செய்திகள்

விருந்து நிகழ்ச்சியில் பெண்ணை தாக்கிய பிரிட்டன் மந்திரி பதவி நீக்கம்

Published On 2019-06-21 12:22 GMT   |   Update On 2019-06-21 12:47 GMT
பருவநிலை மாற்றத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை சேர்ந்த பெண்ணைத் தாக்கி, விருந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிய பிரிட்டன் மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
லண்டன்:

பிரிட்டன் நாட்டில் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக சில பசுமை காவலர்கள் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், லண்டன் நகரில் உள்ள மேன்ஷன் ஹவுஸ் விடுதியில் நடைபெற்ற ஒரு விருந்து நிகழ்ச்சியில் பிரிட்டன் நிதி மந்திரி பிலிப் ஹாம்மன்ட் மற்றும் வெளியுறவுத்துறை இணை மந்திரி மார்க் பீல்ட் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். 

இந்த விருந்தின்போது பசுமை காவலர்கள் இயக்கத்தை சேர்ந்த ஒரு பெண் பிலிப் ஹாம்மன்ட் பேசிக் கொண்டிருந்த மேடையின் அருகே செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதை கவனித்த வெளியுறவுத்துறை இணை மந்திரி மார்க் பீல்ட், உடனடியாக அந்தப் பெண்ணின் மீது பாய்ந்தார். பின்னால் இருந்து அவரது கரங்களை பிடித்தவாறு அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக கழுத்தை பிடித்து விருந்து அறையில் இருந்து வெளியே தள்ளும் காட்சிகளை லண்டன் ஊடகங்கள் வெளியிட்டன.

பொறுப்புள்ள ஒரு மந்திரியின் நாகரிகமற்ற இந்த செயலுக்கு லண்டன் நகர மேயர் சாதிக் கான் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, மார்க் பீல்ட் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே அலுவலகம் இன்று அறிவித்துள்ளது. அவர் மீதான விசாரணைக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News