செய்திகள்

சோமாலியாவில் அடுத்தடுத்து தற்கொலைப் படை தாக்குதல்- 14 பேர் உயிரிழப்பு

Published On 2018-10-14 03:03 GMT   |   Update On 2018-10-14 03:03 GMT
சோமாலியாவில் ஓட்டல்களை குறிவைத்து அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். #SomaliaSuicideBlasts #Somalia
மொகடிஷு:

சோமாலியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பே பிராந்தியத்தில் நேற்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் இரண்டு இடங்களில்  தாக்குதல் நடத்தினர். பாய்டோவா நகரில் உள்ள பிலன் ஓட்டல் மற்றும் பத்ரி ஓட்டலுக்குள் திடீரென புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஓட்டலுக்கு சாப்பிட வந்த பொதுமக்கள் ஆவர்.

இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு, சோமாலியாவிலும் கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

சோமாலியாவில் 30 ஆண்டுகளாக பாதுகாப்பற்ற சூழ்நிலை, தலைவிரித்தாடும் வன்முறை மற்றும் அரசியல் குழப்பம் நிலவுகிறது. அரசுப் படைகளுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #SomaliaSuicideBlasts #Somalia
Tags:    

Similar News