செய்திகள்
நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு - இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் விஜய் மல்லையா மனு தாக்கல்
விஜய் மல்லையாவை நாடு கடத்திக்கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து அவர் இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
லண்டன்:
கிங் பிஷர் குழும நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா (64). இவர் இந்தியாவில் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் முறையாக திருப்பிச் செலுத்தாமல், இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார்.
இதற்காக விஜய் மல்லையா மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் இந்திய கோர்ட்டுகளில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளன. ஆனால் இந்த வழக்குகளை சட்டப்படி சந்திப்பதற்கு அவர் இந்தியா வர மறுத்து விட்டார்.
இதையடுத்து அவரை சட்டப்படி இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.
ஆனால் இதற்கு எதிராக விஜய் மல்லையா, லண்டனில் உள்ள இங்கிலாந்து ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஜய் மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யமுடியும். அதற்கு ஐகோர்ட்டு 14 நாட்கள் அவகாசம் அளித்திருந்தது.
இந்நிலையில், இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மல்லையா இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.