செய்திகள்
தாஹிருல் காத்ரி

கட்சி தலைவர் பதவி ராஜினாமா: பாகிஸ்தானின் பிரபல மதகுரு அரசியலுக்கு முழுக்கு

Published On 2019-09-14 12:24 GMT   |   Update On 2019-09-14 12:24 GMT
கனடாவில் வாழும் பாகிஸ்தானின் பிரபல மதகுரு தாஹிருல் காத்ரி தனது பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக இன்று அறிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் மிகப்பிரபலமான மதகுருவாக விளங்கியவர் தாஹிருல் காத்ரி. 1989-ம் ஆண்டில் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய காத்ரி, 2002-ம் ஆண்டில் லாகூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்று எம்.பி.யானார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆட்சிக்கு எதிராக தற்போதைய பிரதமர் இம்ரான் கானுடன் இணைந்து கடந்த 2014-ம் ஆண்டில் இரண்டு மாதங்கள் நீடித்த மிகப்பெரிய போராட்டத்துக்கு இவர் தலைமை தாங்கினார்.



இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தாஹிருல் காத்ரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட ரெய்டுகளை தடுக்க முயன்ற அக்கட்சி தொண்டர்களின் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்
14 பேர் உயிரிழந்தனர், சுமார் 100 பேர் காயமடைந்தனர்.

தற்போது கனடாவில் வாழ்ந்துவரும்  தாஹிருல் காத்ரி(63) தனது பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக அங்கிருந்து வீடியோ செய்தியாக அறிவித்துள்ளார்.

’பாகிஸ்தான் அரசியலில் இருந்தும் அரசியல் செயல்பாடுகளில் இருந்தும் அவாமி தெஹ்ரீக் கட்சி தலைவர் பதவியில் இருந்தும் விலகுகின்றேன். தலைவர் பதவியை எனது மகன்களுக்கு நான் அளிக்கவில்லை. அந்த முடிவை எடுக்கும் அதிகாரத்தை கட்சியிடமே ஒப்படைக்கிறேன்’ என தாஹிருல் காத்ரி குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News