செய்திகள்
ஹகிபிஸ் புயல்

ஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

Published On 2019-10-14 09:17 GMT   |   Update On 2019-10-14 09:17 GMT
ஜப்பானில் கோரத் தாண்டவம் ஆடிய ஹபிகிஸ் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
டோக்கியோ:

பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருந்தபோதே பலத்த மழை பெய்யத்தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஈஸூ தீபகற்ப பகுதியில் கரையைக் கடந்தது. இதனால் ஜப்பானில் கனமழை பெய்து வருகிறது.

இந்தப் புயலும், பெருமழையும் கிழக்கு ஜப்பானில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மழை வெள்ளம் காரணமாக 42 லட்சம் மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. 14 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்கள், படகுகள், பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புயலின் காரணமாக 12 பேர் காணாமல் போயினர் எனவும் 25 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் இன்று காலை தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 17க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும், 189 மக்கள் காயமடைந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News