செய்திகள்
நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான்: ஊழல் புகாரில் சிறையில் உள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு ஜாமீன்

Published On 2019-10-25 13:39 GMT   |   Update On 2019-10-25 13:39 GMT
சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல் நிலை மோசமடைந்து வருவதையடுத்து மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
லாகூர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். 3 முறை அந்த பதவியில் இருந்த அவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

நவாஸ் ஷெரீப் மீது 3 ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்குகளில் ஒன்றான அல்அசிசியா ஸ்டீல் மில்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, 69 வயதான நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து இவர் கடந்த 21-ம் தேதி இரவு லாகூர் சர்வீஸஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் லாகூர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு ஜாமீன் வழங்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு நவாஸ் ஷெரீப் சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை தொடர்பான தகவல்களை வரும் 29-ம் தேதி அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News