செய்திகள்
டொரியன் புயலில் சிக்கி தரைமட்டமான வீடுகள்

டொரியன் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

Published On 2019-09-07 06:20 GMT   |   Update On 2019-09-07 06:20 GMT
பகாமாஸ் நாட்டில் டொரியன் புயல் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
மார்ஷ் ஹார்பர்:

கரிபியன் பகுதிகளில் மையம் கொண்டிருந்த டொரியன் புயல் கடந்த வாரம் போர்டோ ரிகோ, வெர்ஜின் தீவுகளைக் கடந்து கடந்த வார இறுதியில் பகாமாஸ் நாட்டை கடுமையாக தாக்கியது. இதன் காரணமாக நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள தீவுகளில் இரண்டு நாட்கள் பலத்த காற்றுடன் தொடர்ந்து கன மழை பெய்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. வீடு மற்றும் உடமைகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் அத்யாவசிய பொருட்கள் இல்லாமல் தவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் புயல் மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை இன்று 43 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிலரை காணவில்லை. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

பகாமாஸ் நாட்டை புரட்டிப் போட்ட டொரியன் புயல் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை தாக்கிய. இதனால் அங்கு சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் நியூ இங்கிலாந்தின் தென்கிழக்கே இன்று காலை மையம் கொண்டிருந்த டொரியன் புயல், தற்போது கனடாவின் மத்திய மற்றும் கிழக்கு நோவா ஸ்காட்டியா மாகாணத்தை நோக்கி நகர்வதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு  புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News