சிறை பிடித்த கப்பலில் இருந்த 9 இந்திய ஊழியர்களை ஈரான் விடுவித்தது
தெக்ரான்:
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதை தொடர்ந்து 2 நாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ஈரானில் இருந்து சட்ட விரோதமாக கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளால் சிறை பிடிக்கப்படுகிறது.
அதற்கு பதிலடியாக தனக்கு எதிராக செயல்படும் நாடுகளின் எண்ணெய் கப்பல்களை ஈரான் சிறை பிடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி பனாமா நாட்டு கொடியுடன் வந்த எம்.டி.தியா என்ற கப்பலை ஈரான் சிறை பிடித்தது.
இதில் 12 இந்தியர்கள் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டனர். அவர்களின் தீவிர முயற்சியால் தற்போது 9 இந்திய ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 3 பேரையும் மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.
இதற்கு முன்பு ஸ்டெனோ இம்பீரோ என்ற கப்பல் ஈரான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டது. அதில் 18 இந்திய ஊழியர்கள் உள்ளனர். அதே போன்று இங்கிலாந்தின் யூனியன் பிரதேசமான ஜீப்ரால்டர் கடற்படையின் கிரீஸ் 1 என்ற கச்சா எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது.
அதில் 24 இந்திய சிப்பந்திகள் இருந்தனர். ஆக மொத்தம் 42 பேரை ஜிப்ரால்டர் மற்றும் ஈரான் நாடுகள் கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையிலும் இந்திய தூததரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கிரீஸ் கப்பலில் பணிபுரியும் 24 இந்திய ஊழியர்களை அவர்கள் நேரில் சென்று பார்த்தனர்.