செய்திகள்

குல்பூஷன் ஜாதவ் விவகாரம்: இந்தியா, பாகிஸ்தானுக்கு கால அவகாசம் - சர்வதேச கோர்ட் உத்தரவு

Published On 2018-01-23 18:27 GMT   |   Update On 2018-01-23 18:27 GMT
குல்பூஷன் ஜாதவ் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்கள் தரப்பு வாதங்களை தாக்கல் செய்ய சர்வதேச கோர்ட் கால அவகாசம் கொடுத்துள்ளது. #KulbhushanJadhav #India #Pakistan
திஹோக்:

குல்பூஷன் ஜாதவ் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்கள் தரப்பு வாதங்களை தாக்கல் செய்ய சர்வதேச கோர்ட் கால அவகாசம் கொடுத்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறி அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், அவருக்கு தூதரக உதவிகள் மறுக்கப்பட்ட நிலையில், அவரது தண்டனையை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் தீர்ப்பு வரும்வரை குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மறுவிசாரணை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால் அந்த மனுவை சர்வதேச கோர்ட் நிராகரித்தது.

இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவை, அவரது தாயாரும், மனைவியும் இஸ்லாமாபாத்துக்கு சென்று பார்த்தனர்.

இந்நிலையில், குல்பூஷன் ஜாதவ் வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு சர்வதேச கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சர்வதேச கோர்ட் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் இருநாடுகளும் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும். ஏப்ரல் 17-ம் தேதி இந்தியா தனது எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யவேண்டும் எனவும், ஜூலை 17-ம் தேதி பாகிஸ்தான் தனது எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யவேண்டும் எனவும் அவகாசம் அளித்துள்ளது.  #KulbhushanJadhav #India #Pakistan #tamilnews 
Tags:    

Similar News