செய்திகள்
போட்ஸ்வானா நாட்டில் யானைகளை வேட்டையாட அரசு அனுமதி
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் யானைகளை வேட்டையாட சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஏலம் மூலம் லைசென்ஸ் வழங்கப்பட்டது.
கேபரான்:
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் 1 லட்சத்து 30 ஆயிரம் யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக யானைகளை கொண்டுள்ள போட்ஸ்வானாவில், யானைகள் தாக்குவதால் மலைவாழ் மக்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும் விவசாய நிலங்கள் யானைகளால் சேதப்படுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதனால் யானைகளை வேட்டையாட விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அதிபர் கடந்த ஆண்டு நீக்கினார். அதன்பின்னர் யானைகளை வேட்டையாட தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான நடைமுறை தொடங்கியது.
அதன்படி நேற்று நடந்த ஏலத்தில், 7 நிறுவனங்களுக்கு யானைகளை வேட்டையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த ஆண்டு இறுதிக்குள் 272 யானைகளை கொல்ல அந்நாடு திட்டமிட்டுள்ளது.
மனிதர்கள்- வனவிலங்கு மோதலால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு, இந்த வேட்டை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.