செய்திகள்
பிரான்ஸ் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல் - 13 வீரர்கள் பலி
மாலி நாட்டில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டு 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 வீரர்கள் உயிரிழந்தனர்.
பமாகோ:
மாலி நாட்டின் வடக்கு பகுதியை அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். போன்ற பயங்கரவாதக்குழுக்கள் கடந்த 2012-ம் ஆண்டு தங்கள் கைவசம் கொண்டு வந்தன.
அவர்களை பிரான்ஸ் தலைமையிலான ராணுவத்தினர் விரட்டியடித்தனர். ஆனாலும் மற்ற பகுதிகளில் அவர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், இந்த பயங்கரவாத குழுக்களை முற்றிலும் ஒழிக்க பிரான்ஸ், உள்நாட்டு ராணுவத்துடன் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு எல்லையோரப்பகுதியில் பிரான்ஸ் ராணுவ வீரர்கள் 2 ஹெலிகாப்டர்களில் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு ஹெலிகாப்டர்களும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த பிரான்ஸ் ராணுவ வீரர்கள் 13 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார்.