செய்திகள்
பிரிட்டன் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஸ்டார்லிங் பறவைகள்
பிரிட்டனின் ஆங்லெசே தீவின் சாலையில் 200க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங் பறவைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
லண்டன்:
பிரிட்டனின் வேல்ஸ் நாட்டில் உள்ளது ஆங்லேசே தீவு. இத்தீவில் உள்ள பாடெர்டென் கிராமத்தின் லின் லில்வென் குளப்பகுதியில் உள்ள சாலையில் நூற்றுக்கணக்கான ஸ்டார்லிங் பறவைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
லின் லில்வென் குளப்பகுதி புதர்வெளிகள் அதிகம் நிறைந்த பகுதியாகும். ஆனால் சாலையின் இருபுறம் உள்ள புதர்வெளிகளில் ஒரு பறவை கூட இறந்த நிலையில் காணப்படவில்லை.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘இது எப்படி நடந்தது என்பது குழப்பமான ஒன்றாக உள்ளது. சாலையில் ஏறக்குறைய 225 ஸ்டார்லிங் பறவைகள் மற்றும் சில சாலையின் ஓரம் உள்ள புல்வெளிகளின் அருகில் இறந்து கிடந்தன. இவை கடந்த செவ்வாய் கிழமை மதியம் இறந்துள்ளன. பறவைகளின் உடல்களை ஆய்வு செய்ய அரசு விலங்கு மற்றும் தாவர சுகாதார அமைப்பின் நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என கூறினர்.
ஸ்டார்லிங் பறவை என்பது ஸ்டர்னிடே பறவைகள் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். ஸ்டார்லிங் பறவைகளில் பெரியவை ஆசியாவில் மைனா என்றழைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.