செய்திகள்
ரஷியாவில் ராணுவ வீரர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் சக வீரர்கள் 8 பேர் பலி
ரஷியாவில் ராணுவ வீரர் ஒருவர் தனது சக வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாஸ்கோ:
ரஷிய நாட்டின் கிழக்கு பகுதியில் சிட்டா என்ற மாவட்டம் உள்ளது. அங்கு அந்நாட்டின் முக்கிய ராணுவத்தளம் ஒன்று அமைந்த்துள்ளது.
இந்நிலையில், அந்த தளத்தில் இன்று வழக்கம்போல ராணுவ வீரர்கள் தங்கள் பணிகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் தன்னுடன் பணியாற்றும் சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதை சற்றும் எதிர்பாரத ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சிதறி ஓடினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, அங்கு வந்த மற்ற ராணுவ வீரர்கள் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கைது செய்தனர்.
முதல் கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சனைகளால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக அந்த வீரர் தனது சக வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராணுவ வீரர் ஒருவர் தன்னுடன் பணியாற்றும் சக விரர்கள் மீதே தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் ரஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.