செய்திகள்

லிபியா தலைநகரில் ஒரு வாரம் சண்டை நிறுத்தம்- ஐநா வேண்டுகோள்

Published On 2019-05-06 06:12 GMT   |   Update On 2019-05-06 06:12 GMT
லிபியா தலைநகர் திரிபோலியில் இன்று முதல் ஒரு வார காலம் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளும்படி ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. #LibyaClashes #Truce #UN
திரிபோலி:

லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி கடாபி, 2011ம் ஆண்டு கொல்லப்பட்டதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

அரசுப் படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த சண்டையில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2000 பேர் காயமடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியேறி உள்ளனர். 



இந்நிலையில், புனித ரமலான் மாதம் தொடங்கியிருப்பதால், மனிதாபிமான உதவிகளை தடங்கல் இன்றி வழங்குவதற்காகவும், பொதுமக்கள் சுதந்திரமாக இருப்பதை உறுதி செய்யவும் திரிபோலியில் இன்று முதல் ஒரு வார காலம் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளும்படி ஐநா அழைப்பு விடுத்துள்ளது.

இந்த ஒரு வார காலத்தில் கைதிகளையும் சண்டையில் இறந்தவர்களின் உடல்களையும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் ஐநா கூறியுள்ளது. #LibyaClashes #Truce #UN 
Tags:    

Similar News