செய்திகள்

சிரியா போர்- 2 வாரத்தில் 800 பேர் உயிரிழப்பு

Published On 2018-03-08 07:14 GMT   |   Update On 2018-03-08 07:14 GMT
சிரியா போரில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 800 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. தொடர்ந்து போர் நடப்பதால் மக்கள் பெரும் துயரத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.
டமாஸ்கஸ்:

சிரியாவில் 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கிழக்கு கவுட்டா நகரம் புரட்சி படையினரிடம் உள்ளது. அதை மீட்பதற்காக சிரியா ராணுவம் அந்த நகரை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.

இடைவிடாமல் குண்டு வீச்சும், பீரங்கி தாக்குதலும் நடத்தப்படுகிறது. இதில் சிக்கி ஏராளமான குழந்தைகள் உயிர் இழந்தனர்.

இது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனாலும், தொடர்ந்து அங்கு தாக்குதல் நடந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் 800 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கானோர் குழந்தைகள்.

புரட்சிப் படையினரிடம் உள்ள இந்த நகரில் 3-ல் ஒரு பகுதியை ராணுவம் கைப்பற்றி விட்டதாக அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து போர் நடப்பதால் மக்கள் பெரும் துயரத்தில் சிக்கி தவிக்கிறார்கள். #tamilnews

Tags:    

Similar News