செய்திகள்
நிலநடுக்கத்தில் வீடு இடிந்து கிடக்கும் காட்சி

போர்டோ ரிக்கோவில் 102 ஆண்டுகளில் இல்லாத பயங்கர நிலநடுக்கம்

Published On 2020-01-08 18:39 GMT   |   Update On 2020-01-08 18:39 GMT
போர்டோ ரிக்கோவில் கடந்த 102 ஆண்டுகளில் இல்லாத அளவில் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
சான் ஜூவான்:

கரீபியன் கடலில் உள்ள அமெரிக்க பிராந்தியமான போர்டோ ரிக்கோவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 10 நாட்களில் அங்கு 500 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

இது கடந்த 102 ஆண்டுகளில் போர்டோ ரிக்கோவை தாக்கிய மிக பயங்கரமான நிலநடுக்கம் என கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 73 வயதான முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததோடு மின்நிலையங்களும் சேதம் அடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. மேலும் நிலநடுக்கம் காரணமாக குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக போர்டோ ரிக்கோவின் ஆளுநர் வாண்டா வாஸ்குவெஸ் அங்கு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.
Tags:    

Similar News