செய்திகள்
ஸ்வீடன் அரச தம்பதிகள் இந்தியா வருகை
ஸ்வீடன் நாட்டு மன்னர் மற்றும் அரசி வரும் டிசம்பர் மாதம் 5, 6 ம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநில முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத்தும், இந்தியாவிற்கான ஸ்வீடன் நாட்டு தூதுவர் க்ளாஸ் மோலினும் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது பேசிய மோலின், ‘ஸ்வீடன் நாட்டு மன்னர் 16-ம் கார்ல் கஸ்டஃப் மற்றும் அரசி சில்வியா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வரும் டிசம்பர் 5ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை தரவுள்ளார்கள்.
தொழில் முனைவோர் 150 பேர் கொண்ட குழுவுடன் வருகை தரும் அரச தம்பதிகள் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். ஹரித்வார் மாவட்டத்தின் சராய் ஜக்ஜித்பூர் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையின் திறப்பு விழாவில் கலந்து கொள்கின்றனர். மேலும் கார்பெட் தேசிய பூங்காவையும் பார்வையிட உள்ளனர்’, என ராவத்திடம் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மருத்துவம், ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் முதலீட்டு சாத்தியங்கள் குறித்து ராவத்துடன் ஸ்வீடன் தூதர் ஆலோசனை நடத்தினார்.