செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

‘நோபல் பரிசு நியாயமாக வழங்கப்படுவதில்லை’ - டிரம்ப் வருத்தம்

Published On 2019-09-24 19:42 GMT   |   Update On 2019-09-24 19:42 GMT
நியாயமாக வழங்கப்பட்டால் பல விஷயங்களுக்கு எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்:

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து பேசினார்.

முன்னதாக இருவரும் பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் டிரம்பிடம் “நீங்கள் நோபல் பரிசுக்கு தகுதியானவரா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

நியாயமாக வழங்கப்பட்டால் பல விஷயங்களுக்கு எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்கள் அதை செய்யமாட்டார்கள். அதனால்தான் ஒபாமா ஜனாதிபதியான குறுகிய காலத்திலேயே அவருக்கு நோபல் பரிசு வழங்கினார்கள்.

எதற்காக தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என ஒபாமாவுக்கே தெரியாது. எதற்காக நோபல் பரிசு என்றே தெரியாத இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு ஒபாமாவுடன் உடன்பாடு உள்ளது.

இவ்வாறு கூறினார்.

முன்னதாக கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக வடகொரியா தலைவருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதற்காக டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே மற்றும் நார்வே நாட்டின் எம்.பி.க்கள் இருவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பரிந்துரை செய்தது நினைவுகூரத்தக்கது.
Tags:    

Similar News