்க செயலாளர் இந்திகா தொடங்கொட சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சீனாவில் தயாரிக்கப்பட்ட ரெயில் வண்டிகள், பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. சீன ரெயில் பெட்டிகளில் பிரேக்குகள் கோளாறாக உள்ளன. பிரேக்குகளை அழுத்தும்போது, நிறுத்தவேண்டிய இடத்தை விட கூடுதல் தூரம் செல்கின்றன. சீனாவில் தயாரிக்கப்பட்ட ரெயில் வண்டிகள் உள்ளூர் தரத்தை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய முறையாக பராமரிக்கப்படவேண்டும். 

சீனாவில் தயாரிக்கப்படும் ரெயில் வண்டிகள் குறித்து எழுப்பப்படும் குறைபாடுகள் தீர்க்கப்படும் வரை என்ஜின் டிரைவர்கள் அந்த ரெயில் வண்டிகளை இயக்குவதை புறக்கணிப்பார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையில் குறைபாடுகள் கொண்ட சீன ரெயில் பெட்டிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ரெயில்வே பொறியியல் துறைக்கு போக்குவரத்து துறை மந்திரி கடந்த செப்டம்பர் மாதம் அறிவுறுத்தி இருந்தார்.

சீன ரெயில் பெட்டிகளில் பிரேக்குகள் கோளாறு காரணமாக சமீபத்திய காலங்களில் கிட்டத்தட்ட 200 விபத்துக்கள் பதிவாகி உள்ளதாக என்ஜின் டிரைவர்கள் சங்கம் கூறி உள்ளது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெயில்களும் இலங்கையில் உள்ளன என்பது குறிப்படத்தக்கது.
Tags:    

Similar News