செய்திகள்
12 வயது இந்திய சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் - பாகிஸ்தானியர் கைது
துபாயில் டியூசன் சென்ற 12 வயது இந்திய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாகிஸ்தானியரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் வரும் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்கள் பலர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் துபாய் நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் இந்திய தம்பதியினர் வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு 12 வயதில் பெண் குழந்தை உள்ளது.
பள்ளி பயின்று வரும் அந்த சிறுமி டியூசன் செல்வதற்காக ஜூன் 16-ம் தேதி தனது குடியிருப்பின் மேல் தளத்தில் வசிக்கும் டீச்சர் வீட்டிற்கு லிப்டில் சென்றார்.
அப்போது அந்த லிப்டில் இருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவன் அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்துள்ளான். தனக்கு நடந்த கொடுமையை சிறுமி தனது டியூசன் டீச்சரிடம் தெரிவித்ததையடுத்து, அவர் இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, இந்திய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்த பாகிஸ்தானியரை போலீசார் கைது செய்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களைளும் நிறைவடைந்ததையடுத்து வரும் 16-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என துபாய் நீதிமன்றம் அறிவித்துள்ளது.