செய்திகள்
மரியம் ஷெரிப்

பாகிஸ்தான்: கருப்புப் பண பரிமாற்ற வழக்கில் நவாஸ் ஷெரிப் மகளுக்கு ஜாமீன்

Published On 2019-11-04 12:40 GMT   |   Update On 2019-11-04 12:40 GMT
சவுத்ரி சர்க்கரை ஆலை தொடர்பான கருப்புப் பண பரிமாற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள் மரியம் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இஸ்லாமாபாத்:

பனாமா கேட்’ ஊழல் வழக்கில் சிக்கி, பதவியை பறிகொடுத்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, அல்-ஆசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 
சிறையில் இருந்த நவாஸ் ஷெரீப்புக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவ காரணங்களால் 8 வாரம் விடுதலை செய்து பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர் லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், அவன்பீல்ட் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை  விதிக்கப்பட்ட நவாஸ் ஷெரிப் மகள் மரியம் ஷரிப் அந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், சவுத்ரி சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவரை கைது செய்த போலீசார் லாகூர் சிறையில் அடைத்தனர்.



உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் தனது தந்தை நவாஸ் ஷெரிப்பை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதால் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என லாகூர் உயர் நீதிமன்றத்தில் மரியம் நவாஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை கடந்த மாதம் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவரை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதி அலி பக்கர் நஜாபி, மரியம் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News