செய்திகள்
மாஸ்கோ இந்திய தூதரகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ராஜ்நாத் சிங்
ரஷ்யா சென்றுள்ள பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்திய தூதரகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாஸ்கோ:
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராக ரஷியா வெற்றி பெற்ற 75-வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, சீனா உள்பட 11 நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
இதற்காக இந்திய முப்படைகளை சேர்ந்த 75 வீரர்கள் ஏற்கனவே மாஸ்கோ சென்றுள்ளனர். அவர்கள் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்பார்கள்.
இந்நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று விமானம் மூலம் ரஷ்யா புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், ரஷ்யா சென்றுள்ள பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்திய தூதரகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக மத்திய மந்திரிகள் யாரும் வெளிநாடு செல்லவில்லை. தற்போது தான் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.