செய்திகள்
ஹைதியில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி என தகவல்
கரீபியன் கடற்பகுதியில் உள்ள ஹைதி தீவில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், கட்டிடங்கள் இடிந்து 11 பேர் வரை பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #HaitiEarthquake
போர்ட் ஆப் பிரின்ஸ்:
கரீபியன் கடற்பகுதியில் உள்ள ஹைதி நாட்டில் வடமேற்கே இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இது வடக்கு கடலோரத்தின் வடமேற்கே 12 மைல்கள் தொலைவில் 7.3 மைல்கள் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ் லேசான அளவில் நிலநடுக்கத்தினை உணர்ந்துள்ளது. போர்ட் டி பெய்க்ஸ், கிராஸ் மோர்னி, சான்சால்ம் மற்றும் டர்டில் தீவு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில், பிளைசான்ஸ் பகுதியிலுள்ள புனித மைக்கேல் சர்ச்சும் சேதமடைந்து உள்ளது.
இந்நிலநடுக்கத்திற்கு 11 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.