செய்திகள்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருகை
இஸ்ரேல் நாட்டின் பிரதமராக நீண்டகாலம் பதவியில் இருக்கும் பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் மோடியை சந்திப்பதற்காக செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேம்:
சுதந்திரத்துக்கு பின்னர் இந்திய வரலாற்றில் முன்னர் எப்போதும் இல்லாத வகையில், யூதர்களின் நாடான இஸ்ரேலுக்கு சென்ற நம் நாட்டின் முதல் பிரதமர் என்ற முறையில் கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜெருசலேம் சென்றபோது டெல் அவிவ் நகரில் உள்ள விமான நிலையத்துக்கு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வந்து அவரை வரவேற்றார்.
அப்போது அவரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் அந்நாட்டின் ஓல்கா கடற்கரையில் நடந்தவாறு ஆலோசனை நடத்திய காட்சிகள் முன்னர் ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் வெகுவாக ஆக்கிரமித்திருந்தன.
அதன் பின்னர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த (2018) ஆண்டில் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக (3+9=12 ஆண்டுகள்) பதவி வகித்த முதல் பிரதமர் என்ற சாதனையை நேற்று (20-ம் தேதி) ஏற்படுத்திய பெஞ்சமின் நேதன்யாகு, பிரதமர் மோடியை சந்திப்பதற்காக செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருவதாக இஸ்ரேல் அரசு வட்டாரங்கள் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் பயணமாக மட்டும் டெல்லி வரும் பெஞ்சமின் நேதன்யாகுவின் நிகழ்ச்சி நிரல்கள் தொடர்பாக இந்திய அரசின் சார்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
எனினும், இஸ்ரேல் நாட்டில் கூட்டணி அரசை ஏற்படுத்த பெஞ்சமின் நேதன்யாகு எடுத்த முயற்சிகள் பின்னடைவை சந்தித்ததால் இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு செப்டம்பர் 17-ம் தேதி மறுதேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவரது டெல்லி வருகை சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.