செய்திகள்
அமெரிக்கா: அடுத்த செமஸ்டருக்கு செல்வதை கொண்டாட ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு- 2 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கல்லூரி மாணவர்கள் தாங்கள் அடுத்த செமஸ்டருக்கு செல்வதை கொண்டாட ஏற்பாடு செய்திருந்த இரவு நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பல்கலைகழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் தாங்கள் அடுத்த செமஸ்டருக்கு செல்வதை கொண்டாட இரவு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அம்மாகாணத்தில் உள்ள கிரீன்வில்லி என்ற பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் இன்று இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் சிதறியடித்து ஓடினர்.
இந்த இரவு நிகழ்ச்சியில் அந்நபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இந்த தாக்குதலுக்கு காரணமான நபரை கண்டுபிடிக்க விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அடிக்கடி இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.