செய்திகள்

சவுதி அரேபியாவில் மன்னர் அரண்மனை மீது பறந்த ஆளில்லா விமானம் சுடப்பட்டது

Published On 2018-04-22 05:32 GMT   |   Update On 2018-04-22 05:32 GMT
சவுதி அரேபியாவில் தலைநகர் ரியாத்தில் மன்னர் சல்மானுக்கு சொந்தமான அரண்மனை மீது பறந்த ஆளில்லா விமானத்தை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
ரியாத்:

சவுதி அரேபியாவில் தலைநகர் ரியாத்தில் மன்னர் சல்மானுக்கு சொந்தமான அரண்மனை உள்ளது. அதன் அருகே அல்-கொஷாமா பகுதி உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் அரண்மனை மீது ஆளில்லா விமானம் (‘டிரோன்’) பறந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

பின்னர் அந்த ஆளில்லா விமானத்தை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தகவல் டி.வி.யில் வெளியிடப்பட்டது. சிறிய ரக பொம்மை ஆளில்லா விமானத்தை தடை செய்யப்பட்ட பகுதிக்குள் யாரோ ரிமோட் கண்ட்ரோல் மூலம் பறக்க விட்டு இருந்ததாகவும் அது சுடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஏமன் அரசுக்கு ஆதரவாக செயல்படுவதால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தொடர்ந்து ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த ஆளில்லா பொம்மை விமானத்தை அவர்கள் பறக்க விட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News