செய்திகள்
ஆப்கானிஸ்தான் தங்கச்சுரங்கத்தில் விபத்து - 5 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தங்கச்சுரங்கத்தில் உள்ள மேற்பரப்பு இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தானில் உள்ள படக்ஷான் மாகாணத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தங்கச்சுரங்கள் அமைந்துள்ளன. இந்த சுரங்கம் அமைந்துள்ள பகுதி தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு எடுக்கப்படும் தங்கம் வெளிச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், அம்மாகாணத்தில் உள்ள ஒரு தங்கச்சுரங்கத்தில் இன்று 40-க்கும் அதிகமானோர் தங்கத்தை வெட்டி எடுக்கும் வேலையை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கத்தின் மேற்பரப்பில் இருந்த மண் திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களை அப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் மீட்டுள்ளனர். ஆனால், 35-க்கும் அதிகமானோரின் நிலை என்ன என்று தற்போதுவரை தெரியவில்லை.
தலிபான் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதால் ஆப்கானிஸ்தான் அரசு தரப்பில் இருந்து தங்கச்சுரங்க விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.