செய்திகள்
நைஜர் ராணுவ வீரர்கள்

நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 70 ராணுவ வீரர்கள் பலி

Published On 2019-12-12 07:34 GMT   |   Update On 2019-12-12 07:34 GMT
நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் ராணுவ வீரர்கள் 70 பேர் வீர மரணம் அடைந்தனர்.
நியாமி:

ஆப்பிரிக்கா கண்டத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நாடு நைஜர்.  கடந்த சில ஆண்டுகளாகவே மாலி, நைஜர், பர்கினோ பாசோ போன்ற ஒரு சில ஆப்பிரிக்க நாடுகளில் பயங்கரவாதிகள் நடமாட்டமும் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. 

நாட்டின் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை ஒடுக்குவதற்காக, நைஜர் ராணுவம் அண்டை நாடான மாலி ராணுவத்துடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே பிரான்ஸ் நாடு ஆப்பிரிக்க நாடுகளில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு உதவியாக தனது ராணுவ வீரர்களை அந்நாடுகளுக்கு அனுப்பியுள்ளது.

பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் ஒரு சில தினங்களில் பர்கினோ பாசோ நாட்டின் சேஹல் பகுதியில் பிரான்ஸ் நாட்டு ராணுவத்தின் பங்கு குறித்து மேற்கு ஆப்பிரிக்க தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

இந்நிலையில்,  நைஜர் நாட்டின் உவால்லம் பகுதியில் முகாமிட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 வீரர்கள் உயிரிழந்தனர்.

உவால்லம் பகுதிகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இயக்கத்தினர் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று இரவு திடீரென இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், 70 வீரர்கள் உயிரிழந்தாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 அமெரிக்க வீரர்கள் மற்றும் சில நைஜீரிய வீரர்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News