செய்திகள்

ஒபாமாகேர் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2018-12-15 14:00 GMT   |   Update On 2018-12-15 14:00 GMT
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டுவந்த ஒபாமாகேர் மருத்துவ காப்பீடு திட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என டெக்சாஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #Texasjudge #Obamacare
வாஷிங்டன்:

அமெரிக்காவில் வாழும் நடுத்தர வர்க்கத்தினர் பயனடையும் வகையில் நோயாளி காப்பு மற்றும் கவனிப்பு சட்டம் (Patient Protection and Affordable Care Act, PPACA) என்ற திட்டத்தை முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடந்த 2010-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார்.

இந்த திட்டம் பரவலாக ‘ஒபாமாகேர்’ திட்டம் என்று அந்நாட்டவர்களால் அழைக்கப்படுகிறது. சுமார் 5 கோடி மக்கள் பலனடையும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு முன்னர் எதிர்ப்பு தெரிவித்தும் இதுதொடர்பாக ஒபாமா அரசு இயற்றிய சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் சிலர்  வழக்குத் தொடர்ந்தனர் 

இந்த சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டில் தீர்ப்பளித்திருந்தது. 

ஒபாமாவுக்கு பின்னர் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், பதவி ஏற்ற பின்னர் முதல் வேலையாக இந்த ஒபாமாகேர் திட்டத்தை ஒழிப்பதற்கான உத்தரவில் கையொப்பமிட்டார். 

இந்நிலையில், இதுதொடர்பாக டெக்சாஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள நீதிபதி ஒபாமாகேர் திட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பானது, செல்லத்தக்கதல்ல என தீர்ப்பளித்துள்ளார்.

இந்த திட்டத்தில் இணையாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளதை  சுட்டிக்காட்டி நீதிபதி  ரீட் ஓ கான்னோர் அளித்துள்ள இந்த தீர்ப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு அமெரிக்காவுக்கு மிக உயர்வான செய்தியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #Texasjudge #Obamacare 
Tags:    

Similar News