செய்திகள்
நேபாளம்: ரிசார்ட்டில் எரிவாயு கசிந்து கேரளாவைச் சேர்ந்த 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி
நேபாளத்தில் ரிசார்ட் ஒன்றின் அறையில் எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் அதில் தங்கியிருந்த 5 குழந்தைகள் உள்பட 8 இந்தியர்கள் பலியாகினர்.
காத்மண்டு:
நேபாளம் நாட்டில் மலைப்பாங்கான பகுதிகளும், அருவிகளும் நிறைய உள்ளன. இயற்கை அழகை ரசிக்க பல்வேறு நாட்டினரும் அங்கு சுற்றுலா செல்வதுண்டு.
இந்நிலையில், விடுமுறையை கொண்டாட நேபாளம் சென்ற இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் எரிவாயு கசிவு காரணமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 15 சுற்றுலாப்பயணிகள் நேபாளத்தின் பிரபல மலை சுற்றுலாத்தளமான போகாராவிற்கு சென்றிருந்தனர். அவர்கள் மகவான்பூர் மாவட்டத்தின் டமான் பகுதியில் உள்ள எவரெஸ்ட் பனொரமா ரிசார்ட்டில் (சொகுசுப் பங்களா) நேற்று இரவு தங்கினர்.
4 அறைகள் முன்பதிவு செய்திருந்த போதிலும், ஒரு அறையில் 8 பேரும், மீதமுள்ள அறையில் மற்ற 7 பேரும் தங்கினர். பொதுவாக குளிரான அப்பகுதிகளில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் அறையை வெதுவெதுப்பாக வைத்திருக்க கேஸ் ஹீட்டர்கள் இருப்பது வழக்கம். ஜன்னல்கள், கதவுகள் அனைத்தும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், அறையில் உள்ள கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் அனைவரும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ரிசார்ட் ஊழியர்கள் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
‘போதிய காற்றோட்டம் இல்லாமையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்திருக்க கூடும். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என போலீசார் தெரிவித்தனர்.