செய்திகள்
பர்கினோ பசோ: மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் பலி
பர்கினோ பசோ நாட்டில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒவ்கடங்கு:
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றனர். இதனால், பயங்கரவாத குழுக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் ஷஹீல் பகுதியின் யஹா மாகாணம் பென்சி கிராமத்திற்குள் நேற்று நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அக்கிராமத்தில் இருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 18 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.