செய்திகள்

ரஷிய ஏவுகணை குறித்து முடிவு எடுக்க துருக்கிக்கு அமெரிக்கா திடீர் கெடு

Published On 2019-06-09 21:10 GMT   |   Update On 2019-06-09 21:10 GMT
ரஷிய ஏவுகணை குறித்து முடிவு எடுக்க துருக்கிக்கு அமெரிக்கா திடீர் கெடு விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்க ராணுவ மந்திரி பொறுப்பு வகிக்கும் பேட்ரிக் ஷனகன், துருக்கி நாட்டின் ராணுவ மந்திரி ஹூலுசி அகாருக்கு திடீரென ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர், “அமெரிக்காவின் அதிநவீன எப்-35 போர் விமானங்களையும், ரஷியாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளையும் துருக்கி ஒரு சேரப்பெற முடியாது. இந்த இரண்டில் துருக்கிக்கு எது வேண்டும் என்பதை ஜூலை மாதத்துக்குள் நீங்கள் முடிவு செய்ய வேண்டும்” என கூறி உள்ளார்.

அமெரிக்கா இப்படி கெடு விதித்திருப்பது துருக்கிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேட்டோ நேச நாடுகளான அமெரிக்காவும், துருக்கியும் ரஷியாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு பிரச்சினையில் ஏற்கனவே சிக்கலுக்கு ஆளாகி உள்ளன.

ரஷியாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு, நேட்டோ பாதுகாப்பு அமைப்பு முறைகளுக்கு எதிரானது, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று அமெரிக்கா கூறுகிறது. மேலும் ரஷியாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புக்கு பதிலாக தனது நாட்டின் பேட்ரியாட் போர் விமான ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு முறையை வாங்குமாறு துருக்கியை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்காவின் 100 அதிநவீன எப்-35 போர் விமானங்களை வாங்குவதற்கு துருக்கி ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதற்காக பெரும் முதலீடும் செய்துள்ளது.

இந்த நிலையில் ரஷியாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளை கையாள்வது தொடர்பாக பயிற்சி பெற துருக்கி தனது வீரர்களை ரஷியா அனுப்பி உள்ளது.

இந்த நிலையில்தான் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்கக்கூடாது என்று கிடுக்கிப்பிடி போட்டுத்தான் இப்போது அமெரிக்க ராணுவ மந்திரி, துருக்கி ராணுவ மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News