செய்திகள்
தாக்குதலில் தனது உறவை இழந்த நபர்

ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலி

Published On 2020-02-11 23:46 GMT   |   Update On 2020-02-11 23:46 GMT
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான், ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. 

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகின்றனர். 

இதற்கிடையில் தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் சமீபகாலமாக அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பல கிராமங்களை மீட்டுவருகின்றனர். இதனால் ராணுவத்திற்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது பயங்கர மோதல்கள் நடைபெற்றுவருகிறது.



இந்நிலையில் அந்நாட்டின் தலைநகரான காபுலில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தை குறிவைத்து நேற்று பயங்கரவாதிகள் தற்கொலைப்ப்படை தாக்குதல் நடத்தினர். 

தனது உடல் முழுவதும் வெடிகுண்டுகளை மறைத்து கொண்டுவந்த பயங்கரவாதி ராணுவ பயிற்சி மையம் அருகே வந்த உடன் அந்த குண்டுகளை வெடிக்கச்செய்தான். இந்த கொடூர தாக்குதலில் ஆப்கான் ராணுவ வீரர்கள் 4 பேரும், பொதுமக்கள் இரண்டு பேரும் என 6 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த பயங்கரவாத அமைப்புகளும் பொறுப்பு ஏற்கவில்லை என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், தலிபான்கள் தான் இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கக்கூடும் என கருத்துக்கள் எழுந்தவண்ணம் உள்ளது.  
Tags:    

Similar News