செய்திகள்
கொலம்பியாவிலும் ஜார்ஜ் பிளாய்ட் போன்ற சம்பவம் - போலீசாரை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை - 9 பேர் பலி
கொலம்பியாவிலும் ஜார்ஜ் பிளாய்ட் போன்ற சம்வம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் உயிரிழந்தனர்.
பகோட்டா:
அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை போலீஸ் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவரின் கழுத்தில் போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து நெரித்ததில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் மாபெரும் போராட்டம் வெடித்தது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், கொலம்பியாவிலும் ஜார்ஜ் பிளாய்ட் போன்ற மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்நாட்டின் தலைநகர் பகோட்டாவின் எங்கடிவா என்ற பகுதியில் கடந்த 9-ம் தேதி இரவு நண்பர்களுடன் சென்றுகொண்டிருந்த 46 வயது நிரம்பிய ஜேவியர் ஆர்டோனிஸ் என்ற நபரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மேலும், அவரை சந்தேகநபராக கருதி கைது செய்ய முற்பட்டனர். இதனால் போலீசாருக்கும் ஜேவியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போலீசாரை ஜேவியரை தரையில் தள்ளி அவரது கழுத்தில் முழங்காலால் அழுத்தினர்.
இதில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது அவர் ‘தயவு நிறுத்துங்கள்’ என கூறினார். ஆனால், தொடர்ந்து போலீசார் கைது
நடவடிக்கையில் குறியாக இருந்தனர்.
இந்த நிகழ்வை ஜேவியரின் நண்பர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். போலீசாரின் கைது நடவடிக்கையின் போது ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மருத்து ஜேவியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து கொலம்பியா முழுவதும் போலீசாருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், ஜேவியரின் உயிரிழப்பிற்கு உரிய நீதி வழங்கவேண்டும் என கூறி நடைபெற்று வரும் போராட்டத்தில் வெடித்த வன்முறையில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
போலீசாரின் துப்பாக்கிச்சூட்டால் தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
ஆனால், 9 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக கொலம்பியாவின் பல்வேறு நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.